மூங்கில் குழலானதே – 18 - புவனேஸ்வரி
உறவு! உறவு என்பதின் பொருள் என்ன?உறவு என்பது சந்தோஷங்களை மட்டும் வாரி தந்திடும் நிலையா? துன்பத்தை தந்தால் அது உறவில்லையா?
மனிதன் இன்னொரு மனிதனின் மேல் பாசம் கொள்கிறான். பந்தம் கொள்கிறான். நீயே என் உரிமையென்று சொந்தமும் கொள்கிறான். குறைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நிறைகளை பூஜிக்கிறான்.
எல்லாம் சில காலங்களுக்கு தான்! அதே மனிதன், அந்த உறவினன் தனது எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் நடந்து கொண்டால் உடனே பிரிந்துவிடுகிறான். நிறைகளை மறைந்துவிடுகிறான். இனிய நினைவுகளை கண்ணீரால் நனைக்கிறான்.
நினைவுகளே சுமை என்கிறான்!
அன்பு என்பதின் தாத்பரியம் என்ன? என் வசம் நீ இல்லை எனில், என்னுடனான உன் நினைவுகளை நான் தூக்கி எறிந்துவிடுவேன் என்பதுவா? துன்பத்தில் உறவினை தூக்கி வீசிவிடுவதால் தான் அதை துறவு என்கிறோமா?சிந்திக்கிறேன் சகிதீபன்!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
"எதுக்கு இந்த டிராமா கீதன்? " முகத்தில் குழப்பமும் கோபம் கொப்பளிக்க கேட்டாள் மைத்ரேயி. அந்த கோபமானது அவன் மீது எழுந்ததில்லை, தன் மீதே எழுந்த கோபமது. சகிதீபனோ மௌனம் சாதித்தான். அவனால் அவனது மாயாவை புரிந்து கொள்ள முடியவில்லை. சற்று முன், மருத்துவமனையில் இருந்து வெளியேறிடும்போது, வேதனை நிரம்பிய குரலில், "இனிமே நாம எப்பவும் சந்திக்க நேரிட கூடாது ன்னு நினைக்கிறேன்" என்றிருந்தாள் அவள்.
அதிர்ந்து விட்டிருந்தான் சகி. தன்னவளின் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வருமென்று அவன் கனா கூட கண்டதில்லையே! அவள் குரலில் வேதனை மட்டுமே இருந்தது. அவன் அவளிடம் தன் காதலை இன்னும் சொல்லவில்லை. இவ்விரு காரணங்களுக்காக மட்டுமே அவன் வாய் திறவாது மௌனித்திருந்தான்.
இல்லையெனில், அங்கு நடப்பதே வேறாகி இருந்திருக்கும். "நீ எனக்கானவள் டீ ! என்னை விட்டு நீ போக முடியுமா? போகத்தான் விட்டுருவேனா? " என்று அவன் மிரட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறல்லவா? அவள் வார்த்தைக்கு பதில் பேசாமல் முன்னேறி நடந்தவனின் முகத்தில் எந்தவொரு பாவமும் இல்லை. தன் வீட்டில் நந்திதாவை இறக்கிவிட்டு காரில் மைத்ரேயியுடன் தனிமையில் பயணித்தும் அவன் வாயையே திறக்கவில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தவன் மாயாவின் கீதன் என்ற அழைப்பில் புருவம் உயர்த்தினான். சந்திக்கவே வேண்டாமன்னு சொல்லிட்டு இந்த உரிமை அழைப்பு எதற்காம்?
மைத்ரேயியின் கேள்விக்கு சகிதீபன் பதிலளிக்காமல் போக, அவள் மனமோ வாடியது. சற்று முன்பு நடந்ததை பற்றி நினைவு கூர்ந்தாள் அவள்.
விஷ்வானிகாவை கோழை என்று சகி திட்டிவிட்டு திரும்பும் போது வேணு தன் குரலை உயர்த்தி இருந்தார்.
"டேய் அவ உன் தங்கச்சிடா.. செத்து பொழைச்சு வந்துருக்குறவ கிட்ட இப்படித்தான் பேசுவியா?”
“ ..”
“நானும் ஏதோ சின்ன பசங்க விளையாட்டுக்குத்தான் எதிரும் புதிருமாக சண்டை போட்டுட்டு இருக்கீங்கன்னு பார்த்தால், என்ன மாதிரியான பேச்சு சகி இதெல்லாம்?” கோபம் கேட்டார் அவர்.
பதில் சொல்லவில்லை சகி. அவன் பார்வை தன் தாயின் மீதே நிலைக்குத்தி இருந்தது. தந்தையின் அறியாமைக்கு ஒரு வகையில் காரணமே அன்னைதானே? இரும்பு மனுஷி! ஆம் அவனைப் பெற்றவர் ஓர் இரும்பு மனுஷி தான். அவருக்கும் பல வேதனைகள் உண்டு, கவலைகள் உண்டு, குழப்பங்கள் உண்டு. ஆனால் அதை ஒரு நொடி கூட மற்றவர்களிடம், குறிப்பாக கணவரிடம் காட்டாமல் இத்தனை வருட வாழ்க்கையை வாழ்ந்து விட்டுருந்தார் அவர்.
இப்போது மீண்டும் தன் தந்தையை பார்த்தான் அவன். இப்படியும் இருக்க முடியுமா? இரத்த பந்தமாய் சொந்தமாய் இல்லாத மூன்றாவது மனிதர்களின் மனதினை துள்ளிதமாய் இனங்கண்டு அவர்களின் துயர் தீர்க்க தெரிந்தவருக்கு ஏன் தன் வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் தெரியாமல் போனது?
துரியோதனின் கண்ணுக்கு அதர்மிகளாய் தெரிந்த மக்கள், தர்மனின் பார்வையில் தர்ம ஜீவன்களாய் தென்பட்டது போல எப்போதும் ஆக்ககரமான சிந்தனைகளுடன் வலம் வரும் வேணு கோபாலன் தன் வீட்டையும் இயல்பான நிலையினில் கண்டுவிட்டார் போலும். சகிக்கு அழுவதா சிரிப்பதா? என்று தெரியவில்லை !
தோளை உலுக்கி கொண்டு இரண்டடி எடுத்து வைத்தவனை மீண்டும் தடுத்தார் வேணு..
“நான் பேசிக்கிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு போறியே சகி! என்ன இது?” என்றார் அவர். சகிதீபன் மௌனம் சாதித்து கொண்டிருந்த வேளை மைத்ரேயியின் மனம் அவனுக்காக தவித்தது.