17. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ
சப்னா அப்படி பிருத்வியை கூட்டிக் கொண்டு போனதும்.... செந்தில் அவரது துறையை சேர்ந்த நண்பர்களுக்கு யுக்தாவை அறிமுகப்படுத்தி வைத்தார்...
பின் மதியும் செந்திலும் அவர்களோடு பேச ஆரம்பித்துவிட்டார்கள்...
பிரணதிக்கும் அங்கே யாரோ தெரிந்த ஒரு தோழி கிடைக்கவே அவளோடு பேச ஆரம்பித்துவிட்டாள்... அங்கே இவர்களை தவிர மற்றவர்களை யுக்தாவுக்கு தெரியாததால்.... அந்த ஹோட்டலில் செய்திருந்த அலங்காரத்தை வேடிக்கைப் பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்தாள்... அப்போது "Mrs. சம்யுக்தா பிருத்விராஜ்" என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்...
அங்கே கொஞ்சம் உயரமாய் ஒரு ஆடவன் நின்றுக்கொண்டிருந்தான்... பார்த்தால் பிருத்வியின் வயது தான் இருக்கும் அவனுக்கு... இவளைப் பார்த்து புன்னகைத்தப்படி நின்றிருந்தான்...
பொதுவாக தெரியாதவர்களிடம் அவள் பேசுவதில்லை... இப்போதோ அவள் கேரக்டர் பத்தி ஆளாளுக்கு குறை சொல்வதால் தேவையில்லாமல் யாரோடும் பேசுவது நல்லதில்லை என்று தோன்றியது...
ஆனால் அவனை பார்த்தால் ஒன்றும் பெண்களிடம் வழிந்துக் கொண்டு பேசுபவன் போல் இல்லை.... நட்பான புன்னகை தான் அவனிடம்.... அதுவும் அவன் இவளை அழைத்தது... இவளே பிருத்வியின் மனைவியாக வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டிருந்தாள்... எதிர்பாராத விதமாக அவன் மனைவியானாள்... இதில் அவன் அப்படி அழைத்தது அவள் மனதில் அவள் அறியாமலே சந்தோஷம் அளித்தது....
"ஹலோ சம்யுக்தா.... என்ன ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க..."
"இல்லை என்னோட பேர் உங்களுக்கு எப்படி தெரியும்னு யோசிச்சேன்... நீங்க யாருன்னு எனக்கு தெரியல... ஒருவேளை மாமா என்னை எல்லோருக்கும் இண்ட்ரடீயூஸ் செஞ்சு வைக்கும் போது பார்த்தீங்களா..??"
"இல்லை அதுக்கு முன்னாடியே உங்களை எனக்கு தெரியும்..."
முன்னாடியே தெரியுமா..?? இங்க இவளுக்கு இவள் குடும்பம், பிருத்வி குடும்பம், தேவா இவர்களை தவிர வேறு யாரையும் தெரியாதே... இவளோடு இந்தியாவில் இருந்து வந்து படித்தவர்களும் சென்னையை சேர்ந்தவர்கள் இல்லை... பின் இவனுக்கு இவளை எப்படி தெரியும்... மனதுக்குள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்...
"என்ன யுக்தா திரும்பவும் யோசனையா..?? உங்களை எல்லாரும் யுக்தான்னு தானே கூப்படுவாங்க...?? நானும் அப்படி கூப்பிடலாம் இல்லையா..??"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…
படிக்க தவறாதீர்கள்...
"அப்படி கூப்பிடலாம்... ஆனா உங்களுக்கு என்னை எப்படி தெரியும்... நான் இந்தியாக்கு வந்தே 3 மாசம் தான் ஆகுது... ஒருவேளை எங்க அப்பாக்கோ இல்லை என்னோட சிஸ்டர்ஸ்க்கோ தெரிஞ்சவங்களா..??"
"ஏன் உங்க ஹஸ்பண்ட்க்கு தெரிஞ்சவனா இருக்கலாமே...."
பிருத்வி இதுவரையில் சப்னாவை தவிர வேறு யாருக்கும் இவளை அறிமுகப்படுத்தி வைத்ததில்லையே... திரும்பவும் யோசனையில் ஆழ்ந்தாள்...
இவள் அப்படி வரூனுடன் பேசிக்கொண்டிருந்த போது தான் பிருத்வி பார்த்துக் கொண்டிருந்தான்... அதே சமயம் மதியும் பிரணதியும் கூட பார்த்தார்கள்.... பிருத்வி அவர்களை பார்த்து கொண்டிருந்ததையும் மதி கவனித்தாள்.. உடனே பிரணதியை அழைத்த மதி...
"பிரணதி அங்கப் பாரு யுக்தா அந்த வரூன் கூட பேசிக்கிட்டு இருக்கா... அங்க உன்னோட அண்ணன் அதை கோபமா பார்த்துக்கிட்டு இருக்கான்.... போய் அவளை கூட்டிக்கிட்டு வா.." என்று அனுப்பிவைத்தாள்...
பிருத்வி மூலமாக இவனுக்கு நம்மை எப்படி தெரியும் என்று யுக்தா யோசித்து கொண்டிருந்த போது...
"யுக்தா திரும்பவும் யோசிக்கப் போய்ட்டீங்களா... சரி நானே சொல்றேன்.. என்னோட பேரு வரூன் கிருஷ்ணா... VK கன்ஸ்ட்ரக்ஷனோட எம்.டி.
என்னோட நிலைமையும் கிட்டத்தட்ட உங்களைப் போலத்தான்.... பிருத்வியும் நானும்..." முழுதாக முடிக்கவில்லை அதற்குள் "அண்ணி" என்று அழைத்து அங்கு வந்த பிரணதி அவர்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்...
"அதானே என்னடா இவ்வளவு நேரமா பேசிக்கிட்டு இருக்கோம்... அதுக்குள்ள கூப்பிட ஆள் வரலையேன்னு பார்த்தேன்.." என்றான் வரூன் புன்னகையோடு..
"அண்ணி நீங்க என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க... நீங்க இங்க வரூன் கூட பேசிக்கிட்டு இருக்கறத.... அங்க அண்ணன் கோபமா பார்த்துக்கிட்டு இருக்கு..." என்று அவள் அருகில் ரகசியம் போல் பேசினாள்...
உடனே திரும்பி பிருத்வி இருக்கும் இடத்தில் பார்த்தாள் யுக்தா... அவனோ அங்கிருந்து இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
பின் சத்தமாகவே வரூனுக்கு கேட்கும்படி பிரணதி... "அண்ணி அம்மா உங்களை யாருக்கோ இண்ட்ரயூஸ் பண்ணனும்னு கூப்பிட்றாங்க.." என்று அழைத்தாள்...
"ஓகே வரூன் எங்க அத்தை கூப்பிடறாங்க..." என்றாள் யுக்தா...