வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 02 - வத்ஸலா
ரயில் சென்னையை நெருங்கிக்கொண்டிருக்க, மேல் பர்த்தில் அசந்து உறங்கிக்கொண்டிருந்தான் அவன்.
இரவு முழுவதும் உறக்கமில்லை அவனுக்கு. கீழ் பர்த்தில் உறங்கிக்கொண்டிருந்தவளை விட்டு விழி மூட விருப்பமில்லாதவனாக அவளையே ரசித்திருந்தவன், சில நிமிடங்கள் முன்னால்தான் தன்னையும் அறியாமல் உறக்கத்தை தொட்டிருந்தான். இன்னமும் அவள் அவன் முகத்தை பார்த்திருக்கவில்லை.
சில நிமிடங்களில் திடுக்கென விழித்துக்கொண்டான் அவன். ரயில் நின்றிருந்தது. 'சென்னையை அடைந்து விட்டோமா என்ன???" சட்டென அவன் திரும்பி பார்க்க கீழே அவள் இல்லை!!! எழுந்து அமர்ந்தவனின் விழிகள் அவளை பரபரவென தேடின.
ரயில் சென்னை எக்மோரை தொட்டிருக்க, தோழிகளுடன் இறங்கி சென்று விட்டிருந்தாள் அவள். துடித்துக்கொண்டிருந்த இதயம் சட்டென காணாமல் போனதைப்போல்...... வார்த்தையில் வர்ணிக்க முடியாத ஒரு வெறுமை அவனை சூழ்ந்துக்கொண்டது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
'ச்சே... எப்படி இப்படி உறங்கிப்போனேன்??? இனி எப்போது அவளை மறுபடியும் பார்க்க முடியுமென தெரியவில்லையே??? நினைக்கும் போதே உள்ளத்தின் அடி ஆழத்தில் பரவியது வலி..
தனது பையை முதுகில் மாட்டிக்கொண்டு மடமடவென ரயிலை விட்டு கீழே இறங்கினான் அவன். விழிகளை இங்கமங்கும் அவசரமாக சுழற்றினான்.
'எங்காவது தென்பட்டு விட மாட்டாளா அவள்???
'இல்லை!!! கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எங்கேயும் இல்லை அவள். அவனது கண்களிலும், உள்ளத்திலும் நிறையவே ஏமாற்றம் பரவியது. மனம் ஆறாமல் பார்வையை சுழற்றியபடியே நடந்தான் அவன்.
சென்னை மா நகரம்!!!
இந்த ஊருக்கு வர மாட்டோமா என்று அவன் ஏங்கிய நாட்கள் நிறைய உண்டு. ஆனால் இப்போது பெரிய நாட்டம் இல்லை. அவன் இப்போது இருப்பது பெங்களூரில்.
மதுரையில் ஒரு நண்பனின் வீட்டு விசேஷத்தில் கலந்துக்கொண்டு விட்டு, அந்த பெரிய பத்திரிக்கையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று இங்கே வந்து இறங்கி இருக்கிறான் அவன்!!!
சென்ற வருடம் சில திரைப்படங்களில் அவன் பாடிய பாடல்களுக்காக விருது இது. இப்போது தான் வளர்ந்து வரும் பாடகன் என்பதால் முகம் எல்லாருக்கும் அத்தனை பரிச்சயம் இல்லைதான். இந்த விழாவுக்கு பிறகு சற்று பிரபலமாக கூடும்.
.'ஒரு டாக்சி எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு செல்ல வேண்டும்'யோசித்தபடியே நடைமேடையில் அவன் நடக்க...
'வணக்கம் சார்...' கார் கொண்டு வந்து இருக்கேன்... டாக்டர் சார் அனுப்பினார்... உங்களை வேண்டிய இடத்தில இறக்கி விட சொன்னார் ' ஒரு டிரைவரின் குரல் அவனை நிறுத்தியது.
'டாக்டர் சார்....' என்ற வார்த்தை மட்டுமே போதுமானதாக இருந்தது அவனுக்கு அந்த வண்டியை அனுப்பியது யாரென தெரிந்துக்கொள்ள...
நிதானமான குரலில் சொன்னான் அவன் 'உங்க டாக்டர் சாரோட காரை அவரையே வெச்சுக்க சொல்லுங்க. எனக்கு டாக்சி பிடிச்சு போக தெரியும்ன்னு சொல்லிடுங்க...' அவன் நகர முற்பட
'சார் சார் ப்ளீஸ் சார்...' டிரைவரின் கெஞ்சலான குரல் அவனை நிறுத்தியது. 'நீங்க கார்லே ஏறலேனா எனக்கு இந்த மாசம் சம்பளம் கிடையாதுன்னு சொல்லிட்டார் சார்..... நான் பிள்ளை குட்டிகாரன் சார் ப்ளீஸ்...'
டிரைவரின் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது அவனுக்கு. இவனை எப்படி மடக்க வேண்டுமென நன்றாக அறிந்தவன் தானே அந்த டாக்டர்!!!
கொஞ்சம் சுறுசுறுவென ஏறத்தான் செய்தது இவனுக்கு 'எருமை மாடு...' அவன் உதடுகள் தன்னையும் அறியாமல் உச்சரித்தன.
'அவன் என்னை எருமை மாடுன்னு திட்டினான் வெச்சுக்கோங்க அவன் கூல் ஆயிட்டான்னு அர்த்தம் ' டிரைவரிடம் சொல்லித்தான் அனுப்பி இருந்தான் அந்த டாக்டர்.
இதழ்களில் ஓட ஆரம்பித்த புன்னகையை கஷ்டப்பட்டு மறைத்துக்கொண்டு கேட்டார் டிரைவர் 'சார் போலாமா சார்...'
சில நொடிகள் யோசித்தவன் 'சரி வாங்க...' என்று நடந்தான்
கார் ஹோடேலை அடைந்திருக்க அதிலிருந்து இறங்கியவன் தனது பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து டிரைவரிடம் நீட்டினான்.
'சார் எதுக்கு சார்???'
'உங்களுக்கில்ல... உங்க டாக்டர் சார்க்கு... கிலோமீட்டர் கணக்கு பார்த்து கொடுத்திருக்கேன். அப்புறம் ஜென்ரலா இந்த மாதிரி டப்பா வண்டிலேயெல்லாம் நான் ஏறுறது இல்லை. அடுத்த தடவை ஒரு வேளை எனக்கு வண்டி அனுப்பணும்னு நினைச்சா என் ரேஞ்சுக்கு ஏத்தா மாதிரி அனுப்ப சொல்லுங்க... அவர்கிட்டே அந்த மாதிரி கார் இருந்தா... வரட்டுமா..' சொல்லிவிட்டு நடந்தவனை வியப்புடன் பார்த்தபடி நின்றிருந்தார் அந்த டிரைவர்.
ஹோட்டல் அறையை அடைந்து அவன் குளித்து முடித்து வெளியே வந்த நேரத்தில் தட்டப்பட்டது அறைக்கதவு. அவன் கதவை திறக்க கையில் ஒரு பூங்கொத்துடன் நின்றிருந்தார் அந்த ஹோட்டல் மானேஜர். அதை அனுப்பியதும் அதே டாக்டர்தான் என்பதும் அவன் அறியாததில்லை.