16. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்
நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய
ஒரு வரியில் ஒருவரின் உயிர் கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது..........
“இங்க பாரு ஜானகி நம்மாத்துல இந்த மாதிரி திருமாங்கல்யம், கூரைப்புடவை வாங்க பொண்ணையும், பிள்ளையும் கூட்டிண்டு போக மாட்டா.... ஹரிதான் புரியாம பேசறான்னா நீயும் அதுக்குத் தாளம் போடற”
“பாட்டி இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்.... கூரைப்புடவைய கட்டிக்கப் போறது ஸ்வேதா, அதைப் பார்த்து ரசிக்கப் போறது நான்.... இதுல நாங்க ரெண்டு பேருமே வரக்கூடாதுன்னா எப்படி....”
“இங்கப்பாருடா ஹரி அந்தக்காலத்துல பெரியவா ஏதானும் சம்ப்ரதாயம் வச்சிருக்கானா அதுல கண்டிப்பா அர்த்தம் இருக்கும்.....”
“என்ன பாட்டி எதுக்கெடுத்தாலும் அந்தக் காலம்ன்னு சொல்றேள்... அப்போ ஒரு எட்டு வயசு, பத்து வயசுன்னு ரொம்ப சின்னதுலையே கல்யாணம் ஆகும்.... கல்யாணப் பொண்ணுக்கு புடவைன்னாலே என்னன்னு தெரியாத வயசா இருக்கும்... இவா அந்தப் பொண்ணை கடைக்குக் கூட்டிண்டு போனா பொண்ணை பார்ப்பாளா... இல்லை புடவையைப் பார்ப்பாளா... அதனால விட்டுட்டுப் போய் இருப்பா.... இப்போவும் அதையே பிடிச்சுண்டு தொங்கினா என்ன அர்த்தம்.... ”
“இங்க பாருடா ஹரி.... எதுக்கெடுத்தாலும் சும்மா இங்க நின்னுண்டு தர்க்கம் பண்ணாம உன்னோட வேலையைப் போய் பாரு..... கல்யாணம் முடியறவரை நாங்க சொல்றதைத்தான் நீ கேக்கணும்.... ராமா நாம இங்க இருந்து ஒரு நாலு மணிக்கு கிளம்பலாம்.... திநகர் திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்குப் போயிட்டு அப்பறமா கடைக்குப் போலாம்.... என்ன சொல்ற”
“அப்படியே செஞ்சுடலாம் அம்மங்கா.... ஹரி நீ வா.... பெரியவா சொன்னாக் கேட்டுக்கணும்.... உன்னோட US ஃபிரெண்ட் ஆத்துக்கு நேருல போய் கூப்பிடணும்ன்னு சொன்னியே..... நானும் வரணுமா.... அப்படின்னா இப்போவே போயிட்டு வந்துடலாம்... அப்போதான் சாயங்காலமா நாங்க கடைக்குப் போக சரியா இருக்கும்”, பேசிக்கொண்டே அவனை வெளியில் கூட்டிக்கொண்டு போனார் ராமன்.
“அப்பா இப்படி நீங்க பாட்டி சொல்றதுக்கெல்லாம் தலையாட்டாதீங்கோப்பா..... ஸ்வேதா கட்டிக்கப்போற புடவை..... நான் இல்லாட்டாக் கூட பரவாயில்லை... அவளும் வரக்கூடாதுன்னா எப்படிப்பா.....”
“ரொம்ப சாரி ஹரி.... நீ சொல்றது சரிதான்.... ஆனா அம்மங்காவை எதிர்த்துப் பேசி எனக்கு பழக்கம் இல்லை... ஸோ ப்ளீஸ் நீ ஸ்வேதாக்கு ஃபோன் போட்டுக் குடு.... நான் அவக்கிட்ட பேசி அவளை சமாதானப்படுத்தறேன்”
“ப்ச்.... என்னப்பா இது..... பாட்டிக்கு கூட நீங்க இத்தனை பயப்படலை.... சரி போட்டும்.... விடுங்கோப்பா... நானே அவக்கிட்ட பேசிக்கறேன்....”
“இல்லைடா நான் பேசறேன்...”, என்று கூற ஹரி ஸ்வேதாவை அழைத்து பின் ராமனிடம் பேசுமாறு அவனின் அலைபேசியைக் கொடுத்தான்.
“ஹலோ சொல்லுங்கோ ஹரி.... இப்போதான் அரை மணி முன்னாடி பேசினேள்.... அதுக்குள்ளே அடுத்த ஃபோன்....”, அவள் அடுத்த டயலாக் பேசுவதற்குள்......
“ஸ்வேதா நான் அப்பா பேசறேன்ம்மா.... நன்னா இருக்கியா”
“அச்சோ சாரிப்பா... நான் ஹரி நினைச்சுண்டேன்.... நான் நன்னா இருக்கேன்.... சொல்லுங்கோ திடீர்ன்னு ஃபோன் பண்ணி இருக்கேள்”
“இன்னைக்கு சாயங்காலம் எல்லாரும் புடவை வாங்கப்போறதா இருந்தது இல்லையா.... இப்போ இங்க என்னோட அம்மங்கா கூரைப் புடவை வாங்க பொண்ணும், பிள்ளையும் வரக்கூடாதுன்னு சொல்றா.... அதான்ம்மா இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேக்க ஃபோன் பண்ணினேன்”
“இங்கயும் இந்தப் பாட்டி இதே கதையைத்தான் சொல்லிண்டு இருக்காப்பா... கார்த்தால எழுந்ததுல இருந்து கௌஷிக்கும், பாட்டிக்கும் ஒரே தகராறு.... இப்போதான் அவா என்ன சொன்னாலும் சரி நாம எல்லாரும்தான் போகப்போறோம்ன்னு சொல்லி கத்திட்டு வெளில கிளம்பிப் போனான்.... அம்மாவும், அப்பாவும்தான் யார் பேச்சைக் கேக்கறதுன்னு தெரியாம முழிச்சுண்டு இருக்கா”
“ஓ அங்கயும் அதே பிரச்சனைதானா..... ஸ்வேதா உனக்கு வரணும் போல இருக்கா.... அப்படின்னா பளிச்சுன்னு சொல்லிடு... நான் ரெண்டாத்துலையும் பேசி எப்படியாவது உங்களை வர வைக்கறேன்.....”
“அப்படி எல்லாம் இல்லைப்பா..... கூரைப்புடவைல எப்படியும் பெரிய டிசைன் எல்லாம் இருக்காதே.... மத்த சாரீஸ் எல்லாம் நான்தானே பார்த்து வாங்கினேன்.... அதனால நீங்களே வாங்கிடுங்கூ..... ஆனா கலர் மட்டும் அரக்கு இல்லாம வேற வாங்கலாம்ன்னு நினைச்சேன்..... MS ப்ளூ இல்லைனா மாந்துளிர் கலர் பாருங்கோப்பா”
“எனக்கு இந்தக் கலர்லாம் அத்தனை சரியாத் தெரியாதும்மா..... ஒண்ணு பண்ணலாம்...... நாங்க கடைக்குப் போயிட்டு அங்க புடவை பார்க்கும்போது உனக்கு கௌரியை விட்டு watsapp பண்ண சொல்றேன்..... உனக்கு என்ன கலர் பிடிச்சிருக்கோ அதையே வாங்கிடலாம் சரியா.....”