15. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ
திருமணமாகி ஒரு வாரம் ஆகிவிட்டது.... வளர்மதி பயந்தது போல் பிருத்வியால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை... ஏனென்றால் யுக்தா அவன் இருக்கும் போது அவன் கண் முன்னே வருவதை தவிர்த்து வந்தாள்... அவன் இருக்கும் போது என்ன... அவள் எப்போதுமே அறையிலேயே அடைந்து கிடந்தாள்... அவளுக்கு ஒன்றும் அறை வாசம் புதிதில்லையே...
ஏனோ அவளுக்கு யாரோடும் இயல்பாக பழகமுடியவில்லை... செந்திலும் வளர்மதியும் தன் அன்னைக்காக தான் தன்னிடம் பேசுவது போல் தோன்றியது... இதில் ஒன்றும் தவறில்லை தான்... இதே இடத்தில் வேறு யாராவது இருந்தால் இப்படியெல்லாம் இருப்பார்களா... என்பதே சந்தேகம் தான்... பிரணதியும் முன் போல் இவளிடம் பேசுவதில்லை... அதனால் அவள் அறையிலேயே இருந்தாள்..
திருமணம் நடந்த அன்று பிருத்வியின் கோபத்தில் தன் அறையில் சாப்பிடுவதாக சொன்ன யுக்தா அன்று இரவு சாப்பிடவேயில்லை... இப்படி அடிக்கடி நடக்க வேண்டாம் என்று தான் மதி... யுக்தா அறையில் இருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... இருந்தாலும் பிருத்வி இல்லாத சமயங்களில் சாப்பிட அழைத்து வருவாள்... மற்ற நேரங்களில் பிரணதியிடம் சாப்பாடு கொடுத்தனுப்புவாள்... அவள் சாப்பிட்டாளா என்று கவனித்துக் கொள்வாள்... இயல்பாக பேச மதி முயற்சித்தாலும் யுக்தா ஏனோ சரியாக பேசுவதில்லை..
பிரணதிக்கும் பிருத்வி யுக்தா திருமணம் நடந்ததில் சந்தோஷம் தான்... அந்த சப்னா இந்த வீட்டு மருமகளாக வராமல் போனதே மகிழ்ச்சி தான்... ஆனாலும் அந்த சம்பவத்திற்கு பிறகு யுக்தாவிடம் சாதாரணமாக பேச அவளுக்கு தயக்கமாக இருந்தது... அதுமட்டுமில்லாமல் தன் அண்ணன் யுக்தா மேல் கோபமாக இருப்பதால் எங்கே தான் இயல்பாக யுக்தாவிடம் பேசினால் அண்ணனுக்கு பிடிக்காதோ என்று அதிகம் பேசுவதில்லை...
செந்திலும் யுக்தாவின் சங்கடத்தை புரிந்து அவளிடம் தேவைக்கேற்ப பேசினார்... பிருத்வியோ யுக்தா என்ற ஒருத்தி வீட்டில் இல்லை என்பது போல் நடந்துக்கொண்டான்...
இந்நிலையில் மாதவனும் சுஜாதாவும் இரண்டு மாதம் முடிந்த நிலையில் திரும்பவும் நியூயார்க் செல்ல முடிவெடித்தனர்... அதற்கு முன் யுக்தாவை பார்த்து விட்டு போக மூவரும் வருவதாக தெரிவித்தனர்....
அவர்கள் யுக்தாவை பார்ப்பதற்காக வருகின்றனர்... இந்த நேரத்தில் கோபத்தோடு நீ யுக்தாவிடம் நடந்துக் கொண்டாளோ... இல்லை அவள் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை என்று உளரிக் கொண்டிருந்தாளோ... நன்றாக இருக்காது.. ஏற்கனவே திருமணம் முடிந்ததும் கோவிலில் நீ சொல்லாமல் கொல்லாமல் சென்றது எல்லோருடைய மனதிற்கும் கஷ்டமாக இருக்கிறது என்று வளர்மதி பிருத்வியிடம் தன்மையாக பேசி அவனை அவர்கள் வரும் நேரத்தில் இருக்க வைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்...
எனக்கு கோபம் யுக்தா மீது தான் பெரியவர்களிடம் இல்லை... அன்றைக்கு ஏதோ கோபத்தில் அப்படி செய்துவிட்டேன்... இன்றைக்கு அவர்கள் கஷ்டப்படுவது போல் நடந்துகொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்தான் பிருத்வி... வளர்மதிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...
மாதவன், சுஜாதா, சாவித்திரி மூவரும் வீட்டிற்கு வந்தனர்... யுக்தாவும் அன்று அறைவாசத்தை விடுத்து வெளியில் இருந்தாள்... திருமணமான புதிய தம்பதிகள் ஒருவாரத்திற்கு பிறகு தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...
பெரியவர்கள் ஒருவருக்கொருவர் இயல்பாக பேச தயங்கினர்... பிறகு சுஜாதா தான் பேச்சை ஆரம்பித்தாள்...
"மதி... அவசரமா இந்த கல்யாணம் நடந்ததால யுக்தாக்கு நாங்க ஒன்னும் செய்யல... இதுல 3 லட்சம் இருக்கு... இதை நீங்க வாங்கிக்கனும்..."
"என்ன சுஜா.. இதையெல்லாம் நாங்க எதிர்பார்த்தோமா... இப்படி பணம் கொடுக்கனும்னு என்ன அவசியம்..."
"நீங்க எதிர்பார்க்கலைன்னாலும் எங்க பொண்ணுக்கு நாங்க செய்ய வேண்டாமா... அதைப்பத்தி யோசிச்சப்ப தான்... அக்கா குத்தகை பணமும், இவ்வளவு நாள் எங்க வீட்டு வாடகை பணமும் செலவு போக மீதி பாங்க்ல இருக்குன்னு சொன்னாங்க... அதான் நாங்க கிளம்பறதுக்குள்ள இதை கொடுத்துட்டு போலாம்னு வந்தோம்..."
"சுஜா... இனி யுக்தா எங்க வீட்டு பொண்ணு... அவளுக்கு என்ன செய்யனுமோ அதெல்லாம் நாங்களே செய்வோம்... உங்க திருப்திக்காக இந்த பணத்தை வாங்கறோம்... அதை யுக்தா பேர்லயே பேங்க்ல போட்டு வைக்கறோம்... அவளுக்கு தேவைன்னா அதை யூஸ் பண்ணிக்கிட்டோம்..." என்று செந்தில் இருவருக்கும் தீர்வாக பதிலளித்தார்.
பிறகு சாதாரணமாக கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர்... பிறகு யுக்தாவிடம் விடைப்பெற்று செல்வதற்காக அவளை தனியே அழைத்துச் சென்றனர்... அவள் அவர்களை பிருத்வியின் அறைக்கு அழைத்துச் சென்றாள்..
பிருத்வி போட்ட கண்டிஷனால் தான் மதி இருவருக்கும் தனி தனி அறை கொடுத்தாள்... ஆனால் இது மாதவனுக்கோ.. சுஜாதாவுக்கோ தெரிய வேண்டாம் என்று நினைத்தாள்... ஏற்கனவே இருக்கும் சங்கடங்களால் கஷ்டப்படுவது போதாதென்று இதெல்லாம் அவர்களுக்கு தெரியவேண்டாம் என்று நினைத்தாள்... அதனால் பிருத்வியிடமும் யுக்தாவிடமும் இது அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று சொல்லி வைத்திருந்தாள்..