குட்டிக் கதைகள் – 59. எதற்கு கோபம்?
ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் மிகப் பெரிய கோபக்காரன்.
அவன் கோபப் படும் போது மனதில் தோன்றும் எதையும் கூறி மற்றவர்களை காயப்படுத்துவான்.
அவனின் தந்தை அவனை திருத்த முடிவு செய்தார்.
எனவே அவனிடம் ஒரு பை நிறைய ஆணி மற்றும் ஒரு சுத்தியைக் கொடுத்து, "நீ கோபப்படும் போதெல்லாம், நம் வீட்டு வேலியில் இந்த சுத்தியை வைத்து ஒரு ஆணியை அடித்து விடு." என்றார்.
முதல் சில நாட்களில் சிறுவன் பல ஆணிகளை அடித்து பாதி பையை காலி செய்தான்.
அடுத்து வந்த நாட்களில் அவன் வேலியில் அடித்த ஆணிகளின் எண்ணிக்கை குறைந்து, படிப்படியாக, அவனது கோபமும் கட்டுப்பாட்டில் இருந்தது.
சில நாட்களில், அவன் கோபமே படாத நாளும் வந்தது.
அவனது தந்தை இப்போது அவன் கோபமே படாத நாட்களில் ஒவ்வொரு ஆணியாக அகற்றும்படி கேட்டார்.
கடைசி ஆணியை அவன் அகற்றும் நாளில், அவனின் தந்தை, "நீ மாறி விட்டாய். ஆனால் வேலியில் உள்ள ஓட்டைகளை பார்த்தாயா? பெயின்ட் அடித்தாலும் கூட இந்த வேலி முன்பு போல இருக்க முடியாது. அது போல, கோபத்தில் நீ சொல்லும் காயப் படுத்தும் வார்த்தைகளும் இந்த ஆணியைப் போல அந்த நபரின் மனதில் தழும்பை விட்டுச் செல்லும்.” என்றார்.
கருத்து:
கோபம் என்பது கத்தி போன்ற ஆபத்தான ஆயுதம்.
கத்தியால் குத்தப்பட்டால் எப்படி வடு இருக்குமோ அதுப் போலவே கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும் மனக் காயங்களை, வடுக்களை ஏற்படுத்தும்.