காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலா
'
அங்கே நின்றிருந்தார் கோகுல் வீட்டு டிரைவர்!!!! கோதை அவர் யாரென புரியாமல் பார்க்க..
'வணக்கம்மா....' என்றார் அவர் மாரியாதையாக... 'நான் வாசுதேவன் சார் வீட்டிலே இருந்து வரேன். கார் கொண்டு வந்து இருக்கேன். உங்களையெல்லாம் வர சொன்னங்க... ஆறரை மணிக்கு நிச்சியதார்த்தம்ன்னு சொல்ல சொன்னாங்க...'
வியப்பும் சந்தோஷமும் மேலோங்க சில நொடிகள் தடுமாறித்தான் போனாள் கோதை
'நீங்.... நீங்க உள்ளே வந்து உட்காருங்கோ..'
'இருக்கட்டும்மா நான் கார்லே இருக்கேன்...' அவர் போய்விட உள்ளே ஓடினாள் கோதை.
'நிச்சயதார்த்தமா???' மகிழ்ச்சியுடனே திகைப்பும் மேலோங்கியது அப்பாவுக்கு. அவர்கள் வீட்டிலிருந்து இப்படி ஒரு அழைப்பை எதிர்ப்பார்க்கவே இல்லைதான் அவர். சில நிமிடங்கள் செய்வதறியாது நின்றிருந்தார் அவர்.
மெல்ல நிமிர்ந்தாள் தரையில் அமர்ந்திருந்த வேதா. அவளுக்குள்ளும் சந்தோஷ ஊற்றுகள். 'எப்படியோ தங்கையின் வாழ்கை சரியாக அமைந்தால் போதும் என்று தோன்றியது அவளுக்கு. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்'
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
நம்பவே முடியவில்லை கோதையால்!!! எல்லாம் சரியாகி விட்டதா??? கோகுலை நான் மறுபடியும் பார்க்க போகிறேனா???
அதே நேரத்தில் கோதையின் அப்பாவி மனதிற்குள்ளே சின்னதாக இன்னமொரு ஆசை. நிச்சியம் என்று தானே சொல்லி இருக்கிறார்கள்??? எனக்கு மட்டும் என்று சொல்லவில்லையே. ஒரு வேளை அக்காவுக்கும் நடந்து விடுமோ???
யோசித்தபடியே சட்டென அவளருகில் வந்தாள் கோதை. அக்கா. நீயும் கிளம்புக்கா...'
அடுத்த கட்ட யோசனை வேதாவின் மனதில் 'நான் அங்கே போவதா வேண்டாமா???' என்னதான் அவர்கள் இந்த நிச்சியதார்த்தம் நடக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தாலும் தன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை மறக்கும் அளவுக்கு அங்கே இருப்பவர்கள் பெரிய ஞானிகள் இல்லையே???
போகாமலே இருந்துவிடலாம் என்று தான் தோன்றியது. போனால் அங்கே இருப்பவர்கள் பார்வையும் வார்த்தைகளும் அவளை கூறு போட்டு விடாதா???
'சரி.... நான் போகவில்லை என்றால்??? இதே பார்வைகளும், வார்த்தைகளும் அப்பாவை தைக்காதா??? எப்படி தாங்கிக்கொள்வார் அதை?' நினைக்கும் போதே அவள் உடல் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது.
அடுத்த நொடி முடிவு செய்துக்கொண்டவளாக சொன்னாள் வேதா 'இதோ கிளம்பறேண்டா...'
'நீயுமா வேதா???' கொஞ்சம் அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டார் அப்பா 'அங்கே எல்லாரும் உன் பேர்லே கோவமா இருப்பாமா. உன்னை யாரனும் ஏதானும் சொல்லப்போறா..'
'இல்லப்பா நான் வரேன் ... கோதை நிச்சியத்தை நான் பார்க்கணும் .' உறுதியான சொன்னாள் வேதா.
'எல்லாம் நல்லபடியா நடக்கும் ஸ்ரீதரா.. கோதைக்கானும் நல்ல வாழ்கை கிடைக்கறதோன்னோ சந்தோஷமா கிளம்பு...' சொன்னார் அத்தை.
என்ன நடக்கபோகிறதோ என்று நினைக்கும் போதே அவரை பயம் உலுக்கிய போதும்... தனது இளைய மகளின் நல் வாழ்க்கைக்காகவே எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கிளம்பினார் அவர்.
அவசரம் அவசரமாக எளிமையான அலங்காரத்தில் கோதை தயாராகி வர,... பூ-பழ தட்டுகளுடனும், கிளம்பினர் அனைவரும். நிறையவே யோசனைகளுடனும் மனக்குழப்பங்களுடனும். இருந்தவர்களை சுமந்துக்கொண்டு கோகுல் வீட்டை நோக்கி பறந்துக்கொண்டிருந்தது கார்.
கார் அவர்களது வீட்டுக்குள் நுழைய, காருக்குள் இருந்த யாருடைய சுவாசமும் அவர்கள் வசம் இல்லை தான். எப்படியோ சமாளித்துக்கொண்டு ஒவ்வொருவராக இறங்க கடைசியாக இறங்கினாள் வேதா.
நகர மறுத்த கால்களையும், துடிக்க மறுத்த இதயத்தையும் தங்கையையும், அப்பாவையும் நினைத்து நினைத்து இயக்கிக்கொண்டிருந்தாள் அவள்.
அவர்கள் வீட்டு வாசல்படியை தொட்ட நிமிடம் அப்பாவின் அருகில் வந்து அவரை புன்னகையுடன் வரவேற்றார் வாசுதேவன்.
'வாங்கோ... வாங்கோ... என்ன உங்க பொண்ணு பத்திரமா ஆத்துக்கு வந்து சேர்ந்துட்டாளா??? அப்படி பதறிட்டேளே கார்த்தாலே ... நமக்கெல்லாம் பெருமாள் ஒரு கெடுதலும் வர விட மாட்டார்..' அவர் பேச பேச ஆச்சரியத்தின் உச்சியில் பேச்சிழந்து போனார் ஸ்ரீதரன்
கோதை உள்ளே நுழைந்த மறுநொடி அவள் கண்கள் கோகுலை தேட அவன் கண்ணில் தட்டுப்படவில்லை. அவள் தவிப்புடன் பார்த்தபடியே நின்றிருக்க தேவகியின் கரம் அவளை அணைத்துக்கொண்டது.
'வா ... வா... மாட்டுப்பொண்ணே... உள்ளே வா... ' புன்னகையுடன் அவளை நகர்த்திக்கொண்டு நகர்ந்தார் அவர்.
வியப்பின் விளிம்பில் நின்றவளாக விழிகள் விரிய கேட்டாள் கோதை ' உங்களுக்கெல்லாம் கோவம் போயிடுத்தா???"