03. பூவுக்கென்னப் பூட்டு - விமலா தேவி
என்னைப் பார்த்துக்கொண்டிருந்த சந்தோஷைப் பார்த்து பதறியபடி அவன் பிடியிலிருந்து விடுபட்டு எழுந்து நின்றேன்.
“ஏங்க பார்த்து வாங்க கீழ விழுந்தா என்ன ஆகிருக்கும்” என்றான் கரிசனம் காட்டியபடி.
“நந்தி மாதிரி முன்னாடி வந்து நின்னுட்டு பேச்சப் பாரு”, மனதில் நினைத்தவாறே சாரி என்றேன்.
பின்னால் வந்து நின்ற அவன் அண்ணி, “ஏம்மா இப்படியா வந்து இடிப்பாங்க, நல்ல வேளை சந்தோஷ் உன்னைப் பிடிச்சான், இல்லன்னா விழுந்து அடிபட்டு அபசகுணம் ஆகியிருக்காது?” என்றாள் கடுகடுப்பாக.
மனதில் தோன்றிய எரிச்சலை கட்டுப்படுத்தியவளாக, சாரி என்று பொதுவாக சொல்லிவிட்டு திரும்ப எத்தனித்தவளை தடுத்து நிறுத்தியது அவன் குரல்.
“சரிங்க சத்யா நான் கிளம்புறேன். நான் போன் அடிச்சப்போ கட் பண்ணிட்டீங்க. வீட்டுக்கு போய் கால் பண்ணுறேன். பை.” என்றதும் நானும் புன்னகைத்து வைத்துக்கொண்டேன்.
ஆனால் அவன் அழைப்பு அதன் பின்பு வந்தபோதும் நான் அவ்வளவாக பேசவில்லை. ஒரு சில நல விசாரிப்புகளோடு நிறுத்திக்கொண்டேன். ஏனோ அவனிடம் சகஜமாக பேச தோன்றவில்லை. அவன் போன் வந்தாலே எரிச்சல் தான் வந்தது. அவனும் எவ்வளவோ பேச முயற்சி செய்தான். வேலை இருக்கு, தலை வலி, தூக்கம் வருது, இப்படி எதாவது செய்து போனை கட் செய்து விடுவேன்.
பொண்ணு பார்ப்பதற்காக போட்ட லீவ் முடிந்திருந்தது இன்றோடு.
லக்கேஜை பேக் செய்து கொண்டிருந்தேன். அருகில் வந்த ரமேஷ்,
“அக்கா நான் உன்னை பஸ் ஏத்தி விட்டு வரவா?” என்று கேட்டதும்
“இது என்ன புதுசா இருக்கு” என்றேன் நான்.
“சும்மாதான்க்கா வா டிராப் பண்ணுறேன்”
வண்டியில் அவனுடன் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தேன். மதுரை பஸ் இன்னும் வரவில்லை.
காத்துக்கொண்டிருந்த என்னிடம், “அக்கா ஒரு நிமிஷம் இரு, தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வரேன்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
சரி என்று தலையாட்டிவிட்டு சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“ஹாய் சத்யா” என்றபடி என் முன்னால் வந்து நின்றான் சந்தோஷ்.
“நீங்க எப்படி இங்க?.” நெஞ்சம் படபடப்பாக ஆகிவிட்டது.
“நீங்க ஊருக்கு போறீங்கன்னு ரமேஷ் சொன்னான், அதான் உங்களை சென்ட் ஆஃப் பண்ணலாமேன்னு.” இழுத்தபடி இளித்து வைத்தான்.
“ஐயோ இவன் லொல்லு ஜொல்லு தாங்க முடியலையே. மகனே ரமேஷூ வாடி உனக்கு இருக்கு கச்சேரி” என மனதினுள் முணுமுணுத்தவாறே,
“ஐயோ உங்களுக்கு ஏன் சிரமம்? நான் என்ன அமெரிக்காக்கா போறேன்? இங்க இருக்குற மதுரை தான?” என்றேன்.
அடுத்து அவன் பதில் சொல்ல எத்தனிக்கும் முன்பாகவே பஸ் வந்துவிட்டது.
“சரி கிளம்புறேன்” என தலையசைத்தபடி பஸ்ஸில் ஏறிவிட்டேன்.
“ஊருக்குப் போய் சேர்ந்ததும் போன் போடுங்க” என்று கையசைத்து விடை கொடுத்தான்.
தண்ணீர் வாங்க சென்ற ரமேஷை காணவில்லை.
வண்டியும் உடனே புறப்பட்டுவிட்டது.
ஏனோ தலை வலிக்க ஆரம்பித்தது.
“மனதிற்கு இஷ்டமில்லாத கல்யாணம். இவன் ஏன் வந்து வந்து நிக்குறான்?. இஷ்டப்பட்டு கல்யாணம் முடிவு செய்திருந்தால் இவன் வருகை இனித்திருக்குமோ? பொண்ணு பார்த்த அன்று இவனைப் பார்த்தது. அதன் பின் இவனைப் பார்க்க வேண்டும் என்ற நினைவு கூட வரவில்லை. இவனோ என்னையே நினைத்துக்கொண்டு வழியனுப்ப வந்திருக்கிறான்.சே.. பாவம் ரொம்ப நல்லவனா தான் இருக்குறான். ஆனா மனசு அவனோட செல்ல மறுக்குதே” இப்படியே யோசித்தபடி மதுரை வந்தடைந்தேன்.
அவன் நம்பருக்கு அழைத்து வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறிவிட்டு சரி பை என்று போனை வைக்கப் போன போது,
“ப்ளீஸ் ஒரு நிமிஷம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“ஹூம் சொல்லுங்க”
அவன் அடுத்து கேட்ட கேள்வியில் தான், மிக அதிர்ச்சியும் தடுமாற்றமும் அடைந்தேன்.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her next episode.
{kunena_discuss:1065}