குட்டிக் கதைகள் – 73. பகல் கனவு
ஒரு ஊரில் அபிராமி என்றொரு பெண் இருந்தாள். அவள் வீட்டில் ஒரு பசு மாடு இருந்தது. அபிராமியின் அம்மா பசுவிடம் இருந்து பால் கறந்து, அதை சந்தையில் விற்று வரும் பணத்தை அபிராமியை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
அபிராமியும் பசுவிடம் பால் கறந்து, அதை பால் பாத்திரத்தில் ஊற்றி கையில் எடுத்துக் கொண்டு சந்தையில் விற்க புறப்பட்டாள்.
அப்படி நடந்துப் போகும் போது, பாலை விற்று வரும் பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று பகல் கனவு காண ஆரம்பித்தாள்.
ஒரு கோழியை வாங்கி அதன் முட்டைகளை விற்கலாம். நிறைய முட்டைகளை விற்றால் பணக்காரி ஆகி விடலாம் என்று யோசித்தாள்.
அது மட்டுமா!!!!
பேக்கரியில் இருந்து கேக் வாங்கி சுவைக்கலாம், ஒரு கூடை ஆப்பிள் வாங்கலாம், அழகழகான உடைகள் வாங்கலாம், ஏன் பெரிய வீடு கூட வாங்கலாம் என முட்டை மற்றும் பால் விற்று வரும் பணத்தை பற்றி கனவுக் கண்டுக் கொண்டே நடந்தாள்.
உற்சாகம் பொங்க கனவில் மிதந்துக் கொண்டே நடந்ததில் கையிலிருந்த பாத்திரத்தை மறந்து துள்ளிக் கொண்டே நடந்தாள்.
சற்று நேரத்திற்கு பிறகே பால் கீழே கொட்டுவது அவளுக்கு உரைத்தது.
பாத்திரங்களைப் பார்த்தால், அவள் துள்ளி துள்ளி நடந்ததில் அங்கே பால் அனைத்தும் கீழே சிந்தி காலியாக இருந்தது!!!!
கருத்து:
மனக் கோட்டைகள் கட்டி உங்கள் இலக்கை பற்றி மட்டும் யோசிக்காமல், அந்த இலக்கை அடைவது எப்படி என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம்!