வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 12 - வத்ஸலா
பரத்தின் பளீர் சிரிப்பிலும் அன்பான அணைப்பிலும் புத்தம் புதிதாய் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது போலே தோன்றியது விஷ்வாவுக்கு.
'டேய்......என்னடா திடீர்னு வந்து நிக்கறே??? 'இத்தனை நேரம் அழுத்திக்கொண்டிருந்த இறுக்கங்கள் நீங்கையதைப்போல் உற்சாமாக கூவினான் விஷ்வா.
'என் தம்பியை பார்க்க.... நான் நேரம் காலம் பார்க்கணுமா என்ன? இப்படிதான் திடீர்னு வருவேன்..' என்றான் பரத் முகமெங்கும் சந்தோஷ சிரிப்பு மிளிர..
குளிர்ந்து போனான் விஷ்வா. 'என் தம்பி..' என அவன் சொன்ன விதத்தில். இத்தனை வருடங்களாக அவன் கேட்க வேண்டும் என்று காத்துக்கிடந்த அந்த வார்த்தை காதை குளிர்வித்த அதே நேரத்தில் சடசடவென தூறி அவர்கள் இருவரையும் குளிர்விக்க துவங்கியது மழை.
'எங்கேடா உன் கார்???. சீக்கிரம் வா மழை வருது பார் ...' என்றான் பரத்.
சில நாட்களுக்கு முன் என் காரில் ஏறுவதற்கு பணம் கொடுத்தவன்தானா இவன்??? தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் விஷ்வா. கொஞ்சம் கொஞ்சமாக பழைய பரத்தை வெளியே கொண்டு வந்தாகி விட்டது.
'என்னடா அப்படி பார்க்குறே???' தன்னையே ஊடுருவிக்கொண்டிருந்தவனை பார்த்துக்கேட்டான் பரத்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஆதித்யா சரணின் "சிவன்யா" - விறுவிறுப்பான திகில் தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
'ஒண்ணுமில்லை......சீக்கிரமா எதுக்கு போகணும் அப்படியே மழையிலே நினைஞ்சிட்டே நடப்போம்.. வா..' என்று சொல்லிக்கொண்டே அவன் தோளில் கைப்போட்டு கொண்டு நடந்தான் விஷ்வா.
சொல்லி இருக்க வேண்டாம் பரத். ஆனால் அவன் நினைவுகள் அந்த புள்ளியை திடீரென தொட.... சொல்லி விட்டான் அவன்.
'ரொம்ப வருஷம் ஆச்சுடா இப்படி நாம ரெண்டு பெரும் மழையிலே நனைஞ்சு...' பழைய நினைவுகள் தொட விஷ்வாவின் முகமும் கொஞ்சம் கசங்கித்தான் போனது.
அப்போது பெரியவன் ஆறாம் வகுப்பு. சின்னவன் மூன்றாம் வகுப்பு. இருவரும் ஒரே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர். வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரம்தான் பள்ளி. மழைக்காலங்களில் மழையில் நனைந்துக்கொண்டே வீட்டுக்கு செல்வது இருவருக்கும் பிடித்த விஷயம்.
அவர்கள் வீட்டில் புதிதாக கார் வாங்கி இருந்த நேரம் அது. எப்போதும் பரத் காரில் ஏறுவது அம்மாவுக்கு பிடித்ததில்லை. இது போன்ற மழை நாட்களில் காருடன் பள்ளி வாசலில் வந்து நிற்பார் அவர். இரண்டு குழந்தைகளும் காருக்கு அருகில் ஓடி வர..
'நீ நடந்து வாடா ... 'பரத்தை பார்த்து சொல்லிவிட்டு விஷ்வாவை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு பறந்து விடுவார் அவர்.
'அம்மா அண்ணனையும் கூப்பிடு மா...' கத்திக்கொண்டே காரில் செல்லும் விஷ்வாவின் குரல் மட்டும் ,அவனை தொட்டு செல்லும்.
'ஏன் இப்படி??? என எதுவுமே புரியாமல் மழையில் நனைந்த படி நடப்பான் பரத்.
இதற்காக வீட்டில் பரத் சண்டை இட முயன்ற நாட்களில் அவனக்கு கிடைத்த அம்மாவின் முறைப்புகளும் கோபங்களும் அவனை மௌனி ஆக்கி இருந்தன. ஏதேதோ நினைவுகளுடனே நடந்துக்கொண்டிருந்தான் பரத்.
கார் அருகில் வந்தும் கதவை திறந்துக்கொண்டு யோசனைகளுடனே நின்றிருந்தவனின் கரம் பற்றி இழுத்தான் விஷ்வா.
'அடேய்... உள்ளே ஏறுடா... இது என் கார். எங்கம்மா கார் இல்லை....' ஒரு சின்ன புன்னகையுடனே ஏறி அமர்ந்தான் பரத்.
'சாரிடா....' என்றான் விஷ்வா சட்டென.
'எதுக்குடா???'
'இல்ல... அப்போ எல்லாம் எனக்கு இதெல்லாம் புரியவும் இல்ல. கொஞ்சம் வளர்ந்து எல்லாம் புரிஞ்ச பிறகு எதிர்க்கிற தைரியம் வரல.. இப்போ எல்லாம் வந்திருக்கு.... ஸோ...'
'என்ன ஸோ??? என்ன பண்ணிட்டிருக்கே நீ??? வீட்டிலே சாப்பிட ஆரம்பிச்சியா இல்லையா???'
இதமான, அன்பான சிரிப்பு விஷ்வாவிடம் 'ஆரம்பிக்கலாம். ரெண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிக்கலாம் கொஞ்ச நாளிலே...' கண் சிமிட்டினான் தம்பி.
'பச்... விஷ்வா..'
'அதெல்லாம் விடு ப்ரதர்...' இன்னைக்கு நைட் நான் உன் கூடதான் தங்க போறேன்...எங்கே தங்கி இருக்கே நீ..' என்றபடி காரை கிளப்பினான் விஷ்வா.
சரியாக அந்த நேரத்தில் அம்மாவின் கைப்பேசியில் இருந்து விஷ்வாவுக்கு அழைப்பு வர முகத்தில் யோசனைகள் படர்ந்து மறைய, ஒரு முறை பரத்தை திரும்பி பார்த்துவிட்டு துண்டித்தான் அழைப்பை. 'கட்!!!'