23. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி
"வசந்த், டேய் வசந்த்.. உன்னோட வேலைக்கு கிளம்பிட்டியா.. மறக்காமல் டிபன் பாக்சை எடுத்துண்டியா" என்று கேட்டபடி, பின்கட்டில் துவைத்த துணிகளை உலர்த்தி விட்டு வந்த சாரதா வரவேற்பறைக்கு வந்தார்.
சாரதாவுக்கு என்னவோ மனசே சரியில்லை.. பைரவி வேறு காலையிலேயே வெளியே சென்று விட, அவளை பற்றியே நினைத்து கொண்டிருந்தவர், அந்த பொண்ணுக்கு மனசு நிம்மதியை கொடுன்னு அம்பாளை பிரார்த்தனை செய்தபடி இருந்தார்.. நேற்று அவள் அம்மா பற்றிய விஷயத்தை கேட்டதிலிருந்தே அவர் மனம் பாரமாக இருந்தது.. நெஞ்சுக்குள்ளே பெரிய பாறங்கல்லை ஏற்றி வைச்சா மாதிரி அவருக்கு தோன்றியது.. கை போன போக்கில் வேலையை செய்தபடி, வசந்தை வேலைக்கு அனுப்ப வந்தார்.
"எடுத்துண்டாச்சு மா.. இதோ வேலைக்கு கிளம்பிண்டே இருக்கேன்.. இன்னும் கொஞ்சம் திரும்பி வரதுக்கு லேட்டானாலும், ஆகலாம்.. கொஞ்சம் லைப்ரரி வரை போயிட்டு வரலாம்ன்னு பார்க்கிறேன்"
"சரிப்பா.. பார்த்து போயிட்டு வா.. இன்னிக்கு தான் ராத்திரிக்குள்ளே மஹதியும், அஜய்யும் கூட வராளாம்.. காலையிலேயே மஹி போன் பண்ணி சொன்னாள்"
"சரிம்மா.. உனக்கு ஏதாவது வேணுமானால் சொல்லு.. சாயங்காலம் நான் வரும் போது வாங்கிண்டு வரேன்" என்ற வசந்துக்கு,
"அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம்.. வேணும்னா உங்கப்பா கிட்ட சொல்லறேன்.. நீ ஜாக்கிரதையாக போய்யிட்டு வா.. அது சரி, உன்னோட ரிசல்ட் என்னவாச்சுப்பா.. இண்டர்வீயூ கூட முடிஞ்சுடுத்தே.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.. மஹதிக்கு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சாச்சு.. கையோட நீயும் ஒன்னோட எக்ஸாமும் பாஸ் பண்ணி இண்டர்வியூவும் கொடுத்தாச்சு.. எனக்கும் தெரியும், நீ அதையும் கிளியர் பண்ணி டிரைனிங்கு செலக்ட் ஆயிடுவேன்னு.. ஆமாம் ஏதாவது நியூஸ் கிடைச்சுதா?"
"இன்னும் இரண்டு நாள் ஆகுமாம்மா.. எப்படியும் நான் செலக்ட் ஆகிடுவேன்.. அதுல எனக்கு சந்தேகமுமே இல்லை.. முதல் பத்து ரேங்குல வந்தா நன்னா இருக்கும்.. நல்ல போஸ்ட் கிடைக்கும்.. பார்ப்போம் எதுவா இருந்தாலும், இன்னும் இரண்டு நாள்ல தெரிஞ்சுடப் போறது... அஜய்யும், பைரவியும் இல்லேன்னா நான் என்ன ஆயிருப்பேனோ.. கரெக்டான சமயத்துல இரண்டு பேரும் நல்ல பிரெண்டா, எனக்கு எல்லா விஷயத்துலயேயும் கடைசி நிமிஷத்துல கைட் பண்ணா.. நான் இந்த நிலமைக்கு அவா மாத்திரம் என்னை சப்போர்ட் பண்ணலைன்னா, நான் இவ்வளவு தூரம் இன்டர்வியூ கடைசி நிமிஷத்துல நல்லாவே செஞ்சிருக்கவே மாட்டேன்"
எல்லாம் பைரவியும், அஜய்யும் இந்தாத்துக்கு வந்த வேளை.. எல்லாம் நல்லபடியாவே நடக்கிறது.. அப்பாவுக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? .. தன் பிள்ளை கலெக்டர்ன்னு சொல்லிக்க பெருமையா இருக்காம்.. வாய் ஓயாத அதையே சொல்லிண்டிருகார்.. ஏதோ நீ, இன்ட்ர்வியூ ரிசல்ட்கப்புறம் எல்லாருக்கும் சொல்லலாம்னதால, இப்போ கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.. அதெல்லாம் சரி வசந்த், கொஞ்சம் நாள் வீட்டுல சும்மாதான் இரேன்.. நீயும் தான் மஹி கல்யாணம், உன்னோட எக்ஸாம், அது இதுன்னு இரண்டு மாசமா அலைச்சல்.. இனிமே, எதுக்கு அவாத்துல போய் அசிஸ்டென்ட் உத்யோகம் பார்க்கனும்.. இப்ப நம்ம நிலமை கொஞ்சம் பரவாயில்லையே"
"இல்லைம்மா அது தப்பு.. ஆனந்த் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கார்.. அதோட அவர் அஜய்யின் பிரண்ட் வேற.. இன்னும் பத்து நாளல அவரோட பழைய உதவியாளர் வந்துடுவார்.. அதுவரை அவருக்கு உதவரதுதான் மரியாதை.. சமயத்துல அவர் கை கொடுத்தார். அதோட நானுமே, இண்டர்வியூ அது, இதுன்னு நிறைய லீவ் எடுத்தாச்சு.. பென்டிங் வேலையெல்லாம் கொஞ்சம் முடிச்சு ஒப்படைச்சா நன்னா இருக்கும்" என்றான் வசந்த்.
"சரியா சொன்னேப்பா வசந்த்.. சமயத்துல உதவினவாளை மறக்கப் படாது.. கொஞ்சம் நாள் முன்னாலே நம்ம நிலைமை எப்படியிருந்தது?.. ஏதோ, அஜய் புண்ணியத்தாலே நம்ம கடன் எல்லாம் செட்டில் பண்ணிட்டோம்.. நம்ம இரண்டு பொண்ணுகளும் கூட திருப்தியா கிளம்பி போனா.. ஆனா எனக்கு கொஞ்சம் மனத்தாங்கல் தான்.. அவர் அப்பாக்கு சொந்தமான சொத்துக்கு பாத்தியதை பட்டவர், தனக்கு எதுவுமே வேண்டான்னு சொல்லிட்டு மத்தவாளை பிரிச்சிக்க சொல்லிட்டார்.. எனக்கு என்னவோ குத்தம் பண்ணாப்போலவே இருக்கு சாரதா" என்றார் அங்கே இருந்த ராமமூர்த்தி.
"நீங்க சொல்லறது சரிதான்னா.. எனக்கும் மனசுக்கு ஒப்பலை.. அவர் பெரிய மனசோட தங்களுக்கு வேண்டாம்ன்னு சொன்னாலும், நாம பெரியவா அப்படி விடப் படாது.. அது எங்கம்மா, அப்பாவோட பரம்பரை சொத்து.. அதுக்கு எங்கண்ணன் என்ன தப்பு பன்ணியிருந்தாலும், அவனே போய் சேர்ந்துட்டான்.. அவன் பிள்ளைக்கு கொஞ்சமாவது அதிலிருந்து போகனும்.. அஜய் பாதி சொத்தை என் பேர்ல ரெஜிட்டர் பண்ணியிருக்கான்.. பாதியை பிரிச்சு ரஞ்சுவுக்கும், கல்பூவுக்கும் கொடுத்தாச்சு.. மீதி பாதி வசந்துக்கும், நம்ம இரண்டு பேருக்கும்ன்னு சொல்லிட்டான்.. எனக்கு ஒன்னு தோணறதுன்னா.. பேசாமல் அதில வசந்த் பங்கை எடுத்து தனியா பிரிச்சிண்டுட்டு, மீதி பங்கை மஹதி பேர்ல டெபாசிட் பண்ணலாம்.. நாளைக்கு அவாளுக்கு குழந்தைன்னு ஆச்சுன்னா, அதுகளுக்கு கொடுப்போம்.. அதான் நியாயம் கூட" என்ற சாரதாவுக்கு,