01. பூவுக்கென்னப் பூட்டு - விமலா தேவி
ஹாய் ப்ரெண்ட்ஸ்..
நான் விமலா தேவி..
இது என்னோட முதல் தொடர்கதை..
சோ.. எதாச்சும் பிழை இருந்தா சொல்லுங்க நான் திருத்திக்கிறேன்… என் கதை பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களையும் எதிபார்க்குறேன்…
என் கதையை பப்ளிஷ் செய்யும் சில்சீக்கு என் மனமார்ந்த நன்றிகள்…
வாங்க ஃப்ரெண்ட்ஸ்.. கதைக்குள்ள போகலாம்…
தக் தக் தடக் தடக் தடக்……
தடதடக்கும் சத்தத்துடன் ட்ரெயின் விரைவாக ஓடிக்கொண்டிருந்தது.
காலை எட்டு மணிக்குண்டான குளிர்ச்சியுடன் முகத்தில் இளங்காற்று வந்து மோதியது.
ட்ரெயின் எல்லா வயதினருக்குமே ஒரு சந்தோஷமான குதூகலமான ஒன்று தான்.
சிறுவயதில் ட்ரெயினில் போக போகிறோம் என்றவுடன் வரும் குதூகலம் வார்த்தையில் விவரிக்க முடியாதது. பஸ், கார், சைக்கிள் ஏன் ஏரோப்ளேனில் சென்றாலும் அந்த சந்தோஷம் வராது.
ஆனால் அந்த குதூகலம் எல்லாம் எனக்கு முன்னால் இருந்தது போல் இப்பொழுது இல்லை. ஒரு வேளை தினமும் செல்வதாலா?. அல்லது வாழ்வின் மாற்றங்கள் காரணமா?. யோசிக்க பிடிக்கவில்லை.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெறுமனே வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு ஸ்டேஷன் நிறுத்தத்தில் ஸ்லோ மோஷனில் வண்டி நின்றது.
காலியாய் இருந்த எதிர் இருக்கையில் நடுத்தர வயது பெண்மணியும் அவர்களது கணவனும், இளமை ததும்பும் ஓர் பெண்ணும் வந்தமர்ந்தனர். அவர்கள் மகளாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்.
அந்த பெண் முகம் அழகில் மட்டும் அல்லா புன்னகையிலும் ஜொலித்தது. எதையோ யோசிப்பதும் பின் சிரிப்பதும் அவள் பெற்றோரிடம் பேசுவதுமாக இருந்தாள்.
எந்த ஒரு வாகனமும் செய்யாத ஒரு மேஜிக்கை ட்ரெயின் செய்துவிடும். எதிர் இருக்கையில் அமர்ந்தவரிடம் சகஜமாக சில நிமிடங்களில் உரையாட வைத்து விடும்,
அந்த நடுத்தர வயது பெண்மணி என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்.
“எந்த ஊருக்கு போறம்மா நீ?”
“திருநெல்வேலி ஆன்ட்டி.”
“ஓ நாங்களும் அங்கதான் போறோம். இவளுக்கு டிரெஸ் வாங்க. கல்யாணம் முடிவாகியிருக்கு.”
“ஓ சரி ஆன்ட்டி. போத்தீஸ் போங்க. அங்க சூப்பரா இருக்கும் டிரெஸ்லாம்.”
“அங்கதான்ம்மா போறோம். நீ என்ன பண்ணுறம்மா?. படிக்கிறியா?”
சிறு பெண் போன்ற என் தோற்றத்தால் அவர்கள் அப்படி கேட்டிருக்கலாம்.
நான் சிரித்தவாறே, “இல்ல ஆன்ட்டி, நான் வொர்க் பண்றேன் போஸ்ட்ல. எனக்கு மேரேஜ் ஆகி பத்து வயசுல பையன் இருக்கான்.”
“நம்பவே முடியலைமா. நீ காலேஜ் படிக்கிறன்னு நினைச்சேன்.”
மேலே என்ன பேசவென்று தெரியவில்லை. பேச்சை வளர்க்க பிரியமில்லாமல் அவர்களுக்கு ஒரு சிரிப்பை பதிலாக தந்துவிட்டு திரும்ப ஜன்னலை வெறிக்க தொடங்கினேன்.
அந்த இளம் பெண்ணின் கல்யாண குதூகலம் என்னை ஏதோ சிந்திக்க வைத்தது.
நான் எப்படி இருந்தேன்?.. என் திருமண நாட்களுக்கு முந்தின நாட்களில். சிந்தித்தேன்.. நினைவு பின்னோக்கி போனது..
“ப்ளீஸ். ப்ளீஸ். போதும் சித்தி.. நான் போட்டுட்டு இருக்குறதே அதிகம்.. சிம்பிளா இருந்தாதான் எனக்கு பிடிக்கும்..”
காலில் விழாத குறையாய் கதறி கொண்டிருந்தேன் என் சித்தி கமலாவிடம். ஆனால் யாரும் அதை கேட்டபாடில்லை..
“கூட ரெண்டு வளையல் செயின்னு இருந்தாதான பார்க்க நல்லாயிருக்கும். போட்டுக்கம்மா..” வலுக்கட்டாயமாக போட்டு விட்டார்கள்..
“மகாலஷ்மி மாதிரி இருக்கா என் பொண்ணு.. திருஷ்டி சுத்தி போடு கமலா..” முகமெல்லாம் சிரிப்பாக என் சித்தப்பா சொன்னார்..
அதை கேட்டதும் வெட்கத்திற்கு பதிலாக தூக்கம் தான் வந்தது.. என் முக வாட்டத்தை கவனித்தவராக, “ஏன்மா ஒரு மாதிரி இருக்குற?. உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?. பொண்ணு பார்க்க தான வராங்க.. உனக்கு பிடிச்சாதான் செய்வோம்.. கட்டாயப்படுத்த மாட்டோம்.. பயப்படாதம்மா..”
“ஐயோ பயமெல்லாம் இல்ல சித்தப்பா.. இப்போதான் வேலையில ஜாயின் பண்ணிருக்கேன். கொஞ்சம் சம்பாதிச்சு சேர்த்து வச்சிக்கிறேனே.. அதுக்குள்ள மேரேஜ்னா பணத்துக்கு என்ன பண்ணுவீங்க.. அண்ணாவும் பெரிசா சம்பாதிக்கலை.. அதான் யோசனையா இருக்கு சித்தப்பா..”
“ஏன்மா நாங்களாம் இருக்கோமே உன்னை சும்மா விட்ருவோமா?. அப்பா அம்மா இல்லாத பொண்ணும்மா நீ. உனக்கு நல்லது பண்ண நாங்க இருக்கோம்ல. பணத்தைப்பத்தி எல்லாம் கவலைப்படாத. அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.. என் அண்ணன் அண்ணி இருந்து செய்யவேண்டியதை செய்யுற பொறுப்பு எனக்கு இருக்கும்மா..”
“அது புரியுது சித்தப்பா.. பட் ரெண்டு வருஷம் போகட்டுமே இப்போ என்ன அவசரம்?.”
“இல்லம்மா மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். தெரிஞ்ச பையன். அவனுக்கும் அப்பா அம்மா இல்லை.. சொந்த வீடு இருக்கு.. நல்ல வேலை, கை நிறைய சம்பளம்.. நல்ல சம்பந்தம் வரும்போது தட்ட முடியலைம்மா.. உனக்கு பொருத்தமா இருப்பான்மா..”