(Reading time: 15 - 29 minutes)

17. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

ல்லாமே வழக்கத்திற்கு மாறான புதிய துவக்கம் இன்று காலை. விடுமுறை என எதையும் எடுத்து அறிந்திராத மித்ரனுக்கு நேற்றைய தாமத தூக்கத்திற்குப் பின்னும் இன்று வழக்கம் போல் இரவு விலகாத காலையில் விழிப்பு வருகிறதுதான். பக்கத்தில் பார்வையில் படும் அவனது மனுப் பொண்ணுவைப் பார்க்கவும் எழும்பத்தான் மனம் வரவில்லை.. மெல்லியவளாய் மெத்தைக்கு வலிக்குமோ என மென்மையாய் அவள்….. அவனது உயிர்.

தூங்கும் அவளை சுற்றுகிறது இவன் நினைவு…

அவளை அவனுக்குப் பிடிக்கும்…..ரொம்பவும் பிடிக்கும்…….தன் உயிரை யாருக்காவது பிடிக்காமால் இருக்குமா என்ன?

ஆனால் எதற்காக பிடிக்கிறதாம் அவளை? அது நிச்சயமாக அவனுக்குத் தெரியாது…..இவள் என்னவள் என்ற உள்ளுணர்வில் தொடங்கிய உறவிது….. என்னவள் என்ற எண்ணத்தில் அவள் மீது இயற்கையாக வந்துவிட்டது அன்பும் அக்கறையும் பாசமும் பற்றும்…..

அவளைப் பற்றி ஓரளவு தெரியும் தான்…..ஆனால் இனிதான் அவள் உள்மனுஷியை அவன் அணு அணுவாய் ஆழ புரிந்து கொள்ள வேண்டும்……ரசித்து சுக சுகமாய் சுகிக்க வேண்டும்….அவளுக்கு அரணாய் உணவாய் அவனே ஆக வேண்டும்…..அவளோடு ஓர் உயிராய் வாழ வேண்டும்…

இப்பொழுதும் காற்றில் அவள் முன் நெற்றியில் ஆடும் அந்த கற்றை முடி ஒதுக்க வரும் ஆவலில் அவன் கை நீள….. அவளை தீண்ட ஒரு ஆசை சின்னதாய் ஊற…. நேற்றைய அவள் பேச்சின் நினைவில் தடையிட்டு நிறுத்தினான் தன் செயலை.

நடந்த எல்லாம் இவன் அவள் நலம் கருதி செய்த செயல்தான்……அவளும் புரிந்து கொள்வாள் என்று தெரிகிறது தான்…..ஆனாலும் அவள் இவனை இப்போதைக்கு கொஞ்சம் விலக்கி நிறுத்தி இருப்பதை நினைக்கும் போது வலிக்கத்தான் செய்கிறது…. ஆனால் எல்லாம் சரி ஆகிவிடும்….

ஒவ்வொன்றையாய் யோசித்திருந்தவன் மீண்டுமாய் தூங்கிப் போனான்.

அடுத்து அவன்  விழித்தெழுந்து அவளைத் தேடி வரும் போது வரவேற்பறையில் இவனுக்கு முதுகு காட்டி நின்றபடி மொபைலில் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

இடுப்புக்கு கீழ் இறங்கி இருந்த அவளது அடர் நீள கரு முடி ஈரமாயிருந்து அவள் இப்போது தான் குளித்திருக்கிறாள் என இவனுக்கு தெரிவித்தது. வெண்மைக்கு பக்கத்திலிருக்கும் பீச் நிற சல்வார்…..ஷ்ரக் போல ஒரு சின்ன ஓவர் கோட்டும் உள்ள டாப்ஸ்….முடி முகத்தில் வழியக் கூடாதென மேல் பக்கம் சின்னதாய் கிளிப் செய்து வைத்திருந்தாள்….

அவள் மீதே கண் வைத்துக் கொண்டு இவன் அறையில் நுழைய…அவள் பேசுவது இவன் காதில் நுழைகிறது….

“இல்ல அண்ணி….அதெல்லாம் எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல….. அவங்க இன்னும் எழும்பல…..அவங்க எழும்பவும் கேட்டுட்டு கன்ஃபார்ம் பண்றேன்…. லன்ச் தானே ஒன்னும் ப்ராப்ளம் இருக்காதுன்னு தான் நினைக்கிறேன்….” அவள் இன்பாவிடம் பேசுகிறாள் என்பது மித்ரனுக்கு புரிகிறது……

பேசி முடித்து இணைப்பை துண்டித்த பின் தான் மனோ அவன் அங்கு வந்து நிற்பதையே உணர்ந்தாள்.

“ஓ வந்துடீங்களா….சாரி பார்க்கலை….இல்லைனா அண்ணிய உங்கட்ட பேச சொல்லி இருப்பேன்…..” சின்ன புன்னகையுடன் இவனை நோக்கி வந்தாள்.

அவள் புன்னகைப்பதே இவனுக்குள் எத்தனையோ இலகுத்தன்மையை கொண்டு வருகிறதுதான்…..ஆனால் இந்தப் புன்னகை இன்பாவிடம் பேசியதற்காகவா?  “தட்ஸ் ஓகே மனு…. “ என்றபடி இவன் போய் சோஃபாவில் உட்கார….அவளோ “அண்ணி நம்ம லன்சுக்கு வீட்டுக்கு வர சொல்றாங்க….” என இவன் முகம் பார்த்து ஆரம்பித்தாள்.

அவள் முகத்தை தீர்க்கமாகப் பார்த்தான் இவன்.

“மேரேஜானதும் நாம அங்கதான் போயிருக்கனுமாம்….சரி நேத்து நைட்டாகிட்டு…… இன்னைக்காவது இங்க வந்துட்டு எங்க வேணாலும் கிளம்புங்கன்னு சொல்றாங்க அண்ணி..” ஒரு வகை எதிர்பார்ப்போடு அவள் இவனைப் பார்க்க

அருகில் நின்றவளை அவள் கைபிடித்து தன் அருகில் உட்கார வைக்க நினைத்த மித்ரன் மனதில் அவளது ட்ரெஸ் கோட் படுகிறது…..வீட்டில் இவனிருக்கும் இடத்தில் அவள் கேஷுவலாய் கூட ட்ரெஸ் செய்ய தயாராயில்லை…. நேத்து நைட் சல்வாரில் தூங்கினாளே….. அத்தனை விலக்கம்…

“உட்கார் மனு” என வார்த்தையால் மட்டும் சொல்லிவிட்டு தன் கையை நிறுத்திக் கொண்டான்.

மெல்ல இவன் அருகில் அமர்ந்தாள்.”சொல்லுங்க”

“சாரிமா….அங்கல்லாம் வேண்டாம் மனு…. “ இவன் மனைவி இவனிடம் கேட்ட முதல் விஷயத்தையே மறுத்தாகிவிட்டது.

“உனக்கோ எனக்கோ அங்க ஒரு நல்ல ஃபீலே இருக்காதுமா…..”

ஏன் என கேட்ட அவள் பார்வையில் சற்று உஷ்ணம் ஏறி இருந்தது.

“உங்க அம்மாகாக பார்க்கீங்களா? அவங்க ஒன்னும் நம்ம கடிச்சு தின்ற மாட்டாங்க…..” இவள் தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.