10. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி
ஒரு கணம் இவள் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்த மித்ரன் அடுத்த நொடி படுக்கையிலிருந்து எழுந்து கொண்டான். “வெட்டிங் இன்னும் ஒரு ஒன் வீக்ல வைக்கலாம்னு நினைக்கிறேன்….” சொல்லிக் கொண்டு அவன் அந்த டீவியைப் பார்த்து போக
சீறினாள் இவள்…”அது வரைக்கும் அகி அங்க தண்ணி கூட இல்லாம இருப்பானாமா?...”
“அதான் சரின்னு சொல்லிட்டல்ல….அதெல்லாம் அகதனை கவனிச்சுப்போம்….ஆனா ஒன்னு நம்ம வெட்டிங் டைம்லதான் அவரை வரவிடுவேன்….அப்பவும் என் ஆள்கள் அங்க எப்பவும் இருப்பாங்க…..அதோட இப்ப அகதனை தூக்க முடிஞ்சுதுன்னா….எப்பனாலும் உங்க வீட்ல இருந்து யாரை வேணாலும் என்னால எதுவும் பண்ண முடியும்…..அதை நீ மறக்காம இருந்தா உனக்கு நல்லது….” எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொல்லிக் கொண்டே போய் அவன் டீவியை ஆஃப் செய்ய இவள் தன் ஹேண்ட் பேக்கை கையில் எடுத்துக் கொண்டு வெறுப்பை உமிழும் பார்வையால் அவனை எரித்தபடி நின்றாள்.
இப்பொழுது இவள் புறமாக வந்தவன் “சந்தோஷமா வா மனு…..இது நம்ம மேரேஜ் “என்றபடி இவள் கண்களைப் பார்த்து….. “உன் அம்மா அப்பா நீ சந்தோஷமா இருக்கன்னு நம்பனும்….” என்றுவிட்டுப் போய் அந்த சுவரிலிருந்த வாலட்டை திறக்க பட்டன்களை அழுத்த தொடங்கினான்.
இவளுக்கு அவனது இந்த வார்த்தையில் இன்னுமாய் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது…… “எங்க அம்மாப்பாட்டல்லாம் எனக்கு நடிக்க வராது…..” வெடித்தாள்.
இன்னுமின்னுமாய் கத்த வேண்டும் போலதான் வருகிறது. ஆனால் அதனால் டைம் வேஸ்டாகிறதை தவிர வேற என்ன ப்ரயோஜனம்…. வெடுக்கென அவனிடமிருந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ஏன் நடிக்கனும் மனு…? “ இப்பொழுது அவன் குரல் கரைந்து குழைகிறது “நான் உன்னை நல்லா பார்த்துக்க மாட்டனா?.... நீ நம்ம மேரேஜுக்கு ஆசைப் பட்டதில்லையா….? உனக்கும் என்னை ரொம்பவே பிடிக்கும் மனு….. கொஞ்ச நேரம் அந்த மகிபாவை மறந்துட்டு நிம்மதியா இரு ப்ளீஸ்…..சந்தோஷம் அதா வரும்….” சொல்லியபடி இவள் புறமாய் திரும்பி எதற்கோ இவள் புறமாய் கை நீட்டுகிறான் அவன். இவளோ சட்டென அவன் கையை தட்டிவிட்டாள்.
“கை மேல பட்டுச்சி கொன்னுடுவேன்….”
இப்பொழுது ஒரு குட்டிப் புன்னகை அவனிடம்…. “சரி தொடலை…. 7 டேஸ் கழிச்சு கவனிச்சுகிறேன்….”
“ம்….அப்பவும் கைய வைங்க….நானும் கவனிச்சுகிறேன்….”
இப்பொழுது இவன் குரல் மீண்டும் கடினமானது “என்ன பண்ணுவ நீ….?”
“ஏன் இப்ப வாங்கின அறை மறந்துட்டு போல….”
“ப்ச்….மனு இதென்ன பேச்சு? என் ஒரு கைய உன்னால சமாளிக்க முடியுமா?....சே உன்னை மாதிரியே நானும் பேசுறேன் பாரு….. சரி விடு ஐ’ல் க்ராஸ் த ப்ரிட்ஜ் வென் ஐ கம் டு இட்….” சற்று கோபமான முகத்தோடும் ஏதோ சிந்தனையோடும் போய் இப்பொழுது கதவை திறந்தான் அவன்.
கடகடவென லிஃப்டை நோக்கிப் ஓடினாள் அவள். அவனோ நிதானமாக வந்தான்.
“என்ன நீங்க….அகி அங்க எவ்ளவு நேரம் தண்ணி கேட்டுட்டு இருப்பான்….. யோசிக்க மாட்டீங்களா?” அவனை பார்த்து அத்தனை எரிச்சலாய் கேட்டவள் அடுத்து அவளையும் மீறி அழத் தொடங்கினாள்.
அவள் கேள்வியில் ஏதோ வேகமாக பதில் சொல்ல யத்தனித்தவன்…அவள் அழுவாள் என எதிர்பார்க்கவில்லை போலும்….. அவள் அழத்தொடங்கியதும் சற்று ஆடித்தான் போனான். அவன் முகமெங்கும் வந்து பரவுகிறது ஒரு தவிப்பு…
“மனு…” அதிலிருந்தது ஆயிரம் கெஞ்சல். ஆனால் அவ்வளவுதான்…..அவ்வளவேதான் அவனது எக்ஸ்ப்ரெஷன்.
“இங்க பாரு இங்க இருந்து நேர உங்க அண்ணன்ட்ட போய் நிப்பேன்லாம் நினைக்காத…..அவன் இருக்க இடத்தை காமிச்சு கொடுப்பேன்னு நினச்சியா…..? கொஞ்ச நேரம் தாகத்துல இருக்றதுல உங்க அண்ணனுக்கு ஒன்னும் ஆகிடாது….” இதற்குள் இரும்பு பாவத்திற்கு வந்து இளக்கமின்றி சொன்னவன் அவள் உதற உதற அவள் கையைப் பற்றியபடி நடக்க தொடங்கினான்…. “ஆஃபீஸ்ல வச்சு சீன் க்ரியேட் செய்யாத மனு “ என்ற அவன் உறுமலில் அந்த கை உதறலையும் நிறுத்தி இருந்தாள் மனோ.
அடுத்து லிஃப்டில் ஏறி….கார் பார்க்கிங் வந்து, காரில் இவள் ஏறிய பின்தான் அவளது கையை விட்டான் அவன்.
கார் கிளம்பிய நேரத்திலிருந்து அவன் முகம் பாறை போல இருந்தது. மனோவிற்கோ கோபத்தையும் தாண்டி உள்ளுக்குள் ஆயிரம் தவிப்பு.
அகதன் இதெல்லாம் எப்படி சமாளிக்கிறானோ?? இப்படி திடுதிப்பென கல்யாணம் என்றால் அப்பா அம்மால்லாம் எப்டி எடுத்துப்பாங்க? கண்டிப்பா ஏதோ சரி இல்லைனு புரிஞ்சுப்பாங்க……அப்டின்ற பட்சத்துல கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா? அகதனை காணலைனு அவங்க தவிச்சுட்டு இருக்ற நேரத்துல, எனக்கு கல்யாணம்னு நான் போய் நின்னா அப்பா என்ன நினைப்பாங்க? என்ன பண்ணுவாங்க? விஷயத்தை கண்டு பிடிச்சுடுவாங்களா? இவள் முகத்தை வைத்து இவளோட மனசை புரிஞ்சுப்பாங்களா?