மனதோர மழைச்சாரல்... - 16 - வத்ஸலா
'நீ... என்... அம்மா இல்லை...' அந்த வார்த்தைகளே சந்திரிக்காவை இன்னமும் புரட்டிக்கொண்டிருந்தன. இன்று காலையில் இருந்து இன்னும் அதிகமாக........ இரண்டு நாட்களாக நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள்தான் அதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தோன்றியது அவருக்கு.
அந்த வார்த்தைகள் கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு முன்னால், ரிஷி சந்திரிக்காவை பார்த்து சில நாட்கள் தொடர்ந்து சொல்லிகொண்டிருந்த வார்த்தைகள். ரிஷி சந்திரிக்காவின் மடி சேர்ந்த போது அவனுக்கு இரண்டரை வயது.
ஜானகி!! அவருடைய நினைவுகளுமே சந்திரிகாவை நோக்கியே சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஜானகி சந்திரிக்காவின் வீட்டில் வீட்டு வேலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது சந்திரிக்காவுக்கு திருமணம் ஆகி இருக்கவில்லை. மேகலாவின் ஆட்டங்கள் தொடர்ந்துக்கொண்டிருந்த காலம் அது.
அங்கே வேலைக்கு சேர்ந்த போது ஜானகிக்கு 18 வயதே நிரம்பியிருந்தது. அந்த வயதிலேயே பூ விற்கும் ரகுவுடன் காதல் திருமணம். அடுத்த இரண்டாவது மாதத்தில் வயிற்றில் இரட்டை குழந்தைகள்.
முதலில் ஜானகியின் கணவருக்கு சந்திரிக்காவின் வீட்டுக்கு ஜானகியை வேலைக்கு அனுப்ப துளியிலும் துளிக்கூட சம்மதம் இல்லை. சினிமாவில் வில்லன்களாக இருப்பவர்கள் நிஜ வாழ்கையிலும் வில்லன்களாக இருப்பார்கள், ஹீரோக்கள் சொக்க தங்கமாக இருப்பார்கள் என்பதை போன்ற நம்பிக்கைகள் மக்களிடம் கொஞ்சம் மிச்சம் இருந்த காலக்கட்டம் அது.
'வேறே எந்த குப்பை மேட்டுக்குனாலும் நீ வேலைக்கு போ... அந்த பொம்பளை வீட்டுக்கு மட்டும் வேணாம்...' இப்படித்தான் முதலில் சொன்னான் ரகு.
ஆனால் வறுமையும், பசியும், சில நாட்களில் அவர்கள் உறுதியை கலைக்க,
'சரி போ. ஆனா ராத்திரி அங்கே தங்குற வேலையெல்லாம் வெச்சுகாதே. பொழுது சாயுறத்துக்குள்ளே வீடு வந்து சேரு...' என்றான் அவன்.
வீட்டுக்கு சென்ற முதல் நாளே நிறையவே ஆச்சரியம் ஜானகிக்கு. .பூஜை அறையில் அமர்ந்து காலை பூஜையை முடித்து விட்டு வெளியே வந்த சந்திரிக்காவை வியப்பு மோலோங்க பார்த்திருந்தாள் ஜானகி.
'நீங்க சேலை எல்லாம் கட்டுவீங்களா மா?' சந்திரிகா அணிந்திருந்த சேலையை மேலும் கீழுமாக பார்த்தபடி கேட்டாள் ஜானகி.
'ஏன்? நான் புடவை கட்டக்கூடாதா? எனக்கு புடவை ரொம்ப பிடிக்குமே?" என்றார் சந்திரிக்கா சிரித்தபடியே.
அதன் பிறகு இருவருக்கும் இடையில் மெல்ல மெல்ல சின்னதாக ஒரு நட்பு பூப்பதை இருவராலுமே தடுக்க இயலவில்லை. வீட்டில் சந்திரிக்கா தினமும் ஆடும் பரதநாட்டியம் துவங்கி எல்லாவற்றுக்கும் முதல் ரசிகை ஜானகி என்று ஆகிப்போனது.
சில மாதங்கள் கழித்து பிறந்தனர் ரிஷியும், அவனது அண்ணன் சசியும். அவர்கள் இருவருக்கும் பெயர் சூட்டியது கூட சந்திரிக்காவே!!! படப்பிடிப்பு இல்லாத நாட்களில், அந்த சிறு குழந்தைகளுடன் நேர செலவழிப்பதே சந்திரிக்காவின் வாடிக்கையானது.
இப்படியே இரண்டரை வருடங்கள் கடந்திருந்த நிலையில் தான் நடந்து முடிந்திருந்தது சந்திரிக்காவின் அந்த நடன அரங்கேற்றம். இரண்டு நாட்களில் சந்திரிக்கா புகழ் ஏணியில் கொஞ்சமாக ஏறத்துவங்க மறுபடியும் பற்றி எரிய ஆரம்பித்தது மேகலாவின் இதயம்.
அடுத்து வந்த சில நாட்களில் இன்னமொரு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியிருந்தது. ஆடப்போவது சந்திரிக்கா என்ற பகிரங்க அறிவிப்புடன்!!!!!
அவரது நாட்டிய திறமை சற்று பிரபலமாகி இருக்க, இந்த முறை பெரிதாக எதிர்ப்புகள் கிளம்பவில்லை.
அந்த நாளும் வர மேடை ஏறினார் சந்திரிக்கா. ஆடத்துவங்கிய சில நிமடங்களில் தனது சுயத்தை தான் இழப்பது போன்ற ஒரு உணர்வு மேலிட்டது அவருக்கு. தான் மேடையில் நடனம் ஆடுகிறோம் என்று மட்டும் புரிகிறது. ஆனால் எப்படி ஆடுகிறோம் என்பதை உணர்ந்துக்கொள்ள முடியவில்லை சந்திரிக்காவால்!!!!
மேடையின் கீழே முகச்சுளிப்புடன் அமர்ந்திருந்தவர்களின் மத்தியில் யாருமறியா கேலிப்புன்னகையுடன் மேகலா.!!!! சில நிமிடங்களில் மேடை நோக்கி ஓடினார் கல்யாணராமன்.
தன்னிலை பெற்று, நடந்ததை சந்திரிக்கா உணர்ந்துக்கொள்ள சில மணி நேரங்கள் பிடித்தது. மேடை ஏறுவதற்கு முன் தான் அருந்திய தண்ணீரில் யாரோ எதையோ கலந்திருக்க வேண்டும் என்பது அப்போது தான் புரிந்தது சந்திரிக்காவுக்கு.
சந்தோஷ கனவுகள் கலைந்து போய் ஒரு அவமான சின்னமாக தான் மாறிப்போயிருந்த நிலையில், எல்லாருடைய கேலி பார்வை அம்புகளையும் தாங்கியபடியே கல்யாண ராமனுடன் சந்திரிக்கா அரங்கத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில் தான் சந்திந்தார் அங்கே திர்ப்பட்ட மேகலாவின் கண்களை.
'உனக்கு பரதநாட்டியம் எல்லாம் தேவையா????. நீ கவர்ச்சி ஆட்டக்காரி!!!! கவர்ச்சி ஆட்டம் தான் ஆடணும்...' சந்திரிக்கா மற்றும் ராமனின் காதுகளில் தெளிவாக விழுந்தது மேகலாவின் எள்ளலான வார்த்தைகள்.