தொடர்கதை - கானல் நீரினால் காய்ந்த நதிகள் - 04 - ரேவதிசிவா
காதலின் அர்த்தம் அறியா
இளையோராயினும் பெரியோராயினும்
அவர்களுக்கு என்றுமே
காதல் கானல்நீர்தான்...
காதல் – வார்த்தைகளில் முழுவதுமாக விவரிக்க முடியாத ஒரு வார்த்தை.எப்பொழுதும் விமர்சிப்புக்கு உள்ளாகும் பிரபலமில்லா ஒரு பிரபலம்.பலவகையான உணர்ச்சிகளின் கலவை.
இது சுரப்பியை (ஹார்மோன்) சார்ந்ததா? அல்லது ஆதியில் தோன்றியது தானா?என்று பல கேள்விகள் இவ்வார்த்தையை மையப்படுத்தி எழுந்துள்ளன.அவரவர் பார்வையில் வேறுபடும் இவ்வார்த்தை பலரின் வாழ்க்கையில் விளையாடுகிறது.
உண்மையில் காதல் அவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறதா? இல்லை காதல் என்னும் வார்த்தையால் அவர்களில் பலர் விளையாடுகிறார்களா?
இரு நபர்களின் இணைவு உடல் ரீதியாக என்னும் பொழுது அது கூடலாகிறது.
அன்பு,நேசம்,புரிதல்,கருணை,அக்கறை,கோபம்,ஏக்கம்.தவிப்பு,பிடிவாதம்,ஈர்ப்பு,ஆளுமை,மகிழ்ச்சி,நம்பிக்கை என்று பலவுடன் கூடலும் இணைந்தால் அது காதலாகிறது.
இதில் சில உணர்வுகள் நமக்கு பலரிடம் தோன்றலாம்.ஆனால் அனைத்தும் உணர்வுகளும் ஒருவரிடம் மற்றும் தோன்றினால் அவர் காதலனோ அல்லது காதலியாகவோ ஆகிறார்.
அதாவது இருவருக்கு இடையில் மட்டும் தோன்றும் உணர்வுகளின் சங்கமம்.அப்படிப்பட்ட நபர் நம்முடன் வாழ்க்கை முழுவதும் இணைந்து வரவேண்டும் என்று நினைப்பது இயற்கை.
இப்படி இணைந்து வாழ்வதற்கு சமூகம் கொடுக்கும் அங்கீகாரம்தான் திருமணம்.திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்து பயணித்தால் மட்டுமே காதல் கௌரவிக்கப்படும்.களவியல் காதலில்(உடன்போக்கு- எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் பிடித்தவரோடு சென்றுவிடுதல்) பற்பல பாதிப்புகள் வந்ததால் கற்பியல் கொண்டு திருமணம் என்பதை கொண்டுவந்தனர்.இம்முறை வந்தது பல வகையில் நன்று என்றாலும் இதற்கும் அடிப்படையாக பெரியவர்கள் விதித்த வரைமுறை அனைத்தும் சரி என்று கூறிவிட முடியாது.
அடிப்படையாக பலவற்றை சொல்லிய பெரியோர்கள் மணமக்களின் சம்மதத்தை முதன்மையாக வைக்கவில்லை என்பதுதான் கொடுமை!
காதலென்னும் உணர்வு குவியல் திருமணத்திற்கு முன்னோ அல்லது பின்னோ? பெற்றோர் தேர்ந்தெடுத்தவரோடோ அல்லது தானாக தேர்ந்தெடுத்தவரோடோ வந்தால் மட்டுமே அந்த இணைவு செழிக்கும்.இல்லையெனில் சட்டபடியான பிரிவு தம்பதியர்களிடமும், சட்டமில்லா பிரிவு காதலர்களுக்கு இடையிலும் நிச்சயம்.
பிரிவுக்கு வழி செய்யும் திருமணமும்,கூடலுக்கு மட்டும் வழிசெய்யும் காதலும் என்றும் பெருமைசேர்க்காது.அது அவ்விருவரை மட்டுமல்ல பிறரையும் பாதிக்கும்.
காதலில் ஆரம்பித்தால் திருமணத்தில் முத்திரையிட்டு தொடர வேண்டும். திருமணம் செய்தால் அங்கு காதல் தோன்றி தொடர வேண்டும். இவ்விரண்டும் நிகழ்ந்தால் மட்டுமே அங்கு இனிய இல்லறம் அமையும், இனிய இல்லறத்தால் மட்டுமே நற்மக்களைப் பெற முடியும்.நற்மக்களே நல்ல சமுகத்தை உருவாக்குவர்.சமூகம் நன்றாய் இருந்தால்தான் மனிதம் வளர்ச்சி அடையும்.
இப்பொழுது காதலின் முக்கியத்துவம் புரிகிறதா?
அதை வெறும் புணர்ச்சியோடு மட்டும் இணைத்து பலர் கொச்சைப்படுத்துகின்றனர். உடலின் உற்பதியாகும் ஹார்மோன் செய்யும் வேலை என்கின்றனர் சிலர். ஆதியில் காதல் என்ற ஒன்றே இல்லை என்கின்றனர் சிலர்.
காதலில் புணர்ச்சி என்பது ஒரு அங்கமே தவிர,அதை மட்டுமே கொண்டது காதல் அல்ல.
இனவிருத்திக்கும் ஈர்ப்புக்கும் ஹார்மோன் தேவைப்படுமே தவிர அன்பு செய்ய அல்ல.தன் இணைக்கு ஆபத்து என்றால் போராடுவதற்கும் துன்பத்தை தீர்ப்பதற்கும் ஹார்மோன் தேவைப்படுமா?நம்பிக்கை வைப்பதற்கு ஹார்மோன் தேவைப்படுமா?இவற்றுக்கு தேவைபட்டால் மட்டுமே காதலை ஹார்மோன்களோடு ஒப்பிட வேண்டும்.ஏனெனில் காதலென்பது வெறும் ஈர்ப்போடும் இனவிருத்தியோடும் முடிந்துவிடுவது அல்ல.அதனில் அக்கறை, அன்பு, நம்பிக்கை என்று பல இருக்கின்றன.
ஆதியில் தோன்றிய மனிதனிடம் காதல் என்ற வார்த்தை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதனின் பொருளை அவன் உணர்ந்து வாழ்ந்துள்ளான் என்பது உண்மை.தன் இணை மற்றும் பிள்ளைகளை காப்பதனின் பெயரென்ன? அதுவும் காதல்தானே.
ஹப்பா!முடியல...ஒரு வார்த்தை வச்சு இவ்வளோப் பெரிய லெக்சர் (விரிவுரை) எதுக்குனு பார்க்கறீங்களா? இதுவே கொஞ்சம்தான் நண்பர்களே! நான் நடுவல வந்து நிறுத்தியதால் நீங்க தப்பித்தீங்க இல்லை என்றால் உங்க நிலைமை?இந்த ஆதி அடிக்கடி வந்து உங்களை காப்பாத்துவேன். அதனால இந்த மாதிரி லெக்சருக்கெல்லாம் பயப்படாதீங்க. என்ன ஒன்று இப்ப வந்த மாதிரி கொஞ்சம் தாமதம் ஆகும்.அதை மட்டும் எனக்காக பொருத்துக்குங்க நண்பர்களே.