07. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி
கட்டிலில் துவண்டு படுத்திருந்த யாழினி அப்படியே உறங்கிப் போனாள். இரவு எட்டு மணி ஆகியும் எழவில்லை அவள். இதற்கிடையில் இருமுறை அவளின் அறைக்கு வந்த மோகன், அவளை எழுப்ப மனமின்றி திரும்பி போனார். ஆனால், இப்போது இரவு உணவு உண்ணும் நேரம் ஆயிற்றே!
"யாழினி" என்று அதட்டலாய் ஒரே முறை குரல் உயர்த்தி அவர் அழைக்கவும் "அப்பா..ஆஆ" என்று அலறியடித்து கொண்டு எழுந்தாள் யாழினி. அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் தந்தையின் முன் நின்றாள் அவள்.
"அ...அ..அப்பா சொல்லுங்கப்பா" தடுமாறிய மகளின் குரலை அவரை உலுக்கியது.. மகளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ச்சியுடன் பார்த்தபடி,
" என்ன இவ்வளோ நேரமாய் தூக்கம்? உனக்கு உடம்பு சரி இல்லையா?" என்றார். அக்கறையில் அந்த கேள்வி எழுந்திருந்தாலும், அவரின் கண்டிப்பான பார்வையும் கணீர் குரலும் அவளுக்குள் பயத்தை தான் உண்டாக்கியது.
"அ..அதெல்லாம் ஒன்னுமே இல்லப்பா" தட்டுத்தடுமாறி பதில் கூறினாள் யாழினி. அப்போ வேறென்ன காரணம் என்று மோகன் கேட்கவில்லை.!
"ஓஹோ, அப்படியா? சரி, வா சாப்பிடலாம்" என்று அவளை அழைத்தார். எப்போதும் தந்தையை எதிர்க்காமல் கப்சிப் என சொன்னதை செய்யும் யாழினிக்கு அன்று நேரமே சரியில்லை.. ஏதோ ஞாபகத்தில்,
"இல்லப்பா, எனக்கு சாப்பாடு வேணாம் ..பசிக்கல" என்றாள். எந்த ஒரு பாவத்தையும் காட்டாமல் மோகனும்,
" ம்ம் சரி நீ போ!" என்றார். அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் விட்டால் போதும் என தன் அறைக்குள் ஓடினாள் யாழினி. அறைக்குள் காலை வைத்ததுமே அவளின் நினைவெனும் அறைக்குள் ப்ரவேசித்தான் தமிழ். " எப்படி எல்லாம் பேசிட்டான் இவன்..என்ன தான் என்னை பத்தி தெரியாதுன்னாலும், என் பால் வடியும் முகத்தை நினைச்சு கூடவா அவனோட கோபம் போகல?" என்றவளின் மனம் கேட்கும்போதே, "நீ என்ன அவனிடம் அளவாகவா பேசின? உனக்கே இது ஓவரா இல்லையா" என்று மானசீகமாய் அவளுக்கு கொட்டு வைத்தது அறிவு.
அவளின் அறிவும் மனமும் அளவுக்கு மீறி வாதமிட அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தார் மோகன்.
"யாழினி.."
"அப்பா"
" இன்னும் ஒரு வாரத்துக்கு நான் உனக்கு டின்னர் சமைக்க மாட்டேன்..!"
"அப்பா!!!" வென அவள் அதிர்ச்சியில் உறைந்து பார்க்க மோகனோ,
"யெஸ்.. ஒரு வாரத்துக்கு ராத்திரி சாப்பாடு கட் உனக்கு" என்றார். அவள் அமைதியாக இருக்கவும் அவரே பேச்சினைத் தொடரந்தார்.
" சாப்பாட்டின் அருமை புரியல உனக்கு.. புரிஞ்சிருந்தால் இப்படி வேணாம்ன்னு சொல்லி இருப்பியா? இந்த சாப்பாட்டுக்காக எவ்வளவு பேர் பாடு படுறாங்க தெரியுமா? கஷ்டப்படாமல் ஒரு விஷயம் கிடைச்சா அதை பாதுகாக்கனும். இப்படி உதாசீனம் பண்ண கூடாது" என்று கண்டிப்புடன் சொன்னார் மோகன். தந்தையின் வார்த்தையில் இருக்கும் உண்மை அவளை சுட அமைதியாக தலை குனிந்து நின்றாள் யாழினி.
" அதிகமாக ஃபோன் பேசுறியே, யாரு?"
" ப்ரண்டு ப்பா"
" உன் ப்ரண்டுக்கு பேர் இல்லையா?".
" புகழ்.."
"பையனா?"
"ஆமாம் அப்பா" என்றவள் நடுக்கத்துடன் தந்தையை பார்த்தாள். தங்களது நட்பை குறித்து அப்பா என்ன சொல்ல போகிறாரோ என்ற கேள்வி அவளின் மண்டையை குடைந்தது...
" யாழினி, ப்ரண்ட்ஸ் ன்னா வெறும் நட்பு மட்டும் தானேன்னு உன்னை நான் கேட்க மாட்டேன்.. ஆண்கள் படிக்கிற கல்லூரியில் தான் நீயும் படிக்கிற. நண்பர்கள் இல்லாமல் காலேஜ் லைப் இல்லை.. பட் அதே நேரத்தில் நட்புக்குன்னு மதிப்பும் மரியாதையும் உண்டு. அது மாறாமல் இருக்கனும். மனசுல ஒரு உறவை வெச்சுக்கி்ட்டு நட்பை பாதுகாப்பு பொருளாய் பயன்படுத்த கூடாது. புகழ் உன் நண்பன்னு நீ எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சா கடைசி வரை அவன் உனக்கு நண்பனாய் இருக்க மட்டும் தான் நான் அனுமதிப்பேன்.. நல்லா யோசிச்சிக்கோ..இப்போ வேணாம், ஒரு வாரத்துக்கு பிறகு நீ டின்னர் சாப்பிடும்போது அவனையும் கூட்டிட்டு வா.. அப்போ உங்க உறவை சொல்லு..குட் நைட்"என்று சொல்லி விட்டு விடுவிடுவென அங்கிருந்து கிளம்பி விட்டார் மோகன்.
மழை பெய்து...ம்ம்ம்ஹம்ம்ம் புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது அந்த அறை. மகளின் முகத்தை பார்த்தே அவள் ஏதோ கவலையில் இருக்கிறாள் என்பதை கண்டு கொண்டு விட்டார் மோகன். அதனால் அவளின் சிந்தனையை மாற்றிடத் தான் அப்படி பேசினார் அவர். அவர் அனுமானித்ததை போலவே, தமிழை மறந்து விட்டு புகழை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.