வினோத செய்திகள் - கின்னஸ் ரெக்கார்ட் படைக்குமா இந்த இரண்டு மூட்டை உருளைக்கிழங்கின் எடைக் கொண்ட ஒரு உருளைக்கிழங்கு???
நியூசிலாந்தை சேர்ந்த தம்பதிகள், கொலின் மற்றும் டோனா கிரெய்க்-பிரவுன் தங்கள் தோட்டத்தில் களையெடுத்துக் கொண்டிருந்தபோது, கொலினின் மண்வெட்டியில் மண்ணின் மேற்பரப்பிற்கு அடியில் பெரிதாக எதுவோ தட்டுப் பட்டது.
தம்பதியினர் இருவரும் என்ன என்று கண்டுப்பிடிக்க அந்த பொருளைச் சுற்றி தோண்டத் தொடங்கியபோது, அது பந்து போல ஏதாவதாக இருக்குமா என்று தான் யோசித்தார்கள். ஆனால் அந்த பெரிய பொருளை எடுத்து, துடைத்து, தோலில் சிறிது கீறிவிட்டு சுவைத்துப் பார்தவர்களால் நம்பவே முடியவில்லை!
அது ஒரு உருளைக்கிழங்கு.
பார்ப்பதற்கு சரியான வடிவத்தில் இல்லாத அந்த பெரிய உருளைக்கிழங்கு எங்கே இருந்து வந்தது என்றே அவர்களுக்கு தெரியவில்லை.
அந்த உருளைக்கிழங்கை அவர்கள் எடைப்போட்ட போது அதன் எடையை பார்த்து மயக்கம் போடாத குறை தான்.
அந்த ஒரு உருளைக்கிழங்கு 7.9 கிலோ எடைக் கொண்டது.
இது தான் உலகின் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய உருளைக்கிழங்கு ஆகும். இது ஒரு நாய்க்குட்டியின் எடைக்கு சமமான எடை என்பதும் கிட்டத்தட்ட இரண்டு மூட்டை சாதாரண உருள்கைக்கிழங்கின் எடை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் பிரிட்டனில் விளைந்த 5 கிலோ உருளைக் கிழங்கு தான் கின்னஸ் ரெக்கார்ட் படைத்துள்ளது. அதை இந்த உருளைக்கிழங்கு முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், கொலீன் தம்பதிகள் உருளைக்கிழங்கை நடவே இல்லை! வெள்ளரிகளை பயிரிட்டு அதற்கு உரமாக மாட்டு எரு மற்றும் வைக்கோலை மட்டும் பயன்படுத்தினார்களாம்.
இப்போது கின்னஸ் ரெகார்டிற்கு விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.