11. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி
அருண், அரவிந்த் அம்மா இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று கூறியவுடன் திகைத்து நின்றவர்களில் முதலில் சுதாரித்து பிரத்யாதான்...
“பவி, தாரிணி ரெண்டு பேரும் முதலில் பேசாமல் இருங்கள்.. இந்த விஷயத்தை பெரியவர்கள் பேசிக் கொள்ளட்டும். இது இன்று ஒருநாள் முடியும் விஷயம் அல்ல.. உங்கள் திருமணம் நடந்து நீங்கள் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது, இன்றைக்கு கொட்டிய வார்த்தைகளால் காலம் முழுதும் வருத்தப்படும்படி நேரும்.”
இதை கேட்ட அவள் தங்கைகள், “அக்கா, ஆனால் நீங்கள் இல்லாமல் எங்கள் இருவரின் வாழ்வும் எப்படி சந்தோஷமாக இருக்கும்? “ என்று கேட்டாள்.
“அதை நாங்கள் பேசிக் கொள்கிறோம். நீங்கள் எதுவும் பேசக் கூடாது...” என்றவள் சம்பந்தியம்மாவிடம் திரும்பி,
“அத்தை.. இப்போ என்ன பிரச்சினை..? என் தங்கைகளை பார்த்து பொறமைபடுமளவு என் வாழ்க்கை இல்லை.. அவர் எங்கள் திருமணதிற்கு முன்னே தான் மட்டும் தான் வெளிநாடு போக முடியும் என்பதையும், அவர் அடிக்கடி வர முடியாது எனபதையும் சொல்லி தான் என்னை திருமணம் செய்து கொண்டார். இதற்காக நான் ஏங்கவோ, வருத்தப்படவோ மாட்டேன்.. வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?”
“இங்கே பாரு ப்ரத்யா, எனக்கு உன் மேலோ, உன் குடும்பம் மேலோ எந்த தவறான எண்ணமும் இல்லை. ஆனால் என் மகன்களின் வாழ்க்கை யாரின் கண்ணும் படக் கூடாது.. ஊரில் உள்ள மற்றவர்களின் பார்வை பற்றி நான் பயப்படவில்லை.. ஆனால் நெருங்கிய சொந்தமான நீ, ஒரு நிமிடம் நானும் என் கணவரோடு சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்றிருந்தால், நம் தங்கைகள் மாதிரி மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாமே என்று நினைத்தால், அது இவர்களை பாதிக்கும்”
“திரும்ப திரும்ப சொன்னதையே சொல்றீங்களே... நான் அப்படிப்பட்டவள் இல்லை”
“அது..இன்றைக்கு .. திருமணதிற்கு பின் உன் தங்கைகள் மறுவீடு, வளைகாப்பு, பேறு காலம் எல்லாம் வரும் போது .. உன் எண்ணம் எப்படியும் மாறலாம்.. முதலில் திருமணம் நடந்த தனக்கு எதுவும் இல்லையே என்று நினைக்கலாம். இதை தான் நான் சொல்கிறேன்.. உன் கணவனும், நீயுமாக சேர்ந்து நின்று என் பிள்ளைகள், உன் தங்கைகளை ஆசீர்வாதம் செய்.. அது வரை நீ அவர்கள் கண்ணில் படாதே..”
அது வரை அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பிரத்யாவின் மாமியார்,
“ப்ரத்யா...நீ கிளம்பு ... இனிமேல் நீ இங்கிருந்தால் உனக்கு மட்டும் அல்ல, என் மகனுக்கும் மரியாதை இல்லை.. எப்போ அவர்கள் இவ்வளவு தூரம் பேசுகிறார்களோ, இனிமேல் நீ உன் அப்பா வீட்டிற்கு கூட ஆதி இல்லாமல் வரக் கூடாது.. “ என்று கூற,
பிரத்யவின் அப்பா அம்மா “சம்பந்தி அம்மா .. அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் .. நாங்கள் அவர்களை சமாதான படுத்துகிறோம். உங்கள் மகன் என் மூத்த மாப்பிள்ளை.. எனக்கு ஆண் பிள்ளைகள் கிடையாது .. மாப்பிளைகள் தான் எல்லாமே.. ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போனால் கஷ்டம்.. “
“வேண்டாம் சம்பந்தி.. அவர்கள் இதனை தீவிரமாக நினைக்கும் போது , பிறகு எதாவது சின்ன பிரச்சினை என்றாலும் உங்கள் பெரிய பெண்ணை தான் சொல்லுவார்கள்.. அவள் மனசு கஷ்டப்படும்.. “
“சம்பந்தியம்மா, நீங்கள் சொல்ற மாதிரி என் மருமகளை அனுப்பி விடுகிறேன்.. ஆனால் நான் போக மாட்டேன்.. அவள் என் மகனோடு சேர்ந்துதான் வாழ்கிறாள் என்பதற்கு நான் இங்கிருப்பது தான் சாட்சி.. இல்லையென்றால் வேறு எதாவது கதை கட்டி விடக் கூடும். அதனால் நீங்கள் மேடைக்கு சென்று ஆக வேண்டிய விஷயங்களை பாருங்கள் “ என்று அனுப்பி வைத்தார்.
அவர் சொல் கேட்டு, மாப்பிள்ளைகளின் அம்மா சென்று விட,
பிரத்யவின் தங்கைகள், “அத்தை ... உங்களை எதிர்த்து பேசுவதாக எண்ண வேண்டாம்.. ஆனால் இப்படி ஒரு கல்யாணம் எங்களுக்கு தேவையா?” என,
“இதை நான் உங்களுக்கு மட்டுமாக சொல்ல வில்லை.. உங்கள் அக்காவிற்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.. இது எல்லாம் வீட்டிலேயே நடந்திருந்தால் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று விட்டிருக்கலாம்.. மண்டபத்திற்கு நிச்சயம் வரை வந்து நின்றால். நாளை உங்கள் வாழ்க்கை என்ன ஆகும்..? அதை பார்த்து உன் அக்கா நிம்மதியாக இருப்பாளா?”
அவர் சொல்லியதை கேட்ட ப்ரத்யா, தன் தங்கைகளை பார்த்து “அத்தை சொல்வது சரிதான்.. இந்த விஷயத்தை இதோடு மறந்து விட்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள்.. நான் எங்கிருந்தாலும் என்னுடைய வாழ்த்து உங்களுக்கு எப்போழுதும் உண்டு..” என்றவள் அவர்கள் எல்லோரையும் பார்த்து தலை அசைத்து விட்டு மண்டபத்தை விட்டு சென்று விட்டாள்.
ப்ரத்யா இல்லாததை யாரும் அறியாத படி .. நிச்சயம் நடந்தது.. அவள் குடும்பத்தினர் தங்கள் வருத்தத்தை வெளி காட்டவில்லை..
அருண், அரவிந்த் செய்வதறியாது திகைத்து நின்றனர்.. நிச்சயம் முடிந்த பின் எல்லோர் ஆசிகளும் பெற்றனர். பிறகு photo க்காக சேர்ந்து நிற்கும்போது தங்கள் வருங்கால துணைகளின் முகத்தை பார்த்தவர்கள், நால்வரும் சேர்ந்து நின்று பேசுவது போல்,