18. புதிர் போடும் நெஞ்சம் - உஷா
கதை படிக்கும் அன்பு உள்ளங்களே, உங்கள் பொறுமையை சோதித்து விட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்! ஒவ்வொரு நாளும் பதிவு எழுதிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஓடிக் கொண்டே இருக்கும்! குடும்பம், பொறுப்பு, ஆரோக்கியம் இதில் ஏதாவது ஒன்றில் பங்கம் வந்தாலும் என் நிலை பரிதாபத்திற்கு உரியதாகி போய்விடுகிறது! தாபதநிலையை போக்க வந்து விட்டேன்! முன் கதை சுருக்கத்தோடு ஒரு சுருக்கமான பதிவு!
இப்போதைக்குள் adhoc முறையில் கொடுக்கிறேன்! கூடிய சீக்கிரம் வார பதிவுகளாக போட முயற்சிக்கிறேன்! நன்றி! ஒற்றை வரியோ.... ஓராயிரம் வரிகளோ... பாராட்டோ... விமர்சனமோ... எதுவாக இருந்தாலும் இரவு பகல் பாராது... படைப்பு பதிவிட்டதும் ஏக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் எங்களுக்கு மறவாது கருத்துக்களை பகிருங்கள்! மகிழ்ச்சியாக இருக்கும்!
முன் கதைச் சுருக்கம்:
[நிகழ் காலம்... கடந்த காலமாக மாறி மாறி வரும் இந்த கதையின் சுருக்கும் வெவ்வேறு நிறத்தில் வித்தியாசபடுத்தி உள்ளேன்]
மேக்ஸ் சாஃப்ட் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினியராக வேலைக்கு சேர்ந்திருக்கும் ஸ்ருதி, அவர்கள் நிறுவனத்தில் CTO ஆர்யா பற்றி பல வித வதந்திகள் கேள்வி படுகிறாள்!
அதை பற்றி என்னவென்று தெரிந்து கொள்ள தன் நண்பனின் அக்கா சசியை சந்திக்கிறாள்!
சசி தன் தோழி அஞ்சனா தான் ஆர்யாவின் மனைவி என்றும் அஞ்சனா பற்றி ஸ்ருதியிடம் சொல்கிறாள்....
அஞ்சனா - மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்தவள். குடும்பத்தில் ஒரே பெண் வாரிசு என்பதால் செல்லம் அதிகம்! அத்தை மகன்கள், ஆதி, பாலாஜி, ஹர்ஷவர்தன் பெரியம்மா மகன்கள் ராகவ், கேசவ் தம்பி சிபி என்று ஆண்களோடு வளர்ந்தாலும் பாதுக்காப்பாக பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டவள்! சூது வாது அறியாதவள்!
வெளி உலக அனுபவம் குறைவு தான்! அதற்காகவே சுதந்திரம் வேண்டி அமெரிக்காவில் இருக்கும் தன் அத்தை மகன் பங்குதாரராக இருக்கும் மேக்ஸ் சாஃப்ட் நிறுவனத்திற்கு வருகிறாள்!
காதலித்து மணம் முடிக்க வேண்டும் என்று பிள்ளையாரை வேண்ட சென்ற பொழுது பரணிதரனை பார்க்கிறாள். அவனை அடுத்த முப்பது நாளில் பிள்ளையார் காட்டி விட்டால அவன் தான் தன் காதலன் என்று கண்மூடித்தனமாக முடிவெடுக்கிறாள். அதன் பின் அலுவலகம் வந்தவளை ஹர்ஷவர்தனின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆர்யமன் தன் ப்ராஜெக்ட்டில் எடுத்துக் கொள்கிறான்.
ஆர்யமன் அநாதை இல்லத்தில் வளர்ந்தவன்! தன் போலீஸ் நண்பன் வாசுவின் க்வாட்டர்ஸ்சில் வசிக்கிறான்!
சிறு வயதில் தன் மீது அன்பு காட்டிய தோழியை இழந்து, அந்த ஆறுதலை பப்பியின் புதிர்களில் கண்டு... பப்பியை தன் காதலியாக நினைக்கும் ஆர்யமனுக்கு ஏனோ அஞ்சனாவின் மீது அவனையும் அறியாது ஒரு ஈர்ப்பு உருவாவதை அவன் வளர்ச்சியில் பொறாமை படும் சசியின் காதலன் முகுந்த் கண்டு கொள்கிறான்!
அஞ்சனாவுடனான நட்பு பாலம் உருவானதை ஸ்ருதியிடம் சொல்லி முடிக்கும் சசி, அஞ்சனாவை மணம் முடித்த பின்பும் ஆர்யமனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், தன் தோழி ஏமாற்றப் படுவதாகவும் இந்த உண்மையை மறைக்க ஆர்யமன் தன்னையும், அஞ்சனாவையும் பிரித்து விட்டதாக சொல்கிறாள்!
ஸ்ருதியால் இதை நம்ப நம்ம முடியவில்லை! தன் பேட்ச்சில் உள்ளவர்களிடம் வந்து இதை சொல்ல அதில் ஒருவன் கோகிலா என்றொரு பெண்ணுடன் தான் ஆர்யமனுக்கு தொடர்பு இருப்பதாக சொல்கிறான்!
அதே நாளில் அஞ்சனாவைப் பார்க்க சென்னைக்கு வரும் அவள் அத்தை மகன் மற்றும் நண்பன் பாலாஜிக்கு தொலைந்து போன ஸ்ருதியின் அடையாள அட்டை கையில் கிடைக்கின்றது! ஸ்ருதியின் புகைப்படத்தை கண்டதும் அவன் மனதிலே அவள் ஒட்டிக் கொள்ள... அஞ்சனாவும் இதே போல தானே கண்டதும் காதலில் விழுந்தாள் என்று மனதில் வலி வர... நினைவலைகளுக்குள் செல்கிறான்..
முப்பது நாட்கள் என்று கணக்கு வைத்து அஞ்சனா பரணிதரனை எதிர்பார்த்து காத்திருக்க, அந்த பரணிதரனோ வேலை கேட்டு ஆர்யமனைப் பார்க்க வருகிறான்!
பரணிதரனால் அஞ்சனாவிற்கு தீங்கு வரப் போல உள்ளுணர்வு சொல்ல அதன் எதிர்ப்பையும் மீறி அவனை பணியில் அமர்த்த முடிவெடுக்கிறான் ஆர்யமன்!