06. என் காதல் பொன்னூஞ்சல் நீ - ப்ரியா
"அறிவில்லை???!!!" வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை பரத்தை அங்கு பார்த்ததும் அப்படியே நிறுத்திக் கொண்டாள் அனன்யா. வேதாந்த்தும் பரத்தை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவன் கண்களிலேயே தெரிந்தது.
'என்ன செய்திருக்கிறான் அவன்?? அந்த வார்த்தை.. அது அவனை 'அவள்' அப்படி கூப்பிடும் வார்த்தை.. அந்த சுருக்க பெயர்.. இவளும் அதையே தன்முன் சொல்லி பழைய ஞாபகங்களை கிளறினால், கோபம் வராதா?'
'இருந்தாலும் நீ செய்தது தவறு தான்.. அந்த பெயர் என்ன உலகிலேயே யாருக்கும் இல்லாததா? உன் பெயர் கூட அது இல்லையே.. உன்னை செல்லமாக கூப்பிட அவள் தேர்வு செய்தது தானே??!!'
மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. என்ன செய்வதாம் இப்போது?! அவளிடம் மீண்டும் மன்னிப்புக் கேட்கும் நிலை..!! அன்று அவள் வண்டியை எடுத்து சென்றதற்கே இன்னும் விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இது வேறு..
இவ்வாறு வேதாந்த் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்க, பரத் அதை விட அதிர்ச்சியில் இருந்தான்.
ராகவுடன் பேசிக் கொண்டு வந்தவன் அவன் கார் நிறுத்தியிருக்கும் பகுதிக்கு சென்று விட, அனன்யா தனக்காக காத்திருப்பாள் என்று இங்கு வருகையில் பார்த்தது அவன் காலடியில் வந்து விழுந்து தெறித்த போனை தான்..!!
சட்டென்று அதிர்ந்தவன் அது யாருடைய போன் என்று பார்க்க அனன்யாவுடையது!!
அனன்யா போனை வீசி எரிந்து விட்டாளா? இந்த போன் அவளுக்கு மிகவும் பிடித்தமானது.. முதல் முறை அவள் சம்பாதித்த பணத்தில் அவள் ஆசையாய் வாங்கிய செல்போன்.. இன்னொரு காரணமும் உண்டு..!! அது அவளுடைய தேவிற்கு பிடித்து அவன் தேர்வு செய்த தந்த போன்..!! அவளுடைய விதார்த் தேவ்..!!
அதிர்ச்சியில் இருந்து வெளி வந்ததும் பாரத்திற்கு கோபம் தான் மேலிட்டது.. என்ன தான் கோபம் என்றாலும் இப்படியே செய்வாள்??!! கோபத்துடன் அவளை நோக்கி அவன் போக, பரத்தை அங்கு எதிர் பார்த்திராத வேதாந்த் தன் பைக்கை எடுத்துக் கொண்டு விரைந்து விட்டான். அப்படி ஒரு வேகம்..!! அவன் பைக் உறுமிய ஒலி அந்த பார்க்கிங் ஏரியா முழுவதும் எதிரொலித்து அடங்குகையில் அவன் அங்கு இல்லை..!!
தன்னை நோக்கி கோபமாக வரும் நண்பனை சமாளிக்க என்ன சொல்வது இப்போது? எதற்கு இப்படி செய்தான் அவன்? அதுவும் அவளுடைய அலைபேசியை உடைத்து விட்டானே? அதுவும் விதார்த் தேவ் தேர்வு செய்து அவள் வாங்கிய கைபேசி!! தேவ்!!! அவனிடம் இருந்து வந்த அழைப்பல்லவா??!! ஐயோ அவன் என்ன சொல்ல வந்தானோ தெரியவில்லையே..!!
இவள் பரிதவிப்பு எதுவும் தெரியாமல் வந்தவுடன் சீறினான் பரத்.
"எப்போ இருந்து டீ இவ்ளோ கோபம் உனக்கு வர ஆரம்பிச்சுது? அதும் செல்போனை தூக்கி போட்டு உடைக்கிற அளவு?!!"
பதிலில்லை அவளிடம்.
"அனு.. உன்னை தான் கேட்டுட்டு இருக்கேன்? என்ன இதெல்லாம்? அதுவும் ஆபீஸ்ல?"
"..........."
"யாரவது பார்த்திருந்தா? சொல்லு என்ன ஆச்சு? யார்கூடயாவது பேசிட்டு இருந்தியா?"
"ம்ம்ம்"
"யாரு? அம்மாவா?"
"ம்ம்ம் ஹும்ம்"
"வாயை திறந்து பேசினா குறைஞ்சா போய்டுவ?"
"தேவ்!!"
அதே வார்த்தை.. அவள் சொல்லி விட்ட பின் ஒரு சில நொடிகள் மௌனம் பரத்திடம்.
அவளின் மனநிலையை வேறு மாதிரி அவன் கணக்கிட்டான். அவள் காதலன் மேல் இருக்கும் கோபத்தில் விரக்தியில் அவள் அவ்வாறு செய்து விட்டிருப்பாள் என தீர்மானித்தான். அவன் அங்கு வருகையில் கிளம்பி சென்ற வேதாந்த் அவன் மனதில் பதியவில்லை..!!
லேசாக குளம் கட்டியிருந்த அவள் விழிகளை கண்டு பொறுக்க முடியாமல் மெல்ல அவளிடம் வந்து அவள் உச்சியில் கை வைத்து வருடினான்.
"அம்மு"
"ம்ம்ம்ம்ம்" அழுகை ஆரம்பம் ஆகும் நேரம். அறிந்து கொண்டான்.
"கிளம்பு" சட்டென்று கையை எடுத்துக் கொண்டான். இங்கு இவள் இருப்பது சரி வராது. யாராவது பார்த்து என்ன எது என்று விசாரித்து இவளை புண்படுத்தி விடுவார்கள்.
அவள் அசையாமல் நிற்க,
"வண்டியில ஏறு" என்று கூறினான் வண்டியை கிளப்பி, அவன் குரலில் இருந்த அழுத்தம் அவளை இயங்க வைத்தது.
தன் வீட்டை அடைந்ததும் அவளை உள்ளே அனுப்பி விட்டு ஆதிராவிற்கு கால் செய்தான்.
"ஹலோ?"
"ஹலோ சொல்லுடா"
"எங்க இருக்க நீ?!"
"இப்போ தான் ஆபீஸ்ல இருந்து கிளம்பறேன் அங்க தான் வரலாம்னு இருந்தேன்"
"ஹ்ம்ம் நீ உங்க ரூம்க்கு போய் இரண்டு நாளுக்கு உனக்கு தேவையான டிரஸ் எடுத்துட்டு இங்கயே வந்துடு"