20. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி
ஆதி நார்வே சென்று சேர்ந்து பதினைந்து நாட்கள் முடிந்தது.. சென்ற முறை அவன் இங்கே வரும்போது மனதில் ஒரு எதிர்பார்ப்பும், சாதிக்கும் ஆர்வமும் இருந்தது.
ஆனால் இந்த முறை அவன் மனதில் தான் பார்க்கும் வேலை மீதான விருப்பம் இருந்தாலும், ஒரு உற்சாகமில்லா மனநிலையே இருந்தது. அதற்கு காரணம் பிரயுவிற்கும் அவனுக்குமான இடைவெளி..
அவன் ஊருக்கு சென்றபோது பிரயுவிடம் மனம் விட்டு பேசமுடியாமல் போனது அவனுக்கு வேதனையாக இருந்தது. தன் வீட்டில் பிரயுவிற்கு சரியான அங்கீகாரம் இல்லையோ என்று தோன்ற ஆரம்பித்தது.
இதுவரை பிரச்சினைகள் வந்து அதை ஒரு மாதிரி சமாளித்து இருந்தாலும், அது பெரிதாக்க படமால் இருந்தது பிரயுவால் மட்டுமே என்று புரிந்தது. சூழ்நிலை அவர்களை கட்டுபடுத்தினாலும், அவனுக்கு அந்த சூழ்நிலை உருவான விதம் மட்டும் பிடிக்க வில்லை.. தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள் தன் அன்னை மூலம் சங்கடங்களாக மாறி விட்டு இருந்ததோ என்று தோன்றியது. ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளவும் முடியவில்லை.
நார்வேயின் கிளைமேட் என்பது அங்கே வாழ்கின்ற மக்களுக்கு பழக்கமே.. அதற்கு அவர்கள் ஏற்ற முன்னேற்பாடும் செய்திருப்பார்கள்.. அந்த கலாச்சாரமும் அவர்களை அதற்கு வழி நடத்தும். ஆனால் இந்திய கிளைமேட்டிலிருந்து வருபவர்களுக்கு அது மிகவும் மன உளைச்சலை உண்டாக்க கூடியது. குளிர் காலத்தில் உறைய வைக்கும் பனியும், கோடை காலத்தில் சூரியன் மறையாத நிலையும் பைத்தியம் பிடிக்க வைக்கும். அதற்கேற்ற உணவு முறையும் ஆதியால் கடை பிடிக்க முடியாது. அதனால் உடல் சோர்வு, மனசோர்வு மிகுதியாக இருக்கும்.
கடந்த ஒன்றரை வருடங்களாக அவன் தனியாக இருப்பது தான் என்றாலும், இந்த முறை எல்லோரோடும் இருந்து விட்டு வந்தவனுக்கு இங்கே அவன் தனிமை அவனை கொன்றது. வித்யா மாமியார் சொந்த ஊருக்கு செல்லும்போது, வேனில் பிரயுவிடம் அவன் செய்த சில்மிஷங்களும், அதற்கு பிரயுவின் வெட்கமும் அந்த அனுபவம் ஆதிக்கு பிரயுவை தேடியது. அவன் அங்கே பிரயுவோடு எடுத்துக் கொண்ட போடோக்கள் மட்டுமே அவனுக்கு ஆறுதல்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...
படிக்க தவறாதீர்கள்...
இங்கே வந்து சேர்ந்த அன்று பிரயுவிடம் பேசினான். அவனுடைய நலத்தை கேட்டறிந்தவள் , அதன் பின் அவன் கேட்ட கேள்விக்கு பதில் என்ற அளவில் பேசினாள்.
அவளாக அவனுக்கு கூப்பிடுவது இல்லை. அவன் கூப்பிடும் போதும் வெறும் நல விசாரிப்பு மட்டுமே. அந்த நல விசாரிப்பும் ஒரு விலகல் தன்மையோடு இருந்தது.
இதை எல்லாம் எண்ணியவன் இன்னும் இரண்டரை வருடம் எப்படி போக்குவது என்று கவலை கொள்ள ஆரம்பித்தான். நான்கு வருடம் கழித்து அவன் இந்தியா செல்லும் போது பிரயுவின் மன நிலை என்னவாக இருக்கும்? அவர்களுக்கு இடையே ஆன இடைவெளி மிகபெரிய பள்ளமாகிவிடும் என்று பயம் வந்தது.
அவன் பதினைந்து நாட்களாக யோசித்து ஒரு முடிவு எடுத்தான். அதன் பலாபலன்கள் பற்றி மேலும் தீவிரமாக சிந்தித்து தன் கம்பெனியோடும், நண்பர்களோடும் பேசி தேவையான வேலைகளை செய்தான். அவன் செயல்களின் முடிவு தெரியாத நிலையில் அதை பற்றி அவன் யாருக்கும் சொல்லவில்லை.
ஆதியின் முடிவு அவனுக்கு சாதகமாக மாற ஆரம்பித்து இருந்தது. அதனால் அவனுக்கு காலம் வேகமாக நகர்ந்தது.
ஆனால் பிரயுவிற்கோ காலம் தள்ளுவது பெரும் பாடாகியது. அவளுக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் பிரச்சினை வர ஆரம்பித்தது.
ஆதி நார்வே சென்ற அடுத்த நாள், பிரயுவின் தங்கைகள் போனில் பேசினார்கள்.
“அக்கா.. நீங்க கூட இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கல.. என்னதான் அத்தான் வழி உறவுகள் முக்கியம் என்றாலும், நாங்க உன் கூட பிறந்தவங்க, எங்களையும் நீங்க நினைக்க வேண்டாமா? அத்தானுக்கு லீவ் குறைவுதான். அதுக்காக ஒரு டீ சாப்பிடும் நேரமாவது எங்களை வந்து பார்த்திருக்கலாம் இல்லியா? அவருக்கு அதுக்கு விருப்பம் இல்லைனாலும் நீங்களாவது சொல்லிக் கூட்டி வந்திருக்கலாம் இல்லை?”
“ஹே.. அப்படி எல்லாம் இல்லை.. நாங்களும் கிளம்பினோம். அப்போ தீடிர் என்று அவங்க சொந்தகாரங்க அதுவும் ஊரில் இருந்து வந்துட்டாங்க.. ஒன்னும் பண்ண முடியல .. உங்களுக்கு கிப்ட்ஸ் எல்லாம் வாங்கி வந்தவர், உங்களை எப்படி நினைக்காம இருப்பார்?”
“நீ என்னதான் சொல்லு.. அவர் வந்து பார்க்காதபோது அந்த கிப்ட்ஸ் எங்களுக்கு எதுக்கு ? உனக்கே தெரியும் .. உங்கள வரக்கூடாதுன்னு சொன்னதுக்காக நாங்க அந்த கல்யாணமே வேண்டாம் நு சொன்னோம். அப்புறம் எப்படியோ நடந்தது. எங்க மாமியார் உங்க நாத்தனார் குழந்தை பேர் வைக்கிற function க்கு அனுப்பி வைச்சாங்க.. அத்தான் கல்யாணத்திற்கு தான் வரல. இப்போ அட்லீஸ்ட் எங்கள வந்து பார்துட்டாவது போய் இருக்கலாம் .. இப்போ எங்க மாமியார் எங்கள கேள்வி மேல கேள்வி கேட்கறாங்க... இது எல்லாம் தேவையா? “ என்று முடித்தவர்கள் அதற்கு பின் போன் வைத்து விட்டார்கள்.
பிரயுவிற்கு வருத்தமாக இருந்தது. அவர்கள் கேட்பது சரிதான் என்றாலும், அவர்கள் கேள்வி தன் கணவனை நோக்கி எனும்போது அவளின் வேதனை அதிகம். அவளால் தன் தங்கைகளிடம் கூட ஆதியை விட்டுக் கொடுக்க முடியவில்லை.