குட்டிக் கதைகள் – 75. சிங்கத்தின் கருணை
பல பல நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு பணக்கார எஜமானன் இருந்தான். அவன் தனக்கு வேலை செய்வதற்கு என பல வேலையாட்களை வைத்திருந்தான். அப்படி வேலை செய்ய இருந்தவர்களை அடிமைப் போல நடத்தி, கொடுமை படுத்தி அதிக வேலை வாங்கினான்.
அந்த எஜமானனின் கீழ் இருந்த ஒரு வேலையாளின் பெயர் தங்கம். எஜமானனின் கொடுமை தாங்க இயலாமல் தங்கம் அங்கிருந்து தப்பித்து காட்டுக்கு ஓடினான்.
கண் மண் தெரியாமல் ஓடியவன், வந்து நின்ற இடம் ஒரு சிங்கத்தின் இருப்பிடம். அந்த சிங்கத்தின் காலில் முள் தைத்திருந்ததால் வலியுடன் நடக்க முடியாமல் படுத்திருந்தது.
சிங்கத்தை பார்த்து பயந்த தங்கம், அதன் வலியை பார்த்து இரக்கப் பட்டான். தனது தைரியத்தை திரட்டி சிங்கத்தின் பாதத்தில் உள்ள முள்ளை வெளியே எடுத்தான்.
முள்ளிலிருந்து விடுதலை கிடைத்த உடன் சிங்கம் தங்கத்திற்கு எந்த தீங்கையும் விளைவிக்காமல் காட்டுக்குள் ஓடிச் சென்றது.
தங்கமும் தன் வழியே சென்றான்.
சில நாட்களுக்குப் பிறகு எஜமானனிடம் தங்கம் மாட்டிக் கொண்டான். இரக்கமில்லாத எஜமானன் தங்கத்தை சிங்கத்தின் குகையில் வீசும்படி கட்டளையிட்டான்.
அவனின் காவலர்களும் தங்கத்தை சிங்கத்திடம் வீசினார்கள்.
ஆனால் சிங்கம் தங்கத்தின் பக்கம் கூட வரவில்லை.
அந்த சிங்கம் தான் முள் எடுத்து காப்பாற்றிய சிங்கம் என்பது தங்கத்திற்கு புரிந்தது.
மகிழ்ச்சியுடன் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றான் தங்கம்.
கருத்து:
நாம் செய்யும் நன்மைகள் எப்போதுமே நம்மிடம் திரும்பி வந்து சேரும்!
எனவே நல்ல செயல்களைச் செய்யுங்கள், மற்றவர்களிடம் இறக்கத்துடன் நடந்துக் கொள்ளுங்கள், உலகமும் உங்களிடம் அன்பாக இருக்கும்!