21. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா
ம்? ஆங்? என்.....என்ன வேணும் உங்களுக்கு? குரல் தடுமாற கேட்டாள் அர்ச்சனா.
'ஒரு லவ் லெட்டர்? சிரித்தபடியே நாற்காலியை விட்டு எழுந்தான் விவேக். இன்னும் பழைய கடன் பாக்கி இருக்கே அர்ச்சனா. ஒண்ணுமே வேண்டாம். 'உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு விவேக்ன்னு எழுதிக்கொடு போதும் என்ன சொல்றே?
உள்ளுக்குள் திடுக்கிட்டது 'மனதில் எதை வைத்துக்கொண்டு கேட்கிறான் இவன்'?
காகிதத்தையும், பேனாவையும் அவளிடம் நீட்டினான் விவேக். மெல்ல மெல்ல கை நீட்டி அதை அவள் வாங்கிக்கொண்ட விதத்திலேயே அவளுடைய தயக்கம் அவனுக்கு நன்றாய் புரிந்தது.
.'உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வசந்த்.' அன்று மனதார ரசித்து ரசித்து சொன்னேனே. இன்று அதே வார்த்தைகளை விவேக்கிற்கு எழுதி கொடுப்பதா? எப்படி முடியும் என்னால்.? அது என் வசந்துக்கு சொந்தமான வார்த்தைகள் இல்லையா? மனதிற்குள் எழுந்த தவிப்பில் சுவாசம் தடைபடுவதைப்போல் தோன்றியது அவளுக்கு.
அந்த காகிதத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.
அது எப்படி எழுதிவிட முடியும் அவளால்? என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டவன்,
என்ன அர்ச்சனா.? நீதான் உங்கப்பாவுக்காக என்னை கல்யாணமே பண்ணிக்க போறியே அப்புறம் லவ் லெட்டர் எழுதினா என்ன? கமான். கமான். பீ எ குட் கேர்ள். சீக்கிரம் எழுதிக்கொடு பார்க்கலாம் என்றான்.
சட்டென நிமிர்ந்த கண்களில் நீர் சேர்ந்திருந்தது.
ஏன் அர்ச்சனா எழுத முடியலையா? இதழ்களில் ஓடிய புன்னகையுடன் அவள் கண்களை பார்த்து கேட்டவன், ஏன்? ஏன் எழுத முடியலை அர்ச்சனாவாலே? என்றபடியே கட்டிலில் அமர்ந்திருந்தவளை சற்று நெருங்கி அமர்ந்தான் விவேக்.
மனதிற்கு பிடித்த கணவனுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து விட்ட நிலையில் வேறொரு ஆடவன் சட்டென நெருங்கி வந்தால் உள்ளுக்குள் ஏதோ ஒன்று குலுங்கி எழுமே அதே போன்றதொரு உணர்வில் ,சரேலென எழுந்து விட்டிருந்தாள் அர்ச்சனா. அவள் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது. சுவாசிப்பதே சிரமமாய் இருந்தது.
அவள் உணர்வுகளை படித்தவனாய், ஏதோ யோசித்தபடியே மெல்ல எழுந்தான் விவேக்.
கண்களில் ஓடிய திகைப்புடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்களை புன்னகையுடன் அவன் ஊடுருவ, சட்டென கண்களை தாழ்த்திக்கொண்டாள் அர்ச்சனா.
எனக்கு மனசெல்லாம் கிடையாது மனோ. அப்பா மட்டும் தான் என்று சொன்னவளின் மனம் மெல்ல வெளியே எட்டிப்பார்த்தது.
நான் வசந்தின் உயிர். அவனது பொக்கிஷம். அவள் மனம் திரும்ப திரும்ப சொன்னது.
'நீ என்கிட்டே வந்திடு அர்ச்சனா. நான் உன்னை கண்ணுக்குளே வெச்சு பார்த்துக்கறேன்.' வசந்தின் குரல் காதில் கேட்டது போல் இருந்தது
அவள் தன் அப்பாவுக்காக தன்னை சுற்றி கட்டி வைத்திருந்த சுவர் இடிய போவது புரிந்தது விவேக்கிற்கு.
சில நொடி தயங்கியவன், சற்று யோசித்து அவள் கையை மெல்ல பற்றிக்கொள்ள எத்தனித்த நேரத்தில் ,நெருப்பை தொட்டு விட்டதை போல் சரேலென இழுத்துக்கொண்டாள் கையை.
ப்ளீஸ்...வேண்டாம்...முகத்தை மூடிக்கொண்டு குலுங்க துவங்கினாள் அர்ச்சனா.
அத்தனை எளிதாக உணர்ச்சி வசப்படுபவனில்லை விவேக். அப்படி இருந்தும் அர்ச்சனாவின் அந்த நிமிட கண்ணீர் அவன் கண்களிலும் நீர்க்கோடுகளை கொண்டு வந்திருந்தது.
மெல்ல சுதாரித்து எதுவுமே புரியாதது போல் கேட்டான் 'ஹேய் என்னாச்சுமா?'
'என..க்கு வசந்........த் வே......ணும். நான் நா.........ன் என் வசந்த் கிட்டே போகணும்' குலுங்கினாள் அர்ச்சனா.
அவளை பார்க்கும் போது மழலைகள் பள்ளியில் நான் என் அம்மாகிட்டே போகணும் என்று தேம்பும் குழந்தையை பார்ப்பது போலே இருந்தது விவேக்கிற்கு.
'அவ்வளவுதானே.'? என்றான் நிதானமான குரலில்.. உன்னை கொண்டு போய் உன் வசந்த் கிட்டேயே விட்டுடறேன். அதுக்கப்புறம் நீ அழாம சந்தோஷமா இருப்பியா?
அவன் கேட்ட கேள்வியில் ஒரு நொடி திகைத்து போனவளாய் சட்டென நிமிர்ந்தாள் அர்ச்சனா. கண்ணீரையும் மீறி அவள் கண்களில் ஒரு மின்னல் ஓடியது. இவன் நிஜமாகத்தான் சொல்கிறானா?
சட்டென்று விரிந்த அவள் கண்களை பார்த்து மெல்ல புன்னகைத்த படியே அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்.
ரிலாக்ஸ். அர்ச்சனா. ப்ளீஸ் அழாதே. நான் வேணும்னே தான் உன் கையை பிடிச்சேன். நான் உன் கையை தொட்டதும் நீ என்னை பளார்ன்னு அறைஞ்சிருக்கணும். இப்படி அழக்கூடாது. அர்ச்சனா. அழுதிடறதுனாலே எதையும் சாதிக்க முடியாது. புரிஞ்சுக்கோ' என்றான் உறுதியான குரலில்.
சற்று வியப்புடன் அவனை பார்த்தாள் அர்ச்சனா
என்ன அப்படி பார்க்கறே? இப்போ புரியுதா? அப்பா சொல்றதுக்காக யார் கூட வேணுமானாலும் வாழந்திட முடியாதுன்னு புரியுதா? போ.... போய் உங்கப்பா கிட்டே தைரியமா எனக்கு வசந்த் வேணும்னு சொல்லு போ.
இல்லை....எங்க அப்பா......
'உங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. பயப்படாதே. நாளைக்கு நீ உங்கப்பாகிட்டே பேசறே. நானும் உன் கூடவே இருக்கேன். என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்ன சொல்றே?.
கண்ணீரை துடைத்துக்கொண்டு, தண்ணீரை வாயில் கவிழ்த்துக்கொண்டாள் அர்ச்சனா. புரிந்திருந்தது அவளுக்கு. வசந்த் இல்லாத வேறொருவருடன் வாழும் வாழ்கையின் ஒவ்வொரு நிமிடமும் எத்தனை பெரிய நரகமாக இருக்கும் என்று புரிந்திருந்தது.
மௌனமாய் யோசித்தவளிடம் கேட்டான் ' என்ன நாளைக்கு உங்கப்பாகிட்டே பேசறியா?'
'ம்' தலையசைத்தாள் அர்ச்சனா.
'குட்' புன்னகைத்த விவேக் வாட்சை கழற்றி அவளிடம் நீட்டினான். இந்தா நீயே வெச்சுக்கோ. உனக்கு நிம்மதியா இருக்கும்னா இதை போட்டு உடைச்சிடு சரியா? சிரித்தான்
மெல்ல புன்னகைத்தாள் அர்ச்சனா. அவனது மன மாற்றம் அவளுக்கு நிம்மதியை கொடுத்திருந்திருந்தது
நட்பான புன்னகையுடனும், சற்றே நிறைந்திருந்த மனதுடனும் 'தேங்க்ஸ்' என்றாள் அர்ச்சனா.
புன்னகை கலந்த பெருமூச்சுடன் சொன்னான் விவேக். 'ஆல் த பெஸ்ட் அர்ச்சனா''
அன்றிரவு தன் அறைக்கு வந்த தன் பெற்றோரிடம் மனம் விட்டு பேசிவிட்டிருந்தான் விவேக்.
'ஏண்டா? என்றார் அவன் அப்பா. நீ அவ்வளவு ஆசைப்பட்டியே டா. இப்போ ஏன் வேண்டாங்கறே. அவ நடந்துகறதை பார்த்து மனசை குழப்பிக்காதே. கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாயிடும்.
ஆனால் அவன் அம்மா விவேக் சொல்வதையே ஆமோதித்தார். வசந்துக்கு நடந்ததையெல்லாம் அவர்களிடம் அவர் சொல்ல, சொல்ல அவன் அப்பாவும் மெல்ல மெல்ல மனம் மாறியிருந்தார்.