07. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ
வளர்மதிக்கு ஏனோ கவலையாகவே இருந்தது... பிருத்வி யுக்தா திருமணம் நடக்கப் போவதில்லை என்பது தெரிந்தால் சுஜாதா எப்படி எடுத்துக் கொள்வாளோ..??? என்ற பயம் அவள் மனதில் இன்னும் இருந்துக் கொண்டே இருந்தது... சின்ன வயதில் இருந்து தொடர்ந்துக்கிட்டு இருக்க நட்பில் பிரிவு வந்தால்...
இப்படி சுஜாதா இதில் தீவிரமாக இருப்பாள் என்று தெரிந்திருந்தால் பிருத்வியிடம் சிறு வயதில் இருந்தே ... யுக்தாதான் உனக்கு மனைவி என்று சொல்லியே வளர்த்திருக்கலாம்... அதற்கும் செந்தில் தான் தடைப் போட்டார்... இப்போதும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருக்கிறார்.
பன்னிரண்டு வருடங்கள் கழித்து வீட்டிற்கு வரும் அவளை முதல் நாளே சங்கடப்படுத்தி அனுப்ப வேண்டுமா... பிருத்வியை இருக்கச் சொன்னால் அவன் மீட்டிங் என்று கிளம்பி விட்டான்
இந்த பிரணதியும் கம்ப்யூட்டர் கிளாஸ் இருக்கு காலையிலேயே போகனும்ன்னு சொன்னா... மதிதான் மெதுவா போகலாம் என்று சொல்லி அவளை இப்போது இருக்க வைத்திருக்கிறாள்... இப்படி யோசித்து கொண்டிருக்கும் போதே கார் சத்தம் கேட்டது..
வாசலுக்கு வந்தாள் வளர்மதி... காரிலிருந்து முதலில் இறங்கினாள் சுஜாதா... கார் நிற்கும் இடத்துக்கு விரைந்து சென்று அவள் கையை பிடித்துக் கொண்டாள் வளர்மதி..
"சுஜா... எப்படி இருக்க... "
"நல்லா இருக்கேன் மதி... ஹே.. என்ன இப்படி இளைச்சிட்ட..." இவர்கள் விசாரிப்புக்கு நடுவே மற்ற இருவரும் இறங்கினர்... "நான் என்ன 12 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அதே மதியா.. இப்போ எனக்கு வயசாகல...
வாங்க மாதவன்... எப்படி இருக்கீங்க..."
"நான் நல்லா இருக்கேன் மதி... நீங்க நல்லா இருக்கீங்களா... ஆமாம் செந்தில் எங்க..."
அதற்குள் செந்திலுக்கும் கார் சத்தம் கேட்டு வெளியே வந்தார்... "அடடே வாங்க.. வாங்க... எப்படி இருக்கீங்க மாதவன்... சுஜா எப்படி இருக்க..."
"அண்ணா நாங்க நல்லா இருக்கோம்... ஆமாம் நான் இங்க இல்லைன்ன உடனே.. மதியை நிறைய வேலை வாங்கினீங்களா.. அவ ரொம்ப இளைச்சிட்டா..."
"உன்னோட ஃப்ரண்ட் என்னை வேலை வாங்கினா போதாது... அவ குண்டாயிடக் கூடாதுன்னு டயட் இருக்காம்மா..."
"செந்தில் இங்க மட்டும் என்ன... சுஜாவும் டயட் தான் இருக்கா..."
"ஆம்பிளைங்க ரெண்டுப்பேரும் சேர்ந்தா போதுமே... எங்களை கிண்டல் செய்வீங்களே" பேசிக்கொண்டே அனைவரும் உள்ளே சென்றனர், யுக்தா அவர்களை பார்த்து கொண்டு நின்றாலும்... அவள் மனம் பிருத்வியையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது...
"அடடே... யுக்தா எப்படி இருக்கம்மா... ஃபோட்டோவில் பார்த்ததை விட நேரில் ரொம்ப அழகா இருக்கம்மா... என்றாள் வளர்மதி.
"நான் நல்லா இருக்கேன் அத்தை.... அத்தை.. மாமா... என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க" என்று சொல்லி செந்தில் மதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள் யுக்தா.. இருவருமே நெகிழ்ந்து போயினர்... பின்னே இருக்காதா... நியூயார்க்கில் இருந்து வரும் யுக்தாவை இவர்கள் இப்படி எதிர்பார்க்கவில்லை...
மாடர்னா ட்ரஸ் பண்ணி ஹாய் அங்கிள்... ஹாய் ஆன்டி என்று சொல்லப் போகும் யுக்தாவை தான் எதிர்பார்த்தார்கள்...
"நீங்க ரெண்டுப்பேரும் நல்லா இருக்கீங்களா.."
"எங்களுக்கென்னமா நாங்க நல்லா இருக்கோம்..." அதற்குள் பிரணதி அவளது அறையில் இருந்து வந்தாள் "பிரணதி எங்கப் போன... சுஜாதா அத்தையும்... மாமாவும் வந்துட்டாங்கப் பாரு..."
"இல்லம்மா இன்னிக்கு கிளாஸ்ல ஒரு டெஸ்ட் இருக்கு அதுக்கு ப்ரிபேர் ஆயிட்டிருந்தேன்"
"மதி... பிரணதி கூட எவ்வளவு பெரியவளாயிட்டா... என்ன பிரணதி எங்களையெல்லாம் ஞாபகம் இருக்கா..."
"இல்லை அத்தை... எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை... ஆனா அம்மா அடிக்கடி உங்களை பத்தி சொல்வாங்க... அப்புறம் உங்க போட்டோஸ் எல்லாம் பார்த்திருக்கேன்..."
"இருக்கட்டும் ம்மா... நீ அப்ப சின்ன பொண்ணுல்ல உனக்கு அவ்வளவா ஞாபகம் இருக்காது... நடுவுல இங்க வந்திருந்தா பரவாயில்லை... எங்களால ரெண்டுதடவை வரனும்னு நினைச்சு... வரமுடியல..."
"இருக்கட்டும் சுஜா... அதான் இப்போ வந்திருக்கீங்களே..."
"ஆமாம் மதி... பிருத்வி எங்க...?? அவனுக்கு என்னை கண்டிப்பா ஞாபகம் இருக்கும்... " யுக்தா இதுவரையில் மனதில் நினைத்துக் கொண்டிருந்த கேள்வியை சுஜாதா கேட்டாள்.
"அது சுஜா... அவனுக்கு ஒரு புது காண்ட்ராக்ட் கிடைச்சிருக்கு... அதனால ஒரு முக்கிய மீட்டிங் இருக்குன்னு போயிருக்கான் ம்மா... நீங்க இன்னிக்கு வருவீங்கன்னு தெரியும்... இருந்தாலும் அதை கேன்சல் பண்ண முடியல..."