என்ன தவம் செய்து விட்டேன் – 25 - புவனேஸ்வரி கலைச்செல்வி
" ஹாய் ..குட் மார்னிங் " இதழில் புன்னகை தவழ உற்சாகமாய் மருத்துவமனையின் வளாகத்தினுள் நுழைந்தான் சந்தோஷ் . மருத்துவமனையில் ஒட்டி இருந்த அந்த பூங்காவில் அமர்ந்திருந்தாள் வானதி ..
" வெரி குட் மார்னிங் சந்தோஷ் .. என்ன சீக்கிரமா வந்துட்ட ?"
" ம்ம்ம் நீ இங்கதான் இருப்பன்னு தெரியும் ..அதான் ஓடோடி வந்துட்டேன் "
" ஹே தேங்க்ஸ் "
" ப்ரண்ட்ஸ்குள்ள என்ன தேங்க்ஸ் வானதி ? உன் ஆளு கண் முழிச்சதும் இதை சொல்லி நியாயம் கேட்குறேன் பாரு " என்றான் அவன் மிரட்டும் தொனியில் .. வானதியின் முகமோ சட்டென வாடியது ..
" என்ன ஆச்சு வானதி ?"
" இரண்டு நாளாச்சு சந்தோஷ் .. இன்னும் ரெண்டு பேரும் கண்விழிக்கல "
" டாக்டர் தான் நல்ல இம்ப்ரூவ்மண்ட் இருக்கு .. பயப்பட வேணாம்னு சொன்னாங்க தானே வானதி .. இப்போ நாம அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கணுமே தவிர இப்படி கவலை பட கூடாது " என்றான் சந்தோஷ் .. அவன் முகத்தையே கூர்ந்து நோக்கினாள் வானதி .. அவனுக்கும்தான் கவலைகள் இருந்தன .. கண்களில் ஒளியில்லாமல் , முகத்தில் பொலிவு இல்லாமல் , நான்கு நாள் தாடியுடன் இருந்தான் .. எனினும் அவன் வார்த்தையில் அத்தனை நம்பிக்கை .. அது அவனுக்காக நம்பிக்கை மட்டும் அல்ல ..தனக்காகத்தான் அவன் இத்தனை நம்பிக்கையாய் பேசுகிறான் என்பதை உணர்ந்துகொண்டாள் வானதி .. அந்த உணர்ந்தலே அவளை புன்னகைக்கவும் வைத்தது ..
" ஹே, என்னடா அமைதியாகிட்ட? என்னையே பார்த்தா என்ன அர்த்தம் ?"
" இல்ல ஒரு விஷயம் மனசுல தோணிச்சு ..அதான் " என்றாள் அவள் ..
" அப்படி என்ன தோணிச்சுன்னு சொன்னா, நானும் சந்தோஷப்படுவேன் ல ?"
" அதுவா .... எப்படி அருளும் சத்யாவும் நல்ல ப்ரண்ட்ஸா இருக்காங்களோ , அதே மாதிரி நாமளும் ப்ரண்ட்ஸா ஆகணும்னு விதியோ ? அதுனாலத்தான் இதெல்லாம் நடக்குதோ ?"
" ஏன் அப்படி சொல்லுற ?"
" ஆமா , இந்த மாதிரி சிட்டிவேஷன் வரலைன்னா, சாஹித்யாவோட கணவரா மட்டும்தான் உன்னை பார்த்துருப்பேன் .. ஒரு மரியாதை இருந்திருக்கும் .. ஆனா நெருக்கம் வந்திருக்காது .. ஆனா இப்போ நல்ல நண்பன் கிடைச்ச மாதிரி இருக்கு " என்று அவள் கூறவும் புன்னகைத்தான் சந்தோஷ் ..
" என்ன சிரிக்கிற ?"
" இல்ல , நீ எனக்குள்ள ஒரு நண்பனை பார்த்த மாதிரி , நானும் என் தோழியை பார்த்துட்டேன் ..அதான் சிரிச்சேன் " என்றான் சந்தோஷ் ..
" சரி கையில என்ன ?"
" உனக்குதான் காபி கொண்டுவந்தேன் .. நீ எதுவும் சாப்டுருக்க மாட்டன்னு அண்ணிதான் காபி கொடுத்து அனுப்பினாங்க "
" என்ன சந்தோஷ் இது ? அவங்களுக்கு இன்னும் ரெண்டு நாளில் வலி வந்துரும்னு டாக்டர் சொல்லிருக்காங்கல ? இந்த நேரத்துல இப்படி ஏன் வேலை செய்ய விடுறிங்க ? சுபாஷ் எப்படி விட்டாரு ?"
" ஹெலோ ஹெலோ ... மேடம் .. நான் அண்ணின்னு சொன்னது , கவிதா அண்ணியை .. " என்று அவன் கூறவும் அசடு வழிந்தாள் அவள் .
" ம்ம்ம் சரி உள்ள போகலாமா ? " - வானதி
" நீ போ ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு !"
" சத்யாவை பார்க்கலையா ?"
" ம்ம்ம் அவ கண் விழிச்சதும் பார்க்குறேன் "
" அவளை பார்த்துட்டு போக முடியாத அளவுக்கு என்ன முக்கியமான வேலை ?"
" அது சஸ்பென்ஸ் ... நீ விட்டா கேள்வி கேட்டுட்டே இருப்ப .. நான் எஸ்கேப் ஆகுறேன் " என்றபடி ஓடியே போனான் சந்தோஷ் ..
" நீ சொல்லுற பேச்சை கேட்க மாட்டியா சைந்தவி " என்று அதட்டல் போட்டான் சுபாஷ் .. அவன் அதட்டவும் கண்ணீரை அடக்கி கொண்டு அமைதியாய் நின்ற மருமகளை பார்க்க பாவமாய் ஜானகிக்கு ..
" டேய், அறிவு கெட்டவனே, ஏன்டா புள்ளதாச்சி பெண்ணை அழ வைக்கிற ?"
" சும்மா இருங்க அம்மா .. இவ பண்ணுறது மட்டும் நல்லாவா இருக்கு ? இந்த நேரத்துல சத்யாவை பார்த்தே தீருவேன்னு அடம்பிடிச்சா என்ன அர்த்தம் ?"
" அதே ஹாஸ்பிட்டலுக்கு இன்னைக்கோ நாளைக்கோ நான் போயிதானே ஆகணும் சுபாஷ் ? அப்பறம் என்ன ? எனக்கு அவளை பார்க்கணும் ப்ளீஸ் " என்றாள் சைந்தவி மீண்டும் .. இப்படியே கணவனும் மனைவியும் வாதிட்டு கொண்டே போக, இறுதியில் ஜெயித்தது என்னவோ சைந்தவிதான் .. பெருமூச்சுடன் தோல்வியை ஒப்பு கொண்டவன் போல அவள் எதிரில் அமர்ந்தான் அவன் ..
" ஹும்கும் .. இதுக்கு தான் இவ்வளவு சீன் ஆ ?" என்று வாய்விட்டே கேட்டு சைந்தவி சிரிக்க , அவள் செவியை திருகினான் அவன் ..