மூங்கில் குழலானதே – 19 - புவனேஸ்வரி
நினைவுகள்! மனிதன் இயக்கியதால் தோன்றி மனிதனையே இயக்கும் ஷக்திதான் நினைவுகள். எல்லா நினைவுகளும் மகிழ்ச்சியை வழங்குவதில்லை. எல்லா நினைவுகளும் அழ வைப்பதும் இல்லை.
ஆனால் காலத்தின் வேடிக்கையை பாருங்களேன்! அழுத நினைவுகளை காலம் கடந்து நினைத்து பார்த்து சிரிக்கின்றோம். மாறாக, சிரித்த கணங்கள் எல்லாமே காலம் கடந்து நம் கண்களில் கண்ணீராய் தோன்றிவிடுகின்றன. இதை வரம் என்பதா? அல்லது சாபம் என்பதா?
எது எப்படி போனாலும், சின்னஞ்சிரு மனதினில் நினைவுகளை அடைத்துவைக்கும் வாழ்வியலில் மட்டும் மனிதன் முக்திபெறவில்லையே ! எல்லா காரியங்களுக்கும் பின்னாலும் நினைவுகள் இருக்கின்றன. அவையே நமது உந்து ஷக்தி ஆகின்றன? எனில் நாம் நினைவுகளை உருவாக்குகின்றோமா? அல்லது நினைவுகள் தான் நம்ம செதுக்குகின்றனவா? சிந்திக்கிறேன் சகிதீபன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
காரிருளை கிழித்துக் கொண்டு ப்ரவேசித்தது நிலவொளி. விஷ்வானிகா என்ற நங்கையின் வாழ்விலும் இருள் சூழ்ந்திருக்க அதை விரட்டி அடிக்கும் நோக்கத்திலேயே வந்திருந்தான் வருண்.
வருண்! வருண பகவானை போலவே ஈரத்தின் உறைவிடமாய் தோன்றுபவன். பாலைகளை சோலையாக்கிகடும் கலை அறிந்தவன். கொதிக்கும் உள்ளத்தை குளிர்விப்பவன். ( நீங்க கொடுத்த காசுக்கு இந்த அறிமுகமே ஜாஸ்தி வருண்..ஹீ ஹீ)
அவன் இதழ்களைவிட விஷ்வானிகாவின் இரு விழிகளும்தான் பெரிதாய் விரிந்தன. அவன் நெற்றியில் “V”என்ற தளும்பினைப் பார்த்ததும் அவள் மனதில் சந்தோஷம் கரை புரண்டது.
“வருண்..வருண்..” என்றபடி அவள் எழுந்திட முயல, வெகு இயல்பாய் அவள் அருகில் வந்து அவளை தூக்கி சாய்வாக அமர உதவினான் வருண். அவள் தன் பெயரை உரைத்ததில் தனக்கு இவ்வளவு சந்தோஷம் பிறக்குமா என்ன? அவனுக்கே புரியவில்லை.
நாற்காலியை இழுத்து போட்டு அவள் அருகில் அமர்ந்தவன், அசால்ட்டாக,
“என்னை தெரியுமா உங்களுக்கு?” என்றான். என்ன கேட்க முனைகிறான் இவன்? என்று குழப்பத்தில் பார்த்தாள் விஷ்வானிகா. வருண் என்ற ஒருவன் தன்னை தேடி வருவான் என்று அவள் நினைக்கவில்லைதான். சொல்லபோனால் அவளது நினைவலைகளில் அனுதினமும் வருபவன் அவன் இல்லைத்தான் .. ஆனால் அவள் அவனை மறந்ததும் இல்லையே. அன்று காஃபி ஷாப்பில் கௌதமிடம் கூட வருணைப் பற்றி தானே சொன்னாள் அவள்? அன்று நடந்த நிகழ்வு சட்டென அவள் அக கண்ணில் நிறைந்தன.
இத்தனை நாட்களாய் விஷ்வானிகாவை தொடர்ந்து வந்து காதலித்து கொண்டிருந்த கௌதமிற்கு, அவளே தன்னிடம் பேச விழைகிறாள் என்றதும் அதீத மகிழ்ச்சியாய் இருந்தது. அதே உற்சாகத்தை தன் பேச்சிலும் வெளிப்படுத்தினான்.
“ சொல்லு வினி.. இப்போவாச்சும் என் கிட்ட பேசனும்னு தோணுச்சே”
“சில விஷயங்களை முன்னாடியே சொல்லி இருக்கனும் கௌதம். சொல்லாமலேயே உங்களை தள்ளி வைக்கனும்னு நினைச்சு நான் தோத்து போயிக்கிட்டு இருக்கேன்..”
“காதலில் வெற்றி தோல்வி என்ற வார்த்தைக்கு வேலையே இல்லை கண்ணம்மா” இதமான குரலில் அவன் உரைக்க, தன் மீது யாரோ வெந்நீரை கொட்டியது போல நிமிர்ந்தாள் விஷ்வானிகா.
கௌதம் நல்லவன்தான், அழகானவன்தான். தன் மீது அதீத காதலும் கொண்டவன்தான். ஆனால் இதற்காகவெல்லாம் அவளால் அவனிடம் காதல் உறவு பாராட்டிவிட முடியவில்லை. அவளின் உள்ளுணர்வுகள் அவன் வசம் பணியவில்லை. தான் அவனுக்கு சொந்தம் என்ற ஆத்மஉணர்வு எழவில்லை.
“ காதல் என்பது ஒருத்தரை மட்டும் சார்ந்த விஷயம் இல்லை கௌதம். அது ரெண்டு மனசுக்கும் பிடிச்சு வர வேண்டிய விஷயம்.!”
“உண்மைதான்.. ஆனால் என்மேல உனக்கு காதலே வரவில்லைன்னு என்னை நம்ப சொல்லுறியா? ஏன் என் மீது உனக்கு காதல் இல்லை?”
என்னவென்று சொல்லுவாள் அவள்? இதற்காகத்தான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதே தவறு, காதல் என்பது காரணங்களுக்கு அப்பாற்பட்டது என்று கருதுபவளிடம் வராத காதலை ஏன் வரவில்லை என்று கேட்டால் என்னென்று சொல்வது?
இங்கும் அங்கும் பார்த்தவளின் மனதில் எங்கிருந்து வந்தான் தெரியவில்லை வருண். வாய்விட்டு அவன் பெயரை சொல்லியிருந்தாள் விஷ்வானிகா.
“வருண்..”
“ஆங்..?”-கௌதம்.
“நான் வருணைதான் காதலிக்கிறேன் கௌதம்..”
“வருணா.. அது யாரு ? என்ன சொல்லுற?”
“வருண் யாருன்னு உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.. ஆனால் வருணை தவிர யாருக்கும் என் மனசுல இடமில்லை. இடம் கொடுக்கவும் போறதில்லை.. நீங்க நல்லவர்..உங்க காதலை நான் மதிக்கிறேன். ஆனால் என் மனசும் உயிரும் வருணுக்குதான் சொந்தம்னு நான் எப்பவோ முடிவெடுத்துட்டேன். வருணோடு தான் என் வாழ்க்கை”என்று சொல்லும்போது கௌதம் ரௌத்திரம் அடைந்திருந்தான்.