12. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி
சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக் கூடும்
முரளி கூறியதை எல்லாம் கேட்ட மதி அதிர்ச்சியில் உறைந்து போனான். தன்னை மது தவிர்ப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று பலவாறு பலமுறை சிந்தித்தவன் அது இப்படியானதொரு காரணமாக இருக்கும் என்று அவனால் எண்ணி பார்க்க இயலவில்லை. மதியின் நிலையை முரளியால் புரிந்துகொள்ளமுடிந்தது.
தன்னை ஒருவாறு நிலைப்படுத்தி கொண்டு முரளியிடம் கூறினான். "முரளி எனக்கு இந்த உண்மையை தெரிய வெச்சதுக்கு நான் உங்களுக்கு எப்படி தங் பண்றதுனு தெரியலை."
"இல்லை மதி என் தோழி சந்தோசமா இருக்கணும்னு ஒரு சுயநலம் தான் அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி இதெல்லாம் உங்ககிட்ட சொல்ல காரணம். ஒரு நல்லது நடக்கும்னா செய்த சத்தியத்தை மீறுவதில் தவறில்லைனு நான் நெனைக்கிறேன். " -முரளி
"என்னால மதுவின் நிலையை புரிஞ்சுக்க முடியுது அதே சமயம் இது எல்லாம் விட எனக்கு மது தான் முக்கியம் அது ஏன் அவளுக்கு புரியல " என்று வேதனையுடன் கூறிய மதியை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்த முரளி
"மதி நான் மதுவை முதன் முதலில் பார்த்தது எப்போன்னு தெரியுமா...ஏன் இது அவளுக்கே தெரியாது" என்றவன் எண்ண ஓட்டங்கள் இரண்டு வருடம் பின்னோக்கி செல்ல நடந்தவைகளை கூற தொடங்கினான் முரளி.
தன் தந்தை விஸ்வநாதனுடன் கிளம்பிய முரளிக்கு தான் செல்லப்போகும் இடத்தை குறித்தோ பார்க்க போகும் நபரை குறித்த எதிர்பார்ப்பு என்று எதுவும் இல்லை. சிறு வயதிலேயே தாயை இழந்தவனுக்கு தன் தந்தை தான் தாயக இருந்து வளர்த்தவர். அவரின் பேச்சை அவன் இது வரை மீறியது இல்லை. இதோ இப்போதும் தன் நண்பனின் மகள் தன் வீட்டு மருமகளாக வரவேண்டும் என்ற அவரின் ஆசை உட்பட. சென்னையில் இருந்து கிளம்பியது முதல் இதோ இன்னும் சிறிது நேரத்தில் கோவையை அடையப்போகும் இந்த நிமிடம் வரை மதுவை குறித்து தான் பேசி கொண்டிருந்தார்.
எங்கே தன் மகன் தன்னுடைய ஆசைக்காக மட்டும் இந்த திருமணத்தை ஒத்து கொள்வானோ என்ற கவலை அவருக்கு. மதுவை குறித்து சிவசண்முகம் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகளை எல்லாம் கூறிய படி வந்தார். தன்னுடைய தந்தை கூறியதை புன்னகை மாறாமல் கேட்டு கொண்டு வந்தவன் மனதில் மது என்பவள் இப்படி தான் இருப்பாள் என்ற ஒரு பிம்பம் உருவாகியிருந்தது அவளின் வீட்டை அடையும் முன்.
வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கியவனிடம் "சொல்லாம வந்துருக்கோம் முரளி. விஷயத்தை கேட்டு அவன் அப்படியே ஷாக் ஆகா போறான் பாரு " என்று கூறி சிரித்தபடியே உள்ளெ நுழைந்தார்.
வீட்டின் அசாத்திய அமைதி அப்போதே அவருக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது. அவர்களை வரவேற்று பேசிய சிவசண்முகமும் சிறிது நேரத்தில் விஸ்வநாதனிடம் தனியே பேச வேண்டுமென்று செல்ல போரடித்து அமர்ந்திருந்த வேளையில் அங்கு வைக்க பட்டிருந்த புகைப்படங்களை நோக்கி சென்றான் முரளி.
மதுவின் ஒவ்வொரு பருவத்திலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நீள் வட்ட வடிவில் அழகாக அந்த சுவரில் பதிக்க பட்டிருந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சுபஸ்ரீயின் "கிருமி" - புத்தம் புதிய தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
வயது மாறினாலும் அவளின் குறும்பும் புன்னகையும் மாறவில்லை ஒன்றிலும். ஓரு புகைப்படத்தில் கூட புகைப்படம் எடுப்பவரை மதிக்காமல் தன் வால்தனங்களை காட்டியபடி இருந்த மதுவின் புகைப்படங்கள் முரளியின் முகத்தில் புன்னகையை விதைத்தது. அவளின் அந்த புகைப்படங்கள் அவன் மனதில் காதல் உணர்வை கொண்டு வரவில்லை. மாறாக குறும்பு கொப்பளிக்கும் கண்களும் புன்னகை பூத்தாடும் அவள் முகமும் அவளிடம் நட்ப்பினை கொள்ளவே விரும்பியது.
அதற்குள் தன் தந்தையும் அவரின் நண்பரும் கீழிறங்கிவருவதை பார்த்து அவரின் அருகே சென்றவனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. அவரும் ஒன்றும் பேசவேண்டாம் என கண்களால் ஜாடை காட்ட அவருடன் இனைந்து நடந்தவன் அவர்களுடன் ஒரு அறையின் முன்னால் நின்றான்.