13. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன்
பெண்ணே..உலகில் யாருக்குமே நிகழக்கூடாத கொடுமையான நிகழ்வு உனக்கு நிகழ்ந்து விட்டது.இனி யாராலும் அதனை மாற்ற இயலாது.ஆனாலும் மன உறுதியொடு நீ வாழ்ந்துதான் ஆகவேண்டும்.எந்த ஒரு ஐயத்திற்கும் விடை ஒன்று உண்டு.விடை காண முடியா புதிர் ஏதும் கிடையாது.உன் கேள்விக்கான விடையை இதோ நான் சொல்கிறேன் கேட்பாயாக..
நற்குணங்கள் வாய்ந்த பெண்ணே..சற்று நேரம்...உன்னோடு வந்திருக்கும் இவ்விரு ஆண்களும் வெளியே இருக்கட்டும்.நீ மட்டுமாய் இவ்விடம் இருந்தால் போதும்எனச் சொல்லி பணியாட்கள் இருவரை அழைத்து இவ்விருவரையும் சற்று நேரம் வெளியே அழைத்துச் செல்லுங்கள்.அழைக்குபோது அழைத்து வந்தால் போதும் எனச் சொல்ல அவர்களிருவரும் அவ்வாறே அழைத்துச் செல்லப்பட்டனர்.அவர்கள் அவ்விடம் விட்டு அகன்ற பின் மீண்டும் ஆரம்பித்தான் குதிரைவீரன்...பெண்ணே..எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பர்.ஒரு மனிதனின் சிறப்பு அவன் சிரசிற்குள் பொதிந்திருக்கும் மூளையைப் பொருத்துதான் இருக்கும்.சிரசு இன்றி முண்டத்தால் மட்டும் எவ்விதத்திலும் இயங்க முடியாது.எதையும் பகுத்துண்டு அறியும் ஆற்றல் சிரசினுள் இருக்கும் மூளைக்கு மட்டுமே உண்டு.சிலர் மனிதனின் இதயம்தான் எதையும் சிந்திக்கிறது.இதயத்தில் தோன்றும் எண்ணமே மனிதனின் அவயங்களை இயக்குகிறது என்பர்.அது தவறான சிந்தனை ஆகும்.மூளையே எதையும் செய்ய கட்டளை இடுகிறது.அக்கட்டளைப்படியே உடல் இயங்குகிறது.மூளை இயங்காவிட்டால் மனிதனின் வெறும் முண்டம் மட்டும் எவ்விதத்திலும் இயங்க முடியாது.அம் மூளையே இன்னார் நமக்கு எந்தவிதத்தில் உறவு என்பதை அறியும்.எனவே சுந்தரேசனின் சிரசு எந்த உடலோடு பொருந்தியுள்ளதோ அவ்வுடலுக்கு உரியவரை நான் விசாரிக்க விரும்புகிறேன் என்றான்.சபை மூச்சு விடவும் மறந்து குதிரைவீரனையே பார்த்தவாறு இருந்தது.
குதிரைவீரன் பணியாட்களுக்குக் கட்டளை இட சுந்தரேசனின் சிரசு பொருத்தப்பட்ட உடலோடு கூடியவன் உள்ளே அழைத்து வரப்பட்டான்.
அவன் மன்னன் குதிரைவீரனுக்குத் தலை வணங்கி நின்றான்.முகத்தில் குழப்பமே மேலோங்கியிருந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…
படிக்க தவறாதீர்கள்...
குழப்பத்தோடு நின்றிருந்த அவனைப் பார்த்து குதிரைவீரன் ஐயா! நீங்கள் மிகவும் குழப்பமடைந்தவர்போல் தெரிகிறீர்கள்.உங்களின் குழப்பமும்,தவிப்பும் நியாயமானதுதான்.எல்லாம் விதிப்படியே நிகழ்கிறது.விதியை வெல்ல யாரால் முடியும்?என்றாலும் நாம் விதியோடு போராடத்தான் வேண்டியுள்ளது.நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் உங்கள் மூளை சொல்லும் பதிலை சற்றும் தாமதியாமல் சொல்வீர்கள் என நம்புகிறேன். சொல்வீர்கள்தானே?என வினவினான்.
நிச்சயமாய்ச் சொல்வேன் மன்னா என்றான் குணசேகரன் உடலோடும் சுந்தரேசன் சிரசோடும் இருந்த அம்மனிதன்.
இதோ நிற்கிறாளே ஹேமாவதி இவள் உங்களுக்கு எவ்விதத்தில் உறவு?உங்களின் பகுத்தறியும் மூளை இவள் உங்களுக்கு எவ்விதத்தில் உறவானவள் எனச் சொல்கிறது எனக் கேட்டான்.
இவள் என் தங்கை,என் சகோதரி ஹேமாவதி என அரை வினாடிகூட தாமதிக்காமல் சொன்னான் அம்மனிதன்.
ஆக உங்களின் இதயம் இருக்கும் உடல் குணசேகரனுக்கு உரியது.மூளை இருக்கும் சிரசு உங்களுடையது.
இவள் உங்களின் தங்கை என்பதை உங்களின் இதயம் சொல்லியதா?அல்லது உங்களின் சிரசுக்குள் இருக்கும் மூளை சொல்லியதா?கேட்டான் குதிரைவீரன்.
மன்னா..என் தற்பொழுதைய உடலாகிய முண்டத்தில் இருப்பது குணசேகரனின் இதயம்.அவ்விதயம் இவள் தனக்கு எவ்விதத்தில் உறவு என்பதை பகுத்தறிந்திருந்தால் நான் இவள் என் மனைவி என்றல்லவா சொல்லியிருப்பேன்?ஆனால் அப்படியில்லாமல் இவ்வுடலில் எனக்குச் சொந்தமான என் சிரசு இருப்பதால் அதற்குள் இருக்கும் என் மூளை இவளை என் சகோதரியாக என் தங்கையாக அல்லவா பகுத்தறிந்து சொல்கிறது?எனவே மூளை சொல்வதே சரியானதாக இருக்கும் என்றே நம்புகிறேன்.அதனால் மன்னா..
இவள் என் தங்கை ஹேமாவதி..இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்றான் உறுதியாக.
அவனின் மிக உறுதியான பேச்சையும் முடிவையும் கேட்டு கூடியிருந்த அவையோர் அனைவரும் ஹோ.. ஹோ எனச் சப்தமிட்டுக் கைதட்டினர்.
அவர்களை அமைதியாய் இருக்கும்படி கைகளால் சைகை காட்டிய குதிரைவீரன் குணசேகரனின் சிரசோடும் சுந்தரேசனின் உடலோடு இருக்கும் மற்றொருவரை அழைத்துவரும்படி கூற உள்ளே வந்தான் அவன்.
அவனிடமும் குதிரைவீரன் ஹேமாவதி உங்களுக்கு என்ன உறவாய் உங்களின் இதயமும் மூளையும் சொல்கின்றன?எனக்கேட்டான்.
மன்னா..சுந்தரேசனின் உடலோடும் அந்த உடலுக்குள் இருக்கும் இதயத்தோடும் நிற்கும் என்னால் இவளை என் தங்கை எனச் சொல்ல முடியவில்லை.எனக்குச் சொந்தமான என் சிரசுக்குள் இருக்கும் என் மூளை இவளை என் மனைவியாக மனைவி ஹேமாவதி என்றே சொல்கிறது.நான் என் மூளை சொல்வதையே உண்மை என நம்புகிறேன்.எனவே இவள் என் மனைவி என்றான் மிகவும் உறுதியாக.