குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 90. காகத்தின் வருத்தம்!
ஒரு மரத்தில் ஒரு காகம் வாழ்ந்து வந்தது. அதே மரத்தில் வேறு பல பறவைகளும் வாழ்ந்து வந்தன.
தான் அந்தப் பறவைகள் போல வண்ணமயமாகவும் அழகாகவும் இல்லையே என்று காகத்திற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
தன் மனக் குமுறலை காகம் கிளியிடம் பகிர்ந்துக் கொண்டது. கிளியுடன் அதன் தோழன் மயிலும் இருந்தது.
காகத்தின் வருத்தத்தைக் கேட்ட கிளி மிகவும் அனுதாபப் பட்டது.
மயிலோ, “காகமே, நீ நினைப்பது தவறு! என்னைக் கேட்டால் நீ தான் அதிர்ஷ்டசாலி பறவை. உன்னை யாரும் எப்போதும் கூட்டில் அடைத்து வைப்பதுக் கிடையாது. எங்களின் அழகுக்காகவே எங்களை பிடித்து கூட்டில் அடைத்து வைத்து விடுகிறார்கள். நீயோ எப்போதும் சுதந்திரமாக பறந்து திரிகிறாய்.” என்றது.
இதைக் கேட்டதும் காகத்திற்கு தன் தவறு புரிந்தது. தன்னை இப்படி படைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியுடன் பறந்தது!
கருத்து:
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்! நீங்கள் நீங்களாகவே இருங்கள்!
இல்லாததை நினைத்து ஏங்காமல் உங்களிடம் இருப்பவற்றிற்காக மகிழ்ச்சி அடையுங்கள்!