குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 91. ஞானியின் வார்த்தைகள்
ஒரு ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். அவரை சந்திக்க ஒவ்வொரு புதன் கிழமையும் மக்கள் வந்தார்கள்.
அப்படி வரும் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் அனைவரும் புகார் செய்தார்கள்.
ஒரு நாள் ஞானி அவர்களிடம் ஒரு நகைச்சுவை துணுக்கை சொன்னார். அனைவரும் அதைக் கேட்டு பெரிதாக சிரித்தார்கள்.
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, ஞானி அவர்களிடம் அதே நகைச்சுவை துணுக்கை மீண்டும் சொன்னார், இப்போது அங்கிருந்தவர்களில் சிலர் மட்டுமே சிரித்தனர்.
ஞானி மூன்றாவது முறையாக அதே நகைச்சுவையை சொன்னபோது ஒருவரும் சிரிக்கவில்லை.
ஞானி புன்னகைத்து கூறினார்:
"ஒரே நகைச்சுவையை மீண்டும் மீண்டும் கேட்டால் உங்களால் மீண்டும் மீண்டும் சிரிக்க முடியாது. பிறகு, நீங்கள் ஏன் எப்போதும் ஒரே பிரச்சனைக்காக அழுதுக் கொண்டே இருக்கிறீர்கள்? கவலையை விட்டு விட்டு பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளை ஆராயுங்கள்."
கருத்து:
கவலை உங்கள் பிரச்சினைகளை தீர்க்காது! அது உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்க மட்டுமே செய்யும்.