07. தவமின்றி கிடைத்த வரமே - லேகா
கவிஞர்களும் ஓவியர்களும், இன்னும் பலரும் புகழும் நிலவை இன்றேனும் காண்போம் என்ற நம்பிக்கையில் வந்து, அது வெற்றி பெறாததால், சோர்ந்துபோய் தன் வீடு சேர்ந்தது சூரியன். ஆதவன் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு, தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து அனைவரையும் பௌர்னமியாய் ஈர்த்தது நிலா. கீழே இருக்கும் இயற்கைக் காட்சிகளை தன் ஒளியால் டார்ச்சடித்து ரசிக்க ஆரம்பித்தது. பல தோப்புகளையும் தோட்டங்களையும் ஊர்களையும் கடந்து வந்து சேர்ந்தது அந்த சூரியகாந்தி தோட்டத்திற்கு.
சூரியனை மட்டுமே நோக்குவீரோ? என்னையும் ஒரு முறை காணுங்கள் என்று அவற்றுக்கு தன் ஆயிரமாயிரம் கரங்களால் தூதுவிட்டுக்கொண்டிருக்க, அந்த கம்யூனிகேஷனை கட் செய்து ஒரு கார் அங்கே வந்து நின்றது. “ஏன் இப்படி? நான் இன்னும் அவங்ககூட பேசவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள இப்படி வந்து தடுக்குறியே” என்று அந்த திங்கள் அங்கலாய்த்து யாரென்று பார்க்க, அந்தக் காரின் கதவைத் திறந்திறங்கி அதன் மீதே சாய்ந்து நின்றான் ப்ரனிஷ்.
முழுநிலவில் சூரியகாந்தி தோட்டத்தைப் பார்ப்பது என்னமோ ஒரு தனி அழகாய்த் தெரியும் ப்ரனிஷுக்கு. திருச்சியில் இருந்து சென்னைக்கோ, சென்னையில் இருந்து திருச்சிக்கோ இரவில் பயணம் செய்ய நேர்ந்தால், வண்டியை சிறிது நேரம் இவ்விடத்தில் நிறுத்தி ரசிக்காமல் செல்லமாட்டான். அவன் வரும் பல நேரங்களில் அது தேய்பிறையாகவோ வளர்பிறையாகவோ இருக்கும். ஆனால் இன்று, தன் முன்னே முழுமதியிருக்க, அதன் ஒளியில் அவ்விடம் ஜொலிக்க, அதை ரசிக்கக்கூடிய மனநிலையில் அவன் மனம் மட்டும் இல்லை. அன்றைய நாளில் பொங்கும் கடலலைகளுக்கு ஈடாக அவன் மனதும் பொங்கியது. மாலைவரை அமைதியாக இருந்த நெஞ்சம் இப்போது குழப்பத்தில் தவிப்பதற்குக் காரணமான அந்த காட்சி அவன் கண்முன் விரிந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
ப்ரனிஷ் ப்ரியாவிடம் அவளது பர்ஸை கொடுக்க சென்ற அன்று, அவளது வீட்டின் முன் சென்று காலிங் பெல் அழுத்த, வந்து வரவேற்றது ப்ரியா அல்ல, திவ்யா.
“இப்போதானே ப்ரனிஷ் கிளம்பிவிட்டான்னு ப்ரியா சொல்லிட்டு போனா. திரும்பவும் வந்திருக்கிறான். என்னன்னு தெரியலையே” என்று நினைத்து தான் அவனுக்கு வழிமறித்து நிற்கிறோம் என்பது கூட விளங்காமல் நின்றிருந்தாள், ப்ரனிஷாக “உள்ளே வரலாமா?” என்று கேட்கும் வரை.
“ஓஓ… சாரி. வாங்க” என்று ப்ரனிஷை உபசரித்து ஹாலில் அமரவைத்தாள் திவ்யா. “ப்ரியா கார்லயே பர்ஸ் விட்டுட்டு வந்துட்டா. அதான் குடுக்க வந்தேன்” என சொல்லிக்கொண்டே வந்தமர்ந்தான்.
“அவள பக்கத்து வீட்டு குட்டீஸ் கடத்தீட்டு போய்ட்டாங்க. உள்ளே வரகூட விடலை. இருங்க. இப்போ வந்துடுவா” என்று திவ்யா சொல்ல, “பரவாயில்லை. நீங்க கொடுத்துருங்க. நான் கிளம்பறேன்” என்று அவன் வெளியேற ஆயத்தமானான்.
“இருங்க. ரொம்ப நாள் கழித்து வந்துருக்கீங்க. ஏதாவது சாப்பிடாமல் நான் விடமாட்டேன். 5 மினிட்ஸ் வைட் செய்ங்க. ப்ரியாவும் வந்துருவா” என்று கூறி ப்ரனிஷிற்கு குளிர்பானம் கலக்க சென்றாள். (திவ்யா நம்ம ப்ரியா மாதிரி இல்லை. நல்லாவே சமைப்பா. நம்புங்க!!!)
காத்திருந்த நேரம், அவன் கண்ணில் பட்டது அந்த போட்டோ ஆல்பம். ஆர்வத்துடன் அதனை எடுத்து புரட்டினான். ப்ரியா, அருள், வானதி மூவரும் பிறந்ததிலிருந்து அவர்களது தற்போதைய வளர்ச்சி வரை அனைத்தையும் நிழற்படங்களாகக் கண்டான். வானதியின் பின்னலைப் பிடித்து இழுக்கும் அருள், அவன் காதை செல்லமாகத் திருகும் ப்ரியா, ப்ரியாவை அணைத்து நிற்கும் வானதி என அவர்கள் மூவரையும் காண்கையில், ‘நாமும் அவர்களுடன் இருந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்?’ என்று எண்ணினான். ‘இது என்ன புதுசா இருக்கு? இது வரைக்கும் நமக்கு இப்படி தோன்றியதில்லையே. அக்கா ஞாபகம் வந்துடுச்சு போல. அவளைப் பார்க்க நம்ம அப்பா அம்மா கூடவே போகவேண்டியதுதான்” என்று தன்னை நினைத்து சிரித்துகொண்டே மேலும் பக்கங்களை திருப்பினான்.
கடைசியாக இருந்த பக்கத்தில் ஒரு குடும்பப் படம் இருந்தது. ஆனால், மூன்று குட்டீஸும் மிஸ்ஸிங். அவர்களது பிறப்பிற்கு முன் எடுத்த புகைப்படம் போல. இரு ஆண்கள் இருபுறமும் நின்றிருக்க, அவர்களது நடுவில் வானதியின் சாயலில் ஒரு பெண். அநேகமாக, வானதியின் தாயாராக இருக்கக்கூடும் என்று தோன்றியது அவனுக்கு. அவர்களுக்கு கீழே, ஒரு சோபாவில் அமர்ந்த நிலையில் ஒரு தம்பதியர். அவர்களுக்கு நடுவில் இருந்த அந்த உருவத்திலேயே அவனது பார்வை நிலைகுத்தி நின்றது. அவரையே பார்த்துக்கொண்டிருந்த அவனது உதடுகள் தானாக முனுமுனுத்தன “அம்மா” என்று.
சரியாக அதே நேரம் திவ்யா வெளிப்பட்டாள். “ஓ… ப்ரியாவோட ஆல்பம் பாக்கறீங்களா? அவ பாத்துட்டு இருந்தப்போ நானும் பாக்கனும்னு வாங்குனேன். இங்கேயே வைத்துட்டேன் போல இருக்கு” என்று சொல்லி அவன் எதிரில் அமர்ந்தாள் திவ்யா.
“திவ்யா, இவங்க எல்லாம் யாரு?” என்று ப்ரனிஷ் அந்த குரூப் போட்டோவைக் காட்டிக் கேட்க, ஒவ்வொருவரைப் பற்றியும் தனக்குத் தெரிந்த அளவில் சொல்ல ஆரம்பித்தாள் திவ்யா. “இடதுபக்கம் நிற்பது ப்ரியாவின் பெரியப்பா, அவர் அருகில் இருப்பது, ப்ரியாவின் சின்னத்தை. அவருக்கு பக்கத்தில் இருப்பது ப்ரியாவின் அப்பா. அமர்ந்திருப்பது, ப்ரியாவின் தாத்தா, பாட்டி” என்று முடித்தாள்.