04. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி
இன்று காலையில் விழிக்கும் போதே மனம் துள்ளலாக உணர்ந்தது மனோஹரிக்கு. அவளது அனலிஸ்ட் மூளைக்கு புதிதாக புரிந்த ஒரு விஷயமே அதற்கு காரணம். அவளுக்குள் ஒரு ப்ளான்.
வேக வேகமாக கிளம்பி வந்தவள் டைனிங் டேபிளில் பேப்பர் படித்தபடியே எதை சாப்பிடுகிறோம் என தெரியாமலே சாப்பிட்டுக் கொண்டிருந்த அண்ணனுக்கு அடுத்து அமர்ந்தாள். வழக்கமாக அப்பாவுக்கு அடுத்து தான் உட்காருவாள். இப்பொழுது அப்பா நிமிர்ந்து இவளை ஒரு பார்வை பார்த்தார். பின் தன் தட்டிலிருந்த சாப்பாட்டைப் பார்த்து குனிந்தவர் “மனோ இன்னைக்கு உன்னை ட்ராப் பண்ண அகதன் வரணுமா என்ன? “ என்றார்.
இதுதான் மனோஹரியின் அப்பா….எப்போதும் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்.
“அதுப்பா இன்னைக்கு ஒரு நாள்….அப்றம் நானே போய்ருவேன்….” இவள் தன் கண்ணை அண்ணன் மீது வைத்துக் கொண்டே பதில் சொன்னாள்.
க்ளாக்கை நிமிர்ந்து பார்த்த அவளது அப்பா தெய்வீகன் “நீ இப்ப கெஞ்ச ஆரம்பிச்சா கூட இவன் காதுல விழுந்து கிளம்பிச் சேர லேட்டாகிடுமே” என்றவர்
“அகதா….மனோக்கு உன்ட்ட எனக்கு தெரியாம எதோ பேச வேண்டிய இருக்குதாம்….இன்னைக்கு நீ அவளை ஆஃபீஸில் ட்ராப் பண்ணேன்” என்றார் இவள் மனதை படித்தவர் போல்.
சட்டென பேப்பரை விட்டு தலையை வெளியே எடுத்தான் அண்ணன். தங்கையோ “அப்பா” என்றாள் உரிமையும் சிணுங்கலுமாக….
“பாரு நெருப்பு கோழி நிமிர்ந்து பார்க்ற மாதிரி உன் அண்ணன் தலைய வெளிய நீட்டிட்டான் பாரு….இப்ப அவன்ட்ட சொல்லு விஷயத்தை….மண்டையில் ஏறும்” என்றார். அப்பா புரிந்து சொல்கிறாரா இல்லை நிஜமாகவே அகதன் கவனத்தை இவள் பக்கம் திருப்பத்தான் சொல்கிறாரா என இவளுக்குத்தான் புரியவில்லை.
அகதன் இப்படி பேப்பரும் கையுமாக சாப்பிடும் போது எதை கேட்டாலும் இல்லை என்ற பதில் தான் வரும்….. ஏன்னா நாம என்ன பேசுறோம்னு சார் மண்டைக்குள்ள போயிருக்கவே போயிருக்காது….. வழக்கமா இந்த மாதிரி நேரத்துல மனுஷங்க பொதுவா ஆமா சாமி சொல்றதுதான் வழக்கம். ஆனால் அகதன் மனோக்கு அண்ணனாச்சே……முன்னெச்சரிக்கையா நோ சொல்லி வச்சுடுவார்…. ஆக இந்த நேரத்தில் எந்த ரிக்வெஸ்ட் வைக்கும் முன்னும் அவனது முழு கவனத்தை பேப்பரைவிட்டு பிடுங்கி வெளிய எடுக்க வேண்டியது அவசியம். ஆனால் அது அவ்ளவு ஈசி கிடையாது.
பட் பையன் அப்பாட்ட எப்பவுமே அலர்ட் பார்ட்டி….அதனால் தான் அப்பா இப்படி சொல்லி மகன் கவனத்தை மகள் பக்கம் திருப்பினாரா? இல்லை உண்மையில் இவள் அப்பாவுக்கு தெரியாமல் அண்ணனிடம் விஷயம் சொல்ல விரும்புகிறாள் எனபதையும் புரிந்து கொண்டாரா?
சரி எப்படினாலும் இதெல்லாம் டெம்ரரிதான் அப்பாட்ட விஷயத்தை சொல்றப்ப இதுக்கும் விளக்கம் கேட்டுகலாம்…. அப்பாவிடம் எதையும் மறைக்கும் பழக்கம் மனோஹரிக்கு கிடையாது…அதற்காக ஆன் த ஸ்பாட் அப்படியே அனைத்தையும் அள்ளி சிதறுவதும் கிடையாது…..அதற்கான நேரத்தில் அப்பப்ப எல்லாவற்றையும் டீடெய்லாய் அப்பாவிடம் பேசுவாள்.
சட்டென ‘அப்ப மித்ரனைப் பத்தி அப்பாட்ட எப்ப பேசுவ?’ என்றது மனது. ஒரே நேரத்தில் ஒரு சில்லென்ற அருவியும்…ஒரு சூடான தென்றலும்….எங்கோ உதிக்கும் பெண்மையும் அதை ஏறி அடக்கும் பயமும் அவளுள்….இரு கன்னம் கொள்ளும் வெம்மைக்கு பேரென்ன? வெளியே விக்கியது இவளுக்கு…..
மனக்கண்ணில் வாய்விட்டு சிரித்தான் மித்ரன். நேற்று ‘பிஸ்டல் இன்னும் என்ட்டதான் இருக்குது’ என்ற இவள் வார்த்தைக்கு அவன் சிரித்த சிரிப்பின் காட்சி அது…. அப்பொழுது அவனைப் பார்க்க வேண்டும் என்று ஒரு மனதும் பார்க்காதே என்ற மறுநிலையையும் போட்டி போட அவள் அவனை திரும்பிப் பார்த்த ஞாபகம்…. இப்படி இவள் யார் முன்பாவது எதற்காகவாவது ரெண்டு பட்டிருக்கிறாளா எப்போதாவது?
முதல் நாள் அந்த நைட் இன்சிடென்டையும் இன்டர்வியூ அன்று அவனை பார்த்த அந்த நிகழ்வையும் அவள் வீட்டிற்கு வரவும் அப்பாவிடம் சொல்லாததற்கு காரணம் அப்பா எதுவும் இவள் சேஃப்டிய நினச்சு பயந்துடக் கூடாதேன்றது தான்…ஆனால் மறுநாள் அவனை ஆஃபீஸில் பார்த்ததிலிருந்து நடந்தவைகளை ஏன் சொல்லவில்லை?
“இந்தா தண்ணி குடிச்சுட்டு யோசி….” அப்பாவின் வார்த்தைகளில் சூழ்நிலை புரிய தண்ணீரை குடித்துவிட்டு சாப்பாட்டு தட்டிற்குள் பார்வையை பதித்துக் கொண்டாள்.
“நீ சாப்டு மகி குட்டி அதுக்குள்ள நான் ரெடி ஆகிடுறேன்…” அகதன் தான். அவனது மகி குட்டி சொல்லும் சேதி பல….அண்ணா கெஞ்சுறான்னு அர்த்தம்…அதாவது அவன் லவ் மேட்டர் ரிலேட்டடா இவ பேசப் போறான்னு அவன் நினைக்கிறான்….
இப்பொழுது மனோ மனம் அண்ணனின் காதல் கதைக்கு தாவுகிறது….பின் அதற்குள் முங்கியும் போனது.
ஆன் த வே பைக்கில் வரும் போது கேட்டான் அகதன் “ஏன் மகி…..இன்னும் கொஞ்சம்னா அப்பாட்டா மாட்டிவிட்றுப்ப போல….? என்ன விஷயம் பேசனும் அவளைப் பத்தி…?”