03. புத்தம் புது காலை - மீரா ராம்
அதிகாலை வெளிச்சம் அறையினுள் பரவ ஆரம்பித்த வேளை, கண் விழித்து பார்த்த சரயூவினால் அசையக்கூட முடியவில்லை சிறிதும்…
“என்ன ஆச்சு எனக்கு?...” என நினைத்தவளால் எழுந்து கொள்ள முடியவில்லை ஏனோ…
மெல்ல விழியை சுழற்றியவளின் பார்வையில் கணவன் தன்னருகில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பது பட, அவனின் கரம் தன்னை இறுக்கி பிடித்திருப்பதும் புரிந்தது…
கணவனால் தான் தன்னால் எழுந்துகொள்ள முடியவில்லையோ என்ற எண்ணம் தோன்றிய உடனேயே, சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள்… மணி 6 தாண்டி இருந்தது…
பட்டென்று தூக்கிவாரிப்போட எழுந்தவள், ஒரு சில நொடிகள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை… பட்டென்று மீண்டும் மெத்தையில் விழுந்தாள்….
அவளின் அசைவில் கண் திறந்த தீலீப் அவளிடம் இருந்து தன் கையை அவன் எடுத்துக்கொண்டு, மெத்தையில் இருந்து எழுந்து அவளைப் பார்த்தான்…
அவள் விழி மூடி இருப்பது தெரிந்தது…
“ஹேய்… மணி 6 தாண்டியிருச்சு… இன்னும் என்ன தூங்கிட்டு இருக்குற?... எந்திக்கலையா நீ?... சீக்கிரம் எந்திச்சு வேலையை ஆரம்பி…” என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து சென்று விட்டான்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“ஹேய்… மாமா…. என்ன பண்ணிட்டிருக்குற காலையிலேயே… அதுவும் போனில்…” என்றபடி பூஜா அர்னவின் அருகில் வந்தமர்ந்து அவனிடம் கேட்க
“ஒன்னுமில்லைடா… சும்மாதான் பார்த்திட்டிருக்கேன்…” என்றான் அவன்…
“எங்க குடு பார்ப்போம்…” என்றவள் அவனிடம் இருந்து போனை வாங்க முயற்சிக்க, அவன் தரமாட்டேன் என்பது போல் பிடித்துக்கொண்டிருக்க,
“குடு மாமா…” என்றபடி கத்திக்கொண்டிருந்தவள்,
“எந்திச்சதும், ப்ரஷ் பண்ணாம இங்க என்ன சத்தம் போட்டிட்டிருக்குற?...” என்ற தீலீப்பின் சத்தம் கேட்டு அவனை திரும்பி பார்த்தவள்,
“ஹை….. அப்பா……..” என்றபடி அவனிடம் ஓட,
அவனோ, “சரி… சரி… நீயும் பாப்பாவும் ப்ரஷ் பண்ணுங்க… அப்பா வெளியே போயிட்டு வரேன்…” என்றவன், அர்னவ் அவனைப் பார்த்ததும் எழுந்து நிற்பதைக் கண்டு,
“லீவ் போட்டுட்டு வந்தா நீ வேலைப் பார்க்குற இடத்துல திட்ட மாட்டாங்களா?...” எனக் கேட்க,
“இல்ல அவசரத்துக்கு லீவ் எடுத்தா ஒன்னும் சொல்லமாட்டாங்க….” என்றான் அர்னவ்….
“இப்போ என்ன அவசரம் வந்துடுச்சுன்னு நீ லீவ் போட்டிருக்குற?...”
“அவசிய தேவைகள் வரும்போது அவசரமா லீவ் போட வேண்டியது முக்கியம் தான்….”
“எது அவசிய தேவை?... உன் அக்காவை இங்க கொண்டு வந்து விடுறதா?...” என திலீப் அலட்சியமாய் கேட்க,
“ஆமா…” என்றான் அர்னவ்…
“ஏன் அவ தனியா வந்ததில்லையா?... பஸ் அங்க ஏத்திவிட்டா இங்க வந்துடுறப்போறா… நாலு மணி நேர டிராவலுக்கு மெனக்கெட்டு நீயும் லீவ் போட்டு வந்திருக்குற… அவளும் எதுவும் சொல்லாம இருந்திருக்கா லீவ் போடாதன்னு…. என்ன அக்கா தம்பியோ…” என சரயூவின் கணவன் சலித்துக்கொள்ள,
“வரவேண்டான்னு சிஸ் சொன்னாங்க தான்… எனக்கு தான் மனசு கேட்கலை… என்ன இருந்தாலும் கூடப்பிறந்தவனாச்சே… தனியா போறாங்கன்னா மனசுக்கு என்னவோ போல இருந்துச்சு… சில பேர் மாதிரி எந்த நேரத்திலேயும் எப்படி தனியா வந்தாலும் பரவாயில்லைன்னு என்னால விடமுடியலை…” என்ற அர்னவின் பதிலில் சுள்ளென்று கோபம் வந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை திலீப்…
“சாயங்காலம் தான பஸ்?....” என பல்லைக் கடித்துக்கொண்டு திலீப் கேட்டதிலேயே தெரிந்தது அவன் அர்னவின் மீது வெறுப்போடு இருக்கிறான் என்று…
“ஏன் மாமா?... உங்க ஊரில சாயங்காலம் மட்டும் தான் பஸ் ஓடுமா?... அதிசயமாத்தான் இருக்கு…” என்று நக்கலாக அர்னவ் சொல்லவும்,
“என்ன நக்கலா?... நான் உனக்கு ஊருக்கு சாயங்காலமா பஸ்னு கேட்டேன்…” என திலீப் கூறவும்,
“ஓ… நீங்க அதை கேட்குறீங்களா?...” என்றான் சோம்பல் முறித்தபடி அர்னவ்…
“வேற என்ன இருக்கு கேட்குறதுக்கு….” என மனதினுள் நினைத்தபடி அர்னவை ஒரு பார்வை பார்த்தவாறு நின்றிருந்த திலீப்பிடம்,
“இல்ல மாமா.. இரண்டு நாள் தங்கிட்டு போகலாம்னு தான் வந்தேன்… ஊருக்கு போகும்போது சொல்லுறேன்… நீங்க என்னை பைக்கில் கூட்டிட்டு போய் பஸ்ஸ்டாண்டில் விடுங்க… சரியா…” என அவனும் உள்ளே சிரித்துக்கொண்டு வெளியே எந்த அலம்பலும் இல்லாது சொல்ல, பற்றிக்கொண்டு வந்தது திலீப்பிற்கு…
“வேலையை கட் அடிச்சிட்டு வெட்டியா இருக்குறதுக்கு ஓகே சொன்னாங்க பார்த்தீயா?.. முதலில் அவங்களை சொல்லணும்…” என திலீப் முணுமுணுத்தது அர்னவின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது…
“சிஸ் தான் இரண்டு நாள் அங்க இருக்க முடியலை… நீயாவது அவளோட, பசங்க கூட, உங்க மாமா கூட இரண்டு நாள் இருந்துட்டு வான்னு தான் மாமா அப்பாவும் அம்மாவும் சொ….ல்…..லி…… அனுப்பி வைச்சாங்க….” என்றான் அர்னவ் அந்த சொல்லி என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து…
“எல்லாம்… என் நேரம்…” என தனக்குள்ளே நொந்தபடி அங்கிருந்து விருட்டென்று வெளியேறினான் திலீப்…