09. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்
அனு பதில் எதுவும் கூறாமல் தன் மோதிர விரலை உயர்த்திக் காட்டினாள். அதில் திபக் அவளுக்கு அணிவித்த தங்க மோதிரம் தக தக வென்று மின்னியது.
மோதிரத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உரைந்து சிலை போல் நின்றிருந்தான் விஷ்ணு. அதற்கு மேல் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர் திவ்யாவும், அனுவும். நடந்து சென்று பஸ் ஏறும் வரை விஷ்ணுவை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள் அனு. அவனைப் பார்ப்பதற்கே அவளுக்குப் பாவமாய் இருந்தது.
ஆபிஸ் பஸ்சில் ஏறிய பிறகு “ஏண்டீ அவரிடம் அப்படிப் பேசினே, பாவம் அவர், முகம் எப்படி வாடி போச்சினு பார்த்தியா?” திவ்யாவை பார்த்துக் கேட்டாள் அனு.
“என்னது அவரா? அடி பாவி உனக்காகத் தான் டீ பேசினேன். நேற்று அவ்வளவு நேரம் புலம்பி தீர்த்தே, இப்போ என்னனா இப்படி பேசுறே. எனக்கு இது தேவைதான் டீ” நக்கல் கலந்த கோபத்தோடு கேட்டாள் திவ்யா.
“கோவிச்சிகாத திவி, அவனிடம் போய் ஏன் திருமணம், மூனு மாசம் என்று எல்லாம் சொல்றே அதைத் தான் கேட்டேன்” தன் தோழியை சமாளிப்பதற்காக் கூறினாள் அனு.
“எல்லாம் ஒரு காரணத்தோடுதான் அப்படிச் சொன்னேன், இனி அவன் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டான், ஃப்ரீயா விடு” திவ்யா அனுவிற்கு பதில் அளித்தாள்.
“என்ன காரணம் திவி” காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள் அனு.
“அது உனக்குத் தெரியவேண்டாம் அனு, தெரிந்தால் உன் குழப்பம் இன்னும் அதிகம் தான் ஆகும். என்னை இந்த விஷயத்தில் நம்பு. அவன் இனி உன் பின்னால் வரமாட்டான். ஸோ அவனைப் பற்றி கவலைப் படுவதை விட்டுவிட்டு நீ உன் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கப் பார்” கூறிவிட்டு அதோடு பேச்சை நிறுத்தினாள் திவ்யா.
திவ்யா செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பது அனுவிற்கு தெரியும், அதனால் அந்தப் பேச்சை நிறுத்தினாள் அனு.
திவ்யாவின் காரணம் இதுதான். விஷ்ணு பார்ப்பதற்கு நல்லவனாகவே தெரிந்தான். அவன் தயங்குவதில் இருந்து அவன் என்ன கூற வந்தான் என்பதைக் கணித்துவிட்டாள் திவ்யா. அவன் தன் காதலைக் கூறியிருந்தாள் அனு மேலும் குழப்பத்திற்குத்தான் ஆள் ஆவாள் என்பதும் திவ்யாவிற்கு தெரியும். அந்த வீண் குழப்பத்தைச் சமாளிக்கவே அனுவின் கல்யாணத்தைப் பற்றி விஷ்ணுவிடம் கூறினாள் திவ்யா. அவள் எதிர் பார்த்ததைப் போலவேதான் விஷ்ணுவும் நடந்து கொண்டான்.
ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பஸ் ஸ்டாப் பெஞ்சில் அமர்ந்திருந்தான் விஷ்ணு. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்ணீர் விட்டு அழுவதா? கோப பட்டுத் திட்டுவதா? எதைச் செய்வதென்றே அவனுக்கு விளங்கவில்லை.
தோல்வியோ அல்லது இது போல் ஏமாற்றமோ அவனுக்குப் புதிதல்ல. இதுவே வேரொரு சமயம் அல்லது வேரொரு விஷயமாக இருந்திருந்தால் அவன் இவ்வளவு உடைத்திருக்க மாட்டான். எமனைச் சந்தித்து விட்டு வந்த பிறகு அவன் மனதில் ஒரு புது தெம்பும், நம்பிக்கையும் பிறந்திருந்தது. அது களைந்ததைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவன் வழக்கம்போல் ஆகாயத்தைப் பார்த்து கடவுளை திட்டத் தொடங்கிய போது அவனுக்கு எமன் கூறியது நினைவுக்கு வந்தது “ பூமியில் இருக்கும் இந்த 90 நாட்களும் நீ எங்களை வணங்கவும் தேவையில்லை அதேபோல் திட்டவும் கூடாது”. உடனே திட்டுவதை நிறுத்திக் கொண்டான். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிரமை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள அவனது மனம் எவ்வளவோ போராடியது. மீண்டும் மீண்டும் திவ்யா அனுவிற்கு திருமணம் என்று கூறிய அந்த வார்த்தைதான் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இதுவரை தனக்கு யாரும் இல்லை என்பது விஷ்ணுவிற்கு பெரியதாக தெரியவில்லை, ஆனால் இப்போது அவன் உள்ளம் அதற்கு ஏங்கியது. இந்தச் சமயத்தில் ஒரு தாய் மடி இருந்திருந்தால் அவளிடம் சொல்லி அழுதிருக்கலாம், அல்லது ஒரு உயிர் நண்பன் இருந்திருந்தால் அவன் தோலில் சாய்ந்து புலம்பி இருக்கலாம். அப்படி யாரும் இல்லாமல் இப்படி அனாதையாக இருக்கிறோமே. இந்தக் கவலையும் சேர்ந்து கொள்ள அவன் இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது.
தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொள்ள அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை. “ டேய் விஷ்ணு, நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நீ எவ்வளவுதான் அழுது புலம்பினாலும் அனு உனக்கு இல்லை. ஒரு வேளை இதைப் புரிய வைப்பதற்காகத் தான் எமன் உன்னை மீண்டும் இங்க அனுப்பி வச்சாருனு நினைக்கிறேன்”.
ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவனது மனம் மெல்ல மெல்ல அந்த அதிர்ச்சியில் இருந்து மீளத் தொடங்கியது. அவன் மனதில் இருந்த சல சலப்பு குறைய ஆரம்பித்தது. “விடுடா விஷ்ணு இது என்ன நமக்கு புதுசா? எவ்வளவே பார்த்துடோம். ஆயிரம் இடத்தில் அடி வாங்கிட்டோம் இது ஆயிரத்தி ஓன்னு அவ்வளவுதான். என்ன மேல போனா அந்த சித்ர குப்தர் தான் கொஞ்சம் ஓவர் நக்கலா பேசுவாரு. பார்த்துக்கலாம் விடு” தன் மனதிற்குத் தட்டி ஆறுதல் கூறினான் விஷ்ணு.