32. கிருஷ்ண சகி - மீரா ராம்
“இவ தான் வைஷ்ணவி…” என சொன்ன கோகிலவாணியிடம், “வைஷ்ணவி யாரு பாட்டி?..” என பவித்ரா கேட்டபோது, ருணதியின் செல்போன் சிணுங்கியது…
தன்னுடன் முன்பு வேலைபார்த்த ஒரு பெண் நலம் விசாரிக்க போன் செய்ய, அவள் அந்த பெண்ணிடம் “ஒருநிமிஷம்….” என்றபடி லைனில் வைத்துவிட்டு, “நான் இப்போ வந்திடுறேன்…” என கோகிலவாணியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்…
நன்றாக விரிந்து பரந்திருந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு அந்த பெண்ணிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிமுடித்துவிட்டு நிமிர்ந்த போது, அவளின் முன் மகத் நின்றிருந்தான்…
அவனைப் பார்த்து ஒரு கணம் தடுமாறியவள், அவனிடமிருந்து விலகி கோகிலவாணி இருந்த பக்கம் செல்லாமல் வேறொரு திசையில் செல்ல, அவனும் அமைதியாக அவளைப் பின் தொடர்ந்தான்…
தன்னை நிழலென பின் தொடரும் அவனை கண்டுகொண்டவள், “மேடம் உங்களை தேடுவாங்க… நீங்க போங்க…” என சொல்ல,
“அவங்க தான் என்னை தேடுவாங்களா?... சரி… நான் போறேன்… பட் நான் போனதுக்குப் பிறகு என்னை அவங்களைத் தவிர வேற யாரும் தேட மாட்டாங்க தான?...” எனக் கேட்டதும், அதிர்ந்தாள் அவள்…
அவள் மிரண்ட கண்களுக்குள் தன் பார்வையை பதித்தவனது விழிகள் என்ன செய்ததோ, அவள் விழிகள் கலங்கியது…. அவளது கலக்கத்தைக் கண்டவன் அதற்கு மேலும் அங்கிருந்தால் அவளிடம் நெருங்கிடுவோமோ என தோன்றிட வேகமாக அவ்விடம் விட்டு அவன் நகர, அவள் அவனை தடுக்க முடியாது நின்றாள்… பின் ஒரு முடிவோடு விரைவாக அவன் முன் சென்று வழி மறித்தாள்…
கேள்வியோடு அவளைப் பார்த்தவனிடம், “என் மேல உங்களுக்கு கோபம் இருக்கா?.. வருத்தம் இருக்கா?... எதுவா இருந்தாலும் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன்…. பிரிஞ்சிடலாம்னு சொன்ன ஒரு வார்த்தையை மதிச்சு அதுக்குப்பிறகு நீங்க என்னை தொந்தரவு செய்யலை… அது உங்க பெருந்தன்மை, தியாகம்னு கூட சொல்லலாம்… ஆனா எதுவா இருந்த போதும் நான் செய்தது தப்பு… அதுக்கு நான் எத்தனை தடவை கைகூப்பி மன்னிப்பு கேட்டாலும் ஈடாகாது…” என்றவளின் கரங்கள் அவனை பார்த்து கும்பிட, சட்டென அவளின் கரங்களை பிடிக்க உயர்ந்த அவனது கரங்களை கீழிறக்கியவன்,
“நீ என்ன தப்பு பண்ணின?... என்னை பார்த்து கும்பிடுறதுக்கு… ப்ளீஸ் கையை கீழே இறக்கு… ப்ளீஸ்…” என கெஞ்ச, அவனின் கெஞ்சலுக்கு செவி சாய்த்தாள் அவள்…
அவனிடம், “உங்களை கஷ்டப்படுத்திட்டேன் நிறைய… எனக்கு நிச்சயம் மன்னிப்பே கிடையாது… நான் உங்களுக்கு செஞ்சது பெரி..ய…” என திணறிக்கொண்டிருந்தவளை கையமர்த்தி தடுத்தவன்,
“விடுடா… ப்ளீஸ்… நீ கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியலை… நீ இப்படி ஏதோ தப்பு செஞ்சவங்க மாதிரி என் முன்னாடி நிக்குறதை என்னால… மு…டி…ய…லை…டா….” என சொல்லியவனை விழி அகற்றாமல் பார்த்தவள்,
இவனோடு என் வாழ்வின் சில நாட்கள் பயணம் கிடைத்தது நான் செய்யாத பெரும் தவமே… ஏன் கடவுளே அது நீளவில்லை???... என எண்ணியவளது விழிகள் அவனை இழந்துவிட்ட துயரத்தில் நீரை சிந்த,
சட்டென்று அதை தன் உள்ளங்கைகளில் தாங்கியவன், “ப்ளீஸ்டா… அழாத… நீ அழுதா என்னால தாங்கமுடியாதுடா கிருஷ்ணா… புரிஞ்சிக்கோ… வேற வழியில்லாம தான் நேத்து உன் கன்னத்துல இந்த கண்ணீர் வழிந்தப்போ பேசாம இருந்துட்டேன்… ஆனா இன்னைக்கும் அப்படியே இருந்துட மாட்டேன்… நான் எதையும் உங்கிட்ட கேட்க மாட்டேன்… நீயும் எதுவும் சொல்ல வேண்டாம்… நீ அழுது தான் நான் அதை தெரிஞ்சிக்கணும்னா சத்தியமா என்னைக்குமே எனக்கு அது தெரிய வேண்டாம்…. விடுடா…” என அவன் அவள் மேல் உள்ள மாறாத காதலில் சொன்னதும்,
அவனது வார்த்தைகளில் தென்றல் தீண்ட உணர்ந்தவள், தெளிவான மனதுடன், கண்களை துடைத்துக்கொண்டு அவனிடம் நடந்தவற்றை சொல்ல தயாரானாள்…
டிரான்ஸ்பர் ஆகி மதுரைக்கு வந்த சில வருடத்தில் சேஷாத்திரி காலமாகி விட, அதன் பின் தனி ஆளாக இருந்து கிருஷ்ண ப்ராணாதிகாவை வளர்த்து படிக்கவைத்தார் கோகிலவாணி… அவளும் நன்றாக படித்து மெடிக்கல் காலேஜில் சேர, பூரித்து போனார் கோகிலவாணி…
அவள் இரண்டாம் வருடத்தில் அடு எடுத்து வைத்த போது, அதிர்ஷ்டவசமாக மகத்தினை சந்திக்க நேர, அத்தனை வருட காலமாக மனதிற்குள் அவன் மேல் உள்ள பாசத்தை பொத்தி பொத்தி பாதுகாத்து காதலாக மாற்றி சேமித்து வைத்ததை அவனிடமும் தெரியப்படுத்தினாள் அவள் பயத்துடன்…
அவனும் சம்மதம் வரவே, மகிழ்ந்தவளின் மனது குளிரும் முன்னரே அவன் தான் அவசரமாக போக வேண்டும் எனவும், வர ஆறுமாதங்கள் ஆகும் எனவும் சொல்லிவிட, அவளும் அரை மனதாய் சம்மதித்து அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவளை அழுத முகத்துடன் வரவேற்றார் கோகிலவாணி…
“என்ன பாட்டி?... என்னாச்சு?... அழுதியா?...”
“ஒன்னுமில்ல… நீ உள்ள வா…” என அவள் வந்ததும் கதவை சாத்தினார் அவர்…
அவரின் செயல்கள் புரியாது இருக்கவே, “கோகி… உங்கிட்ட தான கேட்குறேன்… என்னாச்சு இப்போ?... சொல்லப்போறீயா?... இ…ல்..” என சொல்லிக்கொண்டிருந்தவள் அங்கிருந்தவர்களைக் கண்டதும் அமைதியானாள்…
கோகியின் காதோரத்தில், “ஹேய்… கோகி… யாரு இவங்க எல்லாரும்?....” என கேட்டவள் அவர் பதில் சொல்லும் முன்னரே வந்தவர்களை பார்த்து லேசாக சிரித்தவண்ணம், வாங்க என்றாள்….
“அம்மா… அப்படியே சித்ரா மண்ணி தான்… அச்சு அசல் அப்படியே இருக்குறா…” என்றவரின் வார்த்தைகளை கேட்டவள்,
“பாட்டி யார் இவர்?... அம்மா பேரை சொல்லுறார்?... நம்ம சொந்தமா என்ன?...” என கேட்டதும்,
“நான் உன் சித்தப்பாம்மா…” என்றார் வந்தவர்…
“என்ன?...” என ஆச்சரியத்தில் கண்களை உருட்டியவளிடம்,
“நான் வேதாத்திரி… உன் சித்தப்பா… இது உன் சித்தி மாலதி…” என தன்னையும் தன் பக்கத்திலிருந்த மனைவியையும் அறிமுகப்படுத்தியவர், மாலதியின் பக்கத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து எதுவும் பேசாமல் அமைதியானார்…
அவரின் அமைதி கிருஷ்ணாவிற்கு எதுவோ உணர்த்த, அந்த பெண்ணின் மீது பார்வையை செலுத்தினாள்…
“இவ தான் உன் தங்கை வைஷ்ணவி…” என கோகிலவாணி கிருஷ்ணாவிடம் சொன்னதும்,
“தங்கையா?... அப்படி சொல்லாதம்மா… குடும்ப கௌரவத்தை கெடுத்து குட்டிச் சுவரா ஆக்கியிருக்கா… இவளை கொன்னா கூட என் ஆத்திரம் அடங்காது….” என கோபத்துடன் வைஷ்ணவியின் பக்கம் நகர்ந்து கைகளை ஓங்கியவர், அவளது பயந்து தன் கைகளை வைத்த இடத்தினைக் கண்டதும் வலியுடன் கதவின் அருகே சென்று அதில் குத்தினார்…
“ஏன்னா இப்படி செய்யுறீங்க?... கை வலிக்கப்போகுது…” என கணவரின் அருகில் வந்து அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டார் மாலதி…
“இங்க வலிக்குறதை விடவா மாலதி???...” என தன் மனதினை சுட்டிக்காட்டி அவர் சொல்ல மாலதி முந்தானையால் வாய் மூடி அழுதார்….
“அழுது மட்டும் என்னம்மா ஆகப்போகுது?... அடுத்து என்ன நடக்கணும்னு யோசிக்கலாம்…” என்ற கோகிலவாணியிடம்,
“என்னம்மா அடுத்து நடக்கணும்… எங்க சாவு ஒன்னு தான் நடக்க வேண்டி இருக்கு…” என்ற வேதாத்திரியை முறைத்தவர்,
“அறிவு இருக்காடா நோக்கு?... இப்போ எதுக்குடா இப்படி பிணாத்திட்டிண்டிருக்குற?...” என்று கடிந்து கொள்ள
“இவளைப் பெத்துட்டனே… வேற என்ன செய்ய சொல்லுறம்மா?...” என நொந்து கொண்டார் வேதாத்திரி…
“அன்னைக்கு நீயும் உன் தங்கையும் வீட்டை விட்டு வெளியே போய் உங்க மனசுக்கு பிடிச்சவாள கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ, நேக்கும் உன் தோப்பனாருக்கும் வலிக்கத்தான் செஞ்சது… இருந்தாலும் உங்க சந்தோஷம்தான் முக்கியம்னு நாங்க பேசாம இருக்கலையா?... இவ்வளவு ஏண்டா உன் தோப்பனார் இறந்தப்ப கூட உனக்கு தகவல் சொல்ல முடியலை… இத்தனை வருஷமா நீ எங்க இருக்குறன்னு கூட தெரியாம தான நாங்க இருந்தோம்… தெய்வாதீனமா அந்த பகவான் அருளால இன்னைக்கு உன்னை நான் பார்த்தேன் கோவிலில்… இல்லன்னா நான் கண்ணை மூடும்போது உன்னையும் உன் தங்கையையும் பார்க்கலைன்ற ஒரு பெரும் குறை நேக்கு இருந்திருக்கும்டா…” என கண் கலங்க சொன்ன கோகிலவாணியிடம் மானசீகமாக மன்னிப்புக்கேட்டார் வேதாத்திரி…