22. காதல் பின்னது உலகு - மனோஹரி
அனுவிடம் அவள் வீட்டில் வைத்து எதையும் பெரிதாக பேச வேண்டாம் என நினைத்திருந்தான் அதிபன். கனிமொழி முன்னிலையில் இவன் அனுவிடம் அதிகமாக உரிமை எடுப்பதை அவர் எப்படி ஏற்பார் என இவனால் முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மனதில் உள்ளது இவனுக்கு எப்படி தெரியும்?
என்றிருந்தாலும் அவரின் முன் அனுவுக்காக இவன் நின்றாக வேண்டும் தான். ஆனால் அது அனுவின் சம்மதம் கிடைத்தபின்னாய் இருக்க வேண்டும். அனு மீது உண்மையான பாசம் உள்ள அவர் அனுவுக்கு இவனோடு வாழ்வை இணைக்க சம்மதமிருகிறது என புரிந்த பின் குறுக்கே நிற்க மாட்டார். ஆனால் இப்போது எப்படி எடுப்பாரோ என்ற ஒரு நினைவு அவனுக்கு...
ஆனால் இப்படி ஒரு பரிதாப பார்வை அனு பர்க்கவும் அதன்பின் அவளிடம் பேசாதிருப்பது சரியென்றும் தோன்றவில்லை.
ஆக அவன் அனு இருந்த அறைக்குள் இப்போது நுழைய...அதே நேரம் நிலவினி “ நீங்க்ளும் இங்கயே சாப்டுங்க அத்தான்....ரொம்ப லேட்டாகிட்டு..” என்றபடி வெளியேவேறு சென்றாள்.
இப்போது இவனும் அனுவும் மட்டுமாய் அறையில்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...
படிக்க தவறாதீர்கள்...
இதற்குள் “சாரி தீபன் “ என ஆரம்பித்துவிட்டாள் அனு.
“இந்த நாட்டுக்காரங்கன்னா இப்படித்தான்னு நினைக்காதீங்கன்னு உங்களுக்கு சொல்லிட்டு நானே அப்டித்தான் இருந்திருக்கேன்....ஊர்கட்டுப்பாடு அது துன்னு சொல்லி கனி ஆன்டி அங்கிள் மேரேஜை ஏற்காதவங்க, அவங்க குடும்பத்தையும் ஏத்துக்க மாட்டாங்கன்னே நினைச்சுட்டு இருந்துட்டேன்.....இத்தனைக்கும் என்ட்ட உங்க வீட்ல எல்லோரும் அவ்ளவு நல்லா பழகினாங்க......இருந்தாலும் நம்பாம விஷயத்தை மறச்சு எல்லோருக்கும் ரொம்ப கஷ்டமா போச்சு......வெரி சாரி.....” இதை உணராமல் போனேணே என்ற தவிப்பின் விழி மொழியோடு அவள் உணர்ந்து சொல்லிக் கொண்டிருக்க
அப்போது அங்கு வந்து சேர்ந்தார் கனிமொழி.
எல்லா தப்பும் என்னுதுதான் தம்பி....அந்தகாலத்து ஊர் முறையெல்லாம் அவளுக்கு சொல்லி வளத்தது நான்தான். ஆனல் ஊர்ல இவ்ளவு மாற்றம் வந்திருக்கும்னு எனக்கு தெரியாது....அதை நான் அவளுக்கு சொல்லவும் இல்ல....ஊரோட கொஞ்சமாவது டச்ல இருந்திருந்தா இந்த சூழ்நிலையே வந்திருக்காது....என்னதான் ஊரைவிட்டு ஒதுக்கி வச்சுட்டாங்கனாலும் என் மாமனாருக்கு என் வீட்டுக்காரர் ஒரே பிள்ளை......அவர் கடைசி காலத்தை நாங்க பார்த்திருக்கனும் இல்லையா....எங்களை சேர்த்துக்க மாட்டாங்கன்ற நினைப்பிலேயே இருந்துட்டோம்.....இங்க பெரியவர் தனியா என்ன பாடுபட்டாரோ...? அவர அப்படி தனியா விடப் போய்தான் இப்ப நான் இப்படி தனியா நிக்கேன் போலயே...! எல்லாம் என் தப்புத்தான்...” என எதிலோ ஆரம்பித்து இருந்த ஆதங்கத்தை அப்படியே எதிலோ வந்து கொட்டிவிட்டார்.
தவிப்பாக போனது அதிபனுக்கு. இதென்ன பேச்சு சித்தி...? நீங்க என்ன வேணும்னா செய்தீங்க.....” என இவன் அதட்ட அதற்குள் சுதாரித்துவிட்டார் கனிமொழி.
அனு ஏற்கனவே ஏகப்பட்ட வகையில் கலங்கிப் போயிருக்கிறாள். இதில் இதை வேறு சேர்க்க வேண்டும என நினைத்தவர்
“ஆனா நாங்க இல்லைனா என்ன உங்க வீட்ல எல்லோரும் பெரிய்வரை அவ்ளவு நல்லா பார்த்துகிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன்....உங்களை அவர் தன் சொந்த பேரனாதான் நினைச்சாராம்.....சொன்னாங்க.....” என்றவர்
அனுவை நோக்கி
“அதான் சொல்றேன் அனுமா, நீ எனக்காக பார்க்கனும்னு இல்ல... இங்க குடும்ப பாசம் அதிகம்..... பெரியவரை பார்த்துக்கிட்ட மாதிரி என்னையும் பார்த்துப்பாங்க....எனக்காக வாழ்நாளெல்லாம் நீ தனிமரமா நிக்க கூடாது.... பெரியவர் அப்டி தனிய நிக்கதான் நான் காரணமாகிட்டேன்....இப்ப நீ அப்டி நிக்கவும் நான் காரணமாகிடக் கூடாது...” என முடித்தார்.
கனிமொழி இதை சொன்னதன் முக்கிய நோக்கம் தான் அனுவுக்கு மெண்டும் குடும்பம் அமைவதை விரும்புகிறேன் என குறியிட்டுக் காண்பிக்கத்தான்.
அவர் நோக்கம் திவ்வியமாய் நிறைவேற...அதிபனுக்குள் நிம்மதி அலை எனில் அரண்டு போயிருந்தாள் அனு.
தனிமையில் அந்த தாத்தா எப்படி ஏங்கினாரோ என தவிப்பாயும் அதற்கு நம்ம குடும்பம் தான் காரணமோ அதான் இன்னைக்கு இப்படி ஒரு நிலையோ என பரிதவிப்பாயும் ஒருபக்கம் இருக்கிறது எனில்....மறுபக்கமோ இந்த திருமண பேச்சில் சுருண்டிருந்தாள் அவள்.
அவளைப் பொறுத்தவரை விதவை திருமணம் தவறென்ற எண்ணமெல்லாம் துளியளவும் கிடையாதுதான். அதோடு கனிமொழி இதை இவளிடம் பேசுவதும் இது முதல் முறையும் கிடையாதுதான்.
மொத்தமாய் தான் இந்தியாவிற்கு இயடம் பெயரப் போகிறேன் என அனு முடிவாய் சொலி அதை செயல் படுத்த மும்முரமாய் முனையவுமே இதே காரணத்தை தான் இயன்ற மட்டும் சொல்லி மறுத்திருந்தார் கனிமொழி.