“இவனுக்கு இன்னைக்கு என்னவோ ஆச்சு” என்று அவளது மனமோ அலாராம் அடித்தது.
“ என்னை போகவிடுங்க அபி”
“இதுதான் உன் ரூம் .. நான்தான் உன் புருஷன்.. இதெல்லாம் உன்னுடைய உரிமை.. இதையா விட்டுட்டு போகணும்னு சொல்லுற?” என்று அவன் கேட்கவும் அவளின் ஆழ்மனதில் உறங்கி கொண்டிருந்த இயலாமையும் கோபமும் சட்டென தலைத்தூக்கியது!
“ உரிமையாம் உரிமை! நீங்க எனக்கு கொடுத்த உரிமையெல்லாம் என்ன்னு மறந்து போச்சா?”
“..”
“எப்போ ஆசையா என்னங்கன்னுகூப்பிட்டு எதிரில் நின்னாலும், க்ரெடிட் கார்டை நீட்டி, என்ன ஏதாச்சும் வேணுமா? இந்தா வாங்கிக்கோன்னு நீட்டினவர் தானே நீங்க?” . இல்லையென்று சொல்ல முடியுமா அவனால்? முகத்தில் இறுக்கத்தை சுமந்து கொண்டு அவன் கொட்டிய வார்த்தைகளைத்தான் சிதறாமல் அள்ளி திருப்பி தர ஆரம்பித்தாள் நந்திதா.
உப்பு தின்னவன் அல்லவா? தண்ணீர் குடிக்கவும் தயாரானவன் போலத்தான் பேசினான்.
“ஆமா,க்ரெடிட் கார்டு கொடுத்து உன்னை கஷ்டப்படுத்தினவனும் நான் தான்! உண்மையான அன்பை பணம்கொடுத்து வாங்க முடியாதுன்னு உணர்ந்தவனும் நான்தான்!”
“ஹாஆ… இதை நீங்க எப்பவோ உணர்ந்திருக்கனும் தானே அபி? அன்பையே பிரதானமாய் கொண்ட குடும்பம் நம்ம குடும்பம். வாழ்க்கையைப் பத்தியும் அன்பை பத்தியும் கத்துக்க உங்களுக்கு வெளி உலகம் கூட ரெண்டாம் பட்சம் தான்! அதுக்கு பிரதானமே நம்ம குடும்பம் தான்!”
“..”
“என்னடா இவ இப்படி கேட்குறாளேன்னு நினைக்காம ஒரே ஒரு விஷயத்துக்கு பதில் சொல்லுங்க அபி, எங்கிட்ட கார்டை நீட்டி வலிக்க வைச்ச மாதிரி என்னைக்காவது அத்தைகிட்டயோ அல்லது விஷ்வாகிட்டயோ நீங்க நடந்து இருக்கீங்களா? உங்களால் அதை கற்பனையாவது பண்ண முடியுதா? உங்க அம்மா, தங்கைன்னா ஒரு நியாயம், உங்களையே உலகம்னு நம்பி வந்த எனக்கு இன்னொரு நியாயமா?” கோபமும் அழுகையும் அவளிடமிருந்து வெடித்தது.
அவள் அடித்திருந்தால் கூட அவனுக்கு அவ்வளவு வலித்திருக்காது. ஆனால் தற்பொழுது அவள் மொழிந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்குள் சுமையானது. பேசிட வேண்டும். அனைத்தையும் சொல்லிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனுக்குள் தீவிரமானது.
“நிதூம்மா.. என் அம்மாவையோ,தங்கையையோ, அல்லது யாரையோ மதிச்சு நடக்குற நான்,மனைவியாய் வந்த உறவிடம் மட்டும் ஏன் இப்படி நடந்துருப்பேன்? என் பக்கம்தான் நியாயம்னு சொல்ல வரல.ஆனா எனக்கும் சொல்ல சில விஷயங்களிருக்குன்னு தான் சொல்ல வரேன்” என்று ஆரம்பித்தான்.
அவள் அறியாததில்லை! அவன் உரைக்க போகும் எதுவுமே அவளுக்கு புத்தம் புதிதில்லை. சில மாதங்களுக்கு முன்னரே அதே வீட்டின் உருப்பினரின் மூலமாக அவள் அறிந்தது தான். இருப்பினும் விழிகளும் இதயமும் படபடத்தன.
கௌதமின் திடீர் இதழ் ஒற்றுதலில் இதயம் படபட்த்து போய் அமர்ந்திருந்தாள் சதீரஞ்சனி. அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்ற சில நொடிகளில் கௌதமின் முகத்தில் கள்ளத்தனம் குடியேறிட அழகாய் சிரித்தான் அவன்.
“ ஷபா.. உன்னை வாயை மூட வைக்க நான் இவ்வளவு பெரிய வேலை பார்க்கனுமா? ஓ மை காட்..”என்று அலுத்துக் கொண்டான் அவன்.
“அடிங்க.. உன்னைய எல்லாம் கட்டி வைச்சுன் உதைக்கனும்டா குரங்கு!”
“ஹெலொ மேடம் என்னத்தான் இருந்தாலும், நான் உன் வருங்கால புருஷன் .அது ஞாபகத்துல இருக்கட்டும்”என்றான் கௌதம். ரஞ்சனியோ கூலாக,
“டேய் எப்போதுமே நீ முதல்ல எனக்கு ப்ரண்ட். அப்பறம்தான் மத்த எல்லா உறவும்!” என்றாள். அவளை செல்லமாய் முறைத்தான் அவன்.
“இதான்டீ.. இதுதான் என்னை சுத்தலில் விட்டுச்சு.. “என்றான்.
“என்னடா சொல்லுற? புரியல?”
“என்ன புரியல உனக்கு? எனக்குதான் உன்னை புரியல.. புரியாமலே போச்சு”
“??”
“நீ என் மேல காட்டுற அக்கறையும் அதீத அன்பும் எத்தனையோ தடவை இது காதலா இருக்குமோன்னு யோசிக்க வெச்சு இருக்கு!” என்று கௌதம் உண்மையை ஒப்பிக்கவும்
“ஆமாவா?”என்று விழிகளை பெரிதாக்கினாள் ரஞ்சனி.
“என்ன கோமாவா?பல தடவை நினைச்சிருக்கேன்.., ஆனா அடுத்த நிமிஷமே ஏன்னா நீ என் நண்பன்னு தளபதி பட்த்துல சொல்லுற அளவுக்கு நட்பு பாராட்டுவ.!”
“..”
இது காதலான்னு ஒரு செகண்ட் யோசிச்சா கூட அது உன் நட்பை அவமதிக்கிற மாதிரி ஆகிடும்னு நினைச்சேண்டீ..”
“..”
“இதுக்கு நடுவில் விஷ்வானிகா வரவும், இந்த நட்பும் காதலோன்னு யோசிக்கிற எண்ணமே என்னை விட்டு போச்சு..மூளை மங்கிடுச்சு..”