24. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்
பொழுது புலர்ந்த அந்த காலை வேளையில், சதி ஜெய்யைத் தேடி அவன் அறைக்கே வந்துவிட்டாள்…
அவனை அங்கு காணாது முகம் வாடிப்போக நின்றவளின் தோள் மீது ஒரு கரம் விழ, லேசான திடுக்கிடலுடன் திரும்பினாள் அவள்…
“ஹேய்.. குட்டிச்சாத்தான்… காலையிலயே இங்க என்ன பண்ணுற?...”
புருவத்தை உயர்த்தியபடி இஷான் கேட்க,
“ஒன்னுமில்லண்ணா… உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்…” என்றாள் சதி சிரித்தவண்ணம்…
“எது அண்ணனா?... உன் வாயிலிருந்து மரியாதை எல்லாம் வருது?.. ஆச்சரியமா இருக்கு…”
கேலி செய்து அவனும் சிரிக்க, சதி முறைத்தாள் அவனை…
“பாருடா… முறைக்கும்போது கூட என் செல்ல தங்கச்சி அழகாதான் தெரியுறா…”
தங்கையின் மாசு மரு இல்லா முகத்தினை பார்த்து ரசித்துக்கொண்டே அவன் கூற,
“போடா… லூசு…..” என்றபடி அவனை அடிக்க கை ஒங்கினாள் சதி…
அவள் அடியிலிருந்து தப்பித்து அகன்றவன்,
“இப்போ அடி பார்ப்போம்…” என கூற, அவள் அவனின் அருகே வந்தாள்…
“உங்கூட விளையாட எனக்கு நேரமில்லை… நாங்க எல்லாரும் வெளியே போறோம்… நீ வரணும்னா வா… இல்லாட்டி போ…”
சொல்லிவிட்டு வேகமாக அவள் நடக்க, சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன்,
“ஹே… குட்டிச்சாத்தான்… எப்போ வரணும்னு சொல்லிட்டு போ….” என போய்க்கொண்டிருந்த தங்கைக்கு கேட்கும்படி சத்தமாக கூற,
“10 மணிக்கு நாங்க அங்க போயிடுவோம்… நீ எப்ப வரணுமோ அப்பவே வா…”
நிற்காமல் சொல்லிக்கொண்டே சென்றுவிட்டாள் அவளும்…
“குட்டிச்சாத்தான்…. நின்னு பதில் சொல்லுதா பாரு….” என சிரிப்புடன் திட்டிக்கொண்டே குளியலறைக்குள் புகுந்தான் இஷான்…
இரவில் தன் அருகில் ஜெய் இருந்ததை போன்று உணர்வு வந்ததிலிருந்து சதியால் ஜெய்யைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை…
அவனைப் பார்ப்பதற்காகவே வெளியே செல்ல திட்டம் போட்டு அதன்படியே அந்த அழகான பசுமை நிறைந்த மலைகளின் கீழே அவனுக்காக காத்திருந்தாள் அவளும் குடும்பத்தோடு….
பெரியவர்கள் அவரவர் பாட்டுக்கு கதை பேசி சுற்றிப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்க, தைஜூவின் அருகில் நின்று, ஜெய் வரும் பாதை பார்த்துக்கொண்டிருந்தாள் சதி அவனை நினைத்தபடி…
“என்ன மேடம்… என் அண்ணனை தேடுறீங்களா?...”
தைஜூ கிண்டலாக கேட்க, சதியோ சிரித்தாள்…
“என்னடி சிரிச்சா என்ன அர்த்தம்?... கேள்வி கேட்டா ஒன்னு ஆமான்னு சொல்லு, இல்ல இல்லன்னு சொல்லு… அதை விட்டுட்டு சிரிக்குற?...”
“நாங்க தான் தேடுறோமா?... நீங்க யாரையும் தேடலை அப்படித்தான?...”
சதி அவளை நேரடியே பார்த்து கேட்க தைஜூ தடுமாறினாள்…
“அது…. நான்….”
“போதும் இழுக்காத… வார்த்தைக்கு வலிக்கப்போகுது… விடுடி என் செல்ல தைஜூ….”
தைஜூவின் கன்னத்தைப் பிடித்துக்கிள்ளிக்கொண்டே சதி கூற, தைஜூவிற்கு புன்னகை பூத்தது…
“சுத்திப் பார்க்குற சாக்குல உன் கண்ணு பூரா இஷான் அண்ணா வருகையில தான் இருக்கு… அது மத்தவங்களுக்கு தெரியலைன்னாலும் உங்கூடவே இருக்குற எனக்கு தெரியும்டி என் செல்லக்குட்டி….”
மீண்டும் சதி கிள்ள,
“ஸ்…. ஆ… வலிக்குது சதி…..”
கன்னத்தை தேய்த்துக்கொண்டே கூறினாள் தைஜூவும்…
“அடடா… சரி இப்போ சரி ஆகிடும்… வேணும்னா பாரேன்…”
சதி முகமெங்கும் கேலியுடன் கூற, அவள் பார்வை செல்லும் பாதை உணர்ந்து திரும்பி பார்த்த தைஜூவின் கண்களில் இஷான் தென்பட்டான்…
தன்னையும் அறியாமல் அவள் கன்னங்கள் செம்மையுற, அவள் முகமோ மலர்ந்துவிட்டது…
“ஹாய்…. என்ன சுத்திப்பார்த்தாச்சா?... இல்ல இனிதானா?...”
கேட்டபடியே இஷான் அருகே வர, தைஜூ சதியின் அருகில் சென்றாள் வெட்கத்துடன்…
“கேட்குறான்லடி… பதிலை சொல்லு… எதுக்கு என் பின்னாடி வர்ற?...”
சதி கோபமாக சொல்வது போல் கூறிவிட்டு, அவளை தன் பக்கத்திலிருந்து விலக்கி இஷானின் அருகே போக சொல்ல, அவள் மறுத்தாள்…
“குட்டி பிசாசு…. என்ன நடந்துச்சு?... எதுக்கு அவகிட்ட கோபப்படுற?...”
“அது பெருசா ஒன்னுமில்ல இஷான்… தைஜூவை கன்னத்துல கிள்ளிட்டேன்… அவளுக்கு வலிக்குதாம்…”
சதி இலகுவாக சொல்ல, அவளை முறைத்த தைஜூ, சதியின் கைகளில் சற்றே அழுத்தமாக கிள்ளினாள்…