08. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
திருமண வீடு களைக் கட்டியிருந்தது. மாப்பிள்ளை தீபன் க்ரே சூட்டில் அமர்க்களமாக இருக்க , நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று ரூபனும் தீபனும் கூட சூட்டில் (suit) கண்ணைக் கவர்ந்தார்கள். ஜாக்குலின் , ராஜா தம்பதியர் தங்கள் 4 வயது வாண்டு பிரின்ஸ் கூட்டத்தில் எங்கே போய் நிற்கிறானோ என அவன் மேல் ஒரு கண் வைத்தவாறு பெண் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை மேற்பார்வைப் பார்த்துக் கொண்டனர். கிறிஸ் , பிரபா இளம் ஜோடிகளுக்கு இணையாக ராஜ் இந்திராவும், தாமஸ் சாராவும் கூட ஜொலித்தனர். சுற்றிலும் மகிழ்ச்சியுணர்வு அலையலையாக பரவியிருந்தது. உறவினர்கள் அனைவரும் வீட்டை நிரப்பியிருக்க விளையாட்டும் சிரிப்புமான பேச்சுக்கள் எனக் கலகலப்பான சூழ்நிலை.
பல்வேறு பரபரப்பான வேலைக்கு நடுவிலும் ரூபனின் மனது மட்டும் எங்கோ நிலையில்லாமல் வானத்திற்கும் பூமிக்குமாக பரவசமாக துள்ளாட்டம் போட்டுக் கொண்டு இருந்தது. .
திருமணத்திற்கென உடைகள் எடுக்கச் செல்லும் போது ஜாக்குலினுக்கு எடுக்கின்ற மாதிரியே அனிக்காவிற்கும் பட்டுப் புடவையொன்று எடுத்தார் இந்திரா. தாமஸிற்கு இதில் விருப்பமில்லை. தன் மகள் உடுக்கும் விலையுயர்ந்த புடவை முதன் முதலில் தான் வாங்கி தந்ததாக இருக்க வேண்டும் என்ற உரிமை உணர்வோ, இல்லை அவள் இன்னும் சின்னப் பிள்ளைதானே அவளுக்கு எதற்கு புடவை என்னும் தயக்க உணர்வோ ஏதோ ஒன்று அவரைத் தடுக்க ,அவர் அந்த சேலையை மகளுக்கு கட்ட வேண்டாம் என மனைவியிடம் மிகவும் சொல்லிப் பார்த்தார்.
தன்னுடைய அண்ணன் வீட்டிலிருந்து எடுத்துக் கொடுத்த புடவையை உடுக்காவிட்டால் அது எப்படி? அவர்களுடைய அன்பை புறக்கணிப்பதாகாதா? என சாரா பல விதமாகச் சொல்லி அவரை சமாதானப் படுத்தி இருந்தார். அது வரை எப்படியோ தெரியாது ஆனால், மகளை சேலையில் பார்த்த நொடியில் என்னுடைய மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாளா? என்னும் ஆச்சரியத்தையும் அவர் அடைந்த புளங்காகிதத்தையும் சொல்ல வார்த்தையில்லை.
"நல்லாயிருக்காப்பா?" என்று கேட்ட அனிக்கு பதில் சொல்ல இயலாமல் உச்சந்தலையில் முத்தமிட்டு அவள் முகம் பார்த்து தலையாட்டினார்.மகளுக்கு பின்னே நின்ற சாரா, " என்ன?" என புருவம் உயர்த்திக் கேட்க அப்போதும் அவரால் பதில் சொல்ல இயலவில்லை.
" நான் அண்ணா கூட அத்தை வீட்டுக்கு போறேம்மா" எனச் சொல்லி அனி புறப்பட்டு விட்டாள். அவள் சென்றதும்
" அனி எப்படி வளர்ந்துட்டா என்ன சாரா ?"
"ஆமாங்க.. இந்த மெரூன் கலர் அவளுக்கு எடுப்பா இருக்குல்ல......."
"நீயே என் பொண்ணுக்கு கண்ணு போட்டுடுவ போல....... சும்மாவே என் மக அழகுதான், நகையெல்லாம் வேற போட்டு விட்டிருக்க, வீட்டுக்கு வந்ததும் கண் த்iருஷ்டி கழிச்சிடு சரியா..."
"இது ரொம்ப ஓவர்...... நான் அவளுக்கு கண்ணு வைக்கிறேனா, அவ உங்க மக மட்டுமில்ல என் மகளும்தான்"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ப்ரியாவின் "ஊனமறு நல்லழகே" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
மனைவியின் கோபத்தை ரசித்தவராக "தெரியும் தெரியும்" என,
"ஞாபகமிருந்தா சரி "
இருவரும் திருமண வீட்டிற்கு புறப்பட்டனர்.
முன்தினம் இரவு வரை பல்வேறு ஏற்பாடுகள் செய்து விட்டதால் அனைவரும் காலைச் சாப்பாடு சாப்பிட்ட பின்னர் பெண் வீட்டிற்கு புறப்படுவதாக இருந்தது. வருகின்ற ஒவ்வொருவரையும் வரவேற்கவும் ஒழுங்காக சாப்பிட வைக்கும் வேலையில் ஈடுபடும் போது தான் அனி கிறிஸ் மற்றும் பிரபாவுடன் வந்து இறங்கினாள்.
"கிறிஸ் அத்தான், பிரபாக்கா வாங்க வாங்க" என்றவனாக அவர்களது டோயோட்டோ இன்னோவா அருகே சென்ற ரூபன் இன்னும் பின் சீட்டில் இருந்தவளைக் கவனித்திருக்கவில்லை.
"மினியேச்சர் பாட்டி இப்போ ஒரிஜினல் பாட்டியா ஆகிட்டா அத்தான்" என ரூபன் பின்னே வந்த ஜீவன் அனிக்காவைக் கிண்டலடிக்க, கிறிஸ்ஸும் விளையாட்டாய் தீபனுக்கு ஹை ஃபைவ் கொடுத்தான்.
"ஏண்டா உனக்கு வேற வேலையில்லை அழகான பிள்ளையை பாட்டின்னு சொல்லுற" முகம் கடுத்து நின்ற அனிக்காவிற்காக பிரபா ஜீவனையும் "நீங்களும் தான் அதென்ன விளையாட்டு" என கணவனையும் அதட்டினாள்.
"என்ன அத்தான் உங்களுக்கும் திட்டு விழுது..........என கிறிஸ்ஸிடம் பேசியவாறு பிரபா முன் சீட்டில் இருந்து இறங்கியதும் அங்கே உட்கார்ந்துக் கொண்டான் தீபன். இன்னிக்கு பார்க் செய்யறதுக்கு கொஞ்சம் தள்ளிப் போகணும் எனச் சொல்ல. பிரபாவும் அனிக்காவும் இறங்கவும் இருவரும் காரை பார்க் செய்ய சென்றனர்.
உறவினர் ஒருவர் அழைக்க "அனி, நீ சேலை தெத்திடாம மெதுவா பார்த்து வா நான் ஆண்டிகிட்ட பேசிட்டு வாரேன்" என்றுச் சென்றாள் பிரபா.அனிக்காவிற்கு முதன் முதலில் சேலையை அணிந்த போது இருந்த உற்சாகம் இப்போது பயமாக ஆகி விட்டிருந்தது . அப்படியும் சேலை விலகாமலிருக்க ஸ்டாப்ளர் அடிக்காத குறையாக அம்மாவிடம் சொல்லி சுற்றிலும் பத்து சேப்டி பின்களையாவது குத்தி வைத்திருந்தாள்.