17. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்
Hello friends, எல்லாருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள். என்னை ஞாபகம் இருக்கா? அப்போ அப்போ அப்ஸ்கான்ட் ஆகிடறேன். நானும் ரெகுலரா அப்டேட் போடணும் அப்படின்னுதான் நினைக்கறேன். ஆனா முடிய மாட்டேங்குது. கோச்சுக்காம படிச்சுட்டு கமெண்ட்ஸ் பண்ணுங்க ப்ளீஸ். ரொம்ப கேப் விடாம அடுத்த அப்டேட் சீக்கிரம் போட ட்ரை பண்றேன்.
வரதன் தேவியைப் பற்றி கூறி முடிக்க அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்து இருந்தார்கள் கமலும், ஸ்ரீதரும்.
“அந்த ஊருக்கு பக்கத்துல இருக்கற அம்மன் கோவிலுக்கு நாங்க குடும்பத்தோட கார்ல போயிட்டு திரும்பி சென்னை வந்துட்டு இருந்தோம். அப்போத்தான் அந்த வேலு தேவியை தோள்ல வச்சுட்டு நடு ரோட்டுக்கு வந்து காரை நிறுத்த சைகை செய்தான். அவன் ஒரு பொண்ணோட நிக்கறதப் பார்த்து முதல்ல தயங்கினாலும், டிரைவர் கூட சேர்ந்து நாங்க மூணு பேர் இருந்தோம், அதனால எது வந்தாலும் பாத்துக்கலாம்ன்னு வண்டியை நிறுத்தினா, நாங்க பார்த்தது குற்றுயிரா இருந்த தேவியை. அவனுங்க அடிச்ச அடில அவ மூஞ்சி அடையாளம் கூட தெரியலை. உடம்பு முழுக்க ரத்தம். அவங்க ரெண்டு பேரையும் வண்டில ஏத்திட்டு சென்னை வந்து, நேரா எனக்குத் தெரிஞ்ச மருத்துவமனைக்கு நானும், ரவியும் கூட்டிட்டு வந்தோம். அதுவரை தேவி கண்ணுத் திறக்கலை. முழு மயக்கத்துலதான் இருந்தா. ரொம்ப மோசமான நிலைமை. டாக்டர்ஸ் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சு அவ குணமாக கிட்டத்தட்ட 1 மாசம் ஆச்சு. கார்ல திரும்ப வரும்போது வேலு தேவியைப் பத்தி முழுக்கதையும் சொன்னான்”, சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தேவியைப் பற்றி தொடர்ந்தார் வரதன்.
“அவனுங்க அடிச்சதுல அவளோட கர்ப்பமும் கலைஞ்சு போச்சு. என்னதான் டாக்டர்ஸ் சிகிச்சை பண்ணி உடலளவுல குணப்படுத்தினாலும், மனதளவில் தேவிக்கு யாரைப் பார்த்தாலும் பயம்தான். அதுவும் ஆண்கள் அப்படின்னா கூடுதல் பயம் வர ஆரம்பிச்சுது. அதுக்கும் மனநல டாக்டர்க்கிட்ட கூட்டிட்டுப் போயி, ஒரு வழியா ஒரு மூணு மாசத்துல எல்லாத்துல இருந்தும் தேறி வந்தா. இருந்தும் பயம் மட்டும் முழுசா போகலை. இங்க ரவி அம்மாவோட மட்டும் ஒண்ணு, ரெண்டு வார்த்தை பேசுவா. மத்தபடி அவளுக்கு கொடுத்த ரூமை விட்டுக்கூட வரமாட்டா”,வரதன் சொல்ல கமலும், ஸ்ரீதரும் தேவியின் அப்போதைய நிலையை நினைத்து வருத்தப்பட்டார்கள்.
“தேவியை நினைச்சா வருத்தமா இருக்கு சார். பெண்களுக்கு எதிரா இந்தக் கொடுமைலாம் எப்போதான் அழியுமோ, தெரியலை. ஆனா இத்தனை கெட்டதிலையும், தேவி ஏதோ கொஞ்சம் புண்ணியமும் பண்ணி இருக்காங்க போல, அதுனாலதான் அவங்க உங்க கண்ல பட்டிருக்காங்க. உங்களுக்கும் ரொம்பப் பெரிய மனசு சார். யாருன்னே தெரியாத பொண்ணுக்கு இந்த அளவு ஹெல்ப் பண்ணி இருக்கீங்களே”
“அதுக்கு காரணம் வேலு தேவியைப் பத்தி சொன்னதுதான் ஸ்ரீதர். எத்தனை நல்லாப் படிச்ச பொண்ணு, குடும்பம் சரி இல்லாத காரணத்தால இப்படி ஒரு நிலைமைக்கு வந்துட்டாளேன்னு வருத்தம். என் மனைவியும் பெண் குழந்தை இல்லாதக் குறைக்கு தேவி இங்கயே இருக்கட்டும்ன்னு சொல்லிட்டா”
“என்ன இருந்தாலும் நீங்க பண்ணினது பெரிய விஷயம்தான் சார். இந்தக் காலத்துல எப்படி எப்படி எல்லாமோ ஏமாத்தறாங்க. அதனால யாருக்கானும் போய் உதவி பண்ணனும் அப்படினாலே பயமா இருக்கு. தேவியை இந்த நிலைமைக்கு ஆக்கினவங்களை சும்மாவா விட்டீங்க?”, கமல் கேட்க அதே கேள்வியை முகத்தில் தாங்கி வரதனை நோக்கினான் ஸ்ரீதர்.
“தேவி மருத்துவமனைல இருந்த போதே அவன் மேல வழக்கு பதிவு பண்ணி விசாரணை ஆரம்பிச்சுது. நம்ம நாட்டுலதான் கண்ணு முன்னாடி குத்தம் நடந்தாக் கூட சாட்சி இல்லைனா செல்லுபடி ஆகாதே. நல்லதம்பிக்கும், அவனோட மச்சானுக்கும் பயந்தே யாரும் சாட்சி சொல்ல வரலை. வேலு ஒருத்தன்தான் சாட்சி. அவனையும் அவன் குடும்பத்தைக் காட்டி மிரட்டி ஊரை விட்டு ஓட வச்சுட்டாங்க. நானும் அப்போ இத்தனை பிரபலம் கிடையாது. எனக்கு பெரிய லெவெல்ல தெரிஞ்ச ஆளுங்கன்னு யாரும் இல்லை. So, எந்த வேகத்துல கேஸ் open ஆச்சோ அதைவிட வேகமா முடிஞ்சுபோச்சு. அதுவும் எப்படித் தெரியமா கேஸ் முடிவு வந்துச்சு, வெற்றியோட பகையாளி அவன் மேல இருக்கற கோவத்த காமிக்க அவன் குடும்பம் மொத்தத்தையும் அழிச்சுட்டதாவும், அதுல தேவி மட்டும் தப்பினா மாதிரியும். பேருக்கு ஒரு ரெண்டு பேரை அரெஸ்ட் பண்ணினாங்க. ரெண்டே மாசத்துல அவங்களும் வெளிய வந்தாச்சு”, வரதன் சொல்ல கமலுக்கும், ஸ்ரீதருக்கும் இப்படி நல்லதம்பி தண்டைனையில்லாமல் தப்பி விட்டானே என்று ஆற்றாமையாக இருந்தது.
“என்ன சார் இது அநியாயம். தப்பே செய்யாத தேவி இத்தனை கஷ்டம் அனுபவித்து இருக்காங்க. ஆனால் அத்தனை கொடுமை பண்ணின அந்த ஆள் வெளில சந்தோஷமா சுத்திட்டு இருக்கான். இதெல்லாம் பாக்கும்போது கடவுள்ன்னு ஒருத்தர் இருக்காரான்னே தெரியலை”
“சில சமயங்கள்ல இப்படித்தான் ஆகிடுது. சட்டத்தை பண பலமும், அதிகார பலமும் ஒண்ணும் இல்லாததா ஆக்கிடுது. அதுனாலதான் நான் இப்போலாம் முடிஞ்சவரை, நியாமான வழக்குகளை மட்டும் எடுக்கறேன். எல்லாரையும் நல்லவங்களா மாத்த முடியாது. அட்லீஸ்ட் நல்லவங்களை காப்பாத்தவாவது செய்யலாமே”
“நீங்க சொல்றதும் ஒரு விதத்துல சரிதான் சார். இருந்தாலும் அந்த ஆளுக்கு கடவுள் ஏதானும் ஒரு விதத்துல தண்டனை கொடுக்கணும்”
“சரி அது போகட்டும் ஸ்ரீதர். நம்ம இப்போ உங்க கேஸ்க்கு வரலாம். நீங்க சொன்னது எல்லாம் பார்க்கும்போது அந்தப் பொண்ண நீங்க வேண்டாம்ன்னு சொன்னதுல எதுவும் தப்பு இருக்கறா மாதிரி தெரியலை. இத்தனை தப்பையும் அவங்க மேல வச்சுட்டு எப்படி தைரியமா உங்க மேல புகார் கொடுக்கறாங்கன்னு தெரியலை”
“சார், அவ தப்பு பண்ணினா அப்படிங்கறதுக்கான ஆதாரம் எதுவும் இப்போ எங்ககிட்ட இல்லை சார். கல்யாணத்தை நிறுத்தணும்ன்னு முடிவு பண்ணின உடனேயே எங்க அம்மா ஒரு பொண்ணோட பொல்லாப்பு நமக்கு வேண்டாம். நம்ம கிட்ட இருக்கற ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் அவங்கக்கிட்ட கொடுத்துடலாம்ன்னு சொல்லிட்டாங்க. அதும்படி நாங்களும் அதைக் கொடுத்துட்டோம். அப்போ என்னவோ அவங்க அப்பா அப்படி அழுது நன்றி எல்லாம் சொன்னாரு. இப்போ இப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேசறாரு”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்த தேவி கமலையும், ஸ்ரீதரையும் இவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்களா என்பது போல் ஒரு பார்வையும், வரதனை இன்னும் இவர்களுடன் என்ன பேச்சு என்பது போல் ஒரு பார்வையும் பார்த்தாள்.