குட்டிக் கதைகள் – 76. காலம் பொன்னானது
ஒரு பெரிய காடு இருந்தது. அங்கே பல ரகமான விலங்குகள் வாழ்ந்து வந்தன.
அவ்வப்போது வேட்டைக்காரர்கள் காட்டுக்குள் வந்து விலங்குகளை வேட்டையாடுவார்கள். அப்போது விலங்குகள் பயந்து ஓடும் அல்லது தங்களின் மறைவான இடத்திற்கு சென்று பதுங்கும்.
அன்று வேட்டைக்காரகள் ஒருவரும் இல்லாததால் விலங்குகள் ஹாயாக இருந்தன!
இரண்டு நரிகளும் மற்ற விலங்குகளை போல சோம்பலுடன் அலைந்துக் கொண்டிருந்தன. அப்போது ஒரு காட்டுப்பன்றி மரத்தின் மீது தனது தந்தத்தைக் கூர்மைப் படுத்துவதை அந்த இரண்டு நரிகளும் பார்த்தன.
“எதுக்கு இதை செய்ற?”
“இன்னைக்கு வேட்டைக்காரர்கள் யாரும் வரலையே?”
இரண்டு நரிகளும் பன்றியிடம் கேள்விகள் கேட்டன.
“ஆபத்து வரும் போது என்னை பாதுகாத்துக் கொள்ள கூர்மையான தந்தம் எனக்கு அவசியம். ஆபத்து வரட்டும் என காத்திருந்தால் அதை கூர்மை படுத்த எனக்கு நேரம் இருக்காது. எப்போதும் முன்பே தயாராக இருப்பது தான் நல்லது” என்று பன்றி பதிலளித்தது.
கருத்து:
இழந்த பொன்னான நேரத்தை திரும்பப் பெற முடியாது.
காலத்தை வீணடிக்காமல் சாமர்த்தியமாக நம்மை தயார் படுத்திக் கொள்வது அவசியம்!