சினிமா சுவாரசியங்கள் - எவர் கிரீன் காதல்
தேவ் ஆனந்த் யார் என்று தெரியாத இந்திய சினிமா பிரியர்கள் மிகவும் குறைவானவர்கள். அப்படி மக்கள் மனதில் நிலைத்திருக்கும் தேவ் ஆனந்தின் காதல் கதை இது.
1940க்களில் ஹிந்தி சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் சுரேயா. நடிப்புத் திறமை, அழகு மட்டுமல்லாமல் நன்றாக பாடும் திறமையும் கொண்டவர் சுரேயா.
1940 களின் பிற்பகுதியில், அவர் தேவ் ஆனந்த் உடன் பல படங்களில் நடித்தார். அப்போது தேவ் ஆனந்திற்கு சுரேயா மீது காதல் மலர்ந்தது. சுரேயாவின் மனதை கவர தேவ் ஆனந்த் என்ன எல்லாமோ செய்தார். குறிப்பாக சுரேயாவிற்கு பிடித்த ஹாலிவுட் நடிகர் கிரிகோரி பெக் (Gregory Peck) பாணியில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் காதல் நான்கு ஆண்டுகள் தொடர்ந்தது. தேவ் ஆனந்திற்காக நடிப்பு, பாடகி எனும் ஸ்டார் அந்தஸ்த்துக்களை விட்டுக் கொடுக்கவும் சுரேயா தயாராக இருந்தார்.
இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுரேயா வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் கிடைப்பது கஷ்டம் என்பது அவர்களுக்கும் தெரியும். அதனால் ஒரு படப்படிப்பின் நடுவே, அந்த படப்பிடிப்புக் குழுவினரின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துக் கொள்ள இரண்டுப் பேரும் முடிவு செய்தார்கள்.
அந்த படப்பிடிப்புக் குழுவில் இருந்த அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருவர் இவர்களின் ரகசிய திட்டம் பற்றி சுரேயாவின் பாட்டியிடம் போட்டுக் கொடுத்து விட்டார். மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆன சுரேயாவின் பாட்டி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து சுரேயாவை பிடித்து இழுத்து சென்றார். சுரேயா தேவ் ஆனந்தை கல்யாணம் செய்துக் கொண்டால் தேவ் ஆனந்தை கொன்று விடுவோம் என்றும் அவருடைய குடும்பத்தினர் மிரட்டி வைத்தார்கள்.
அவர்களுடைய ரகசிய திருமண ப்ளான் ப்ளாப் ஆனப் பிறகும் தேவ் ஆனந்த் சுரேயாவிடம் பேசி திருமணம் செய்துக் கொள்ள முயன்றார். ஆனால் எங்கே அவருடைய குடும்பத்தினர் தேவ் ஆனந்தை கொன்று விடுவார்களோ என்ற பயத்தில் சுரேயா அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.
இந்த சம்பவத்தை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்த சுரேயா, தேவ் ஆனந்த் எவ்வளவோ கேட்ட பிறகும் அவர் திருமணத்திற்கு மறுத்து விட்டதை குறிப்பிட்டார். அதனால் கோபம் அடைந்த தேவ் ஆனந்த் சுரேயாவை கோழை என்று திட்டி விட்டு கன்னத்தில் அறைந்தார். இதை பற்றி மனம் விட்டு பேசிய சுரேயா, தேவ் ஆனந்த் எந்த அளவிற்கு அவரை விரும்புகிறார் என்பது அவருக்கு தெரியும் என்பதால் அப்படி அடி வாங்கியது அவருக்கு வலிக்கவில்லை என்றார். ஆனாலும் தேவ் ஆனந்த் அப்படி நடந்துக் கொண்டதற்கு பல தடவை சுரேயாவிடம் மன்னிப்பு கேட்டதையும் குறிப்பிட்டார்!
அதற்கு பிறகு தேவ் ஆனந்தும் சுரேயாவும் சேர்ந்து நடிக்கவே இல்லை.
சுரேயா படங்களில் நடிப்பதையும், பாடுவதையும் குறைத்துக் கொண்டார்.
தேவ் ஆனந்த் சில வருடங்களுக்கு பின் தன்னுடன் நடித்த நடிகை கல்பனா கார்த்திக்கை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சுரேயா திருமணம் செய்துக் கொள்ளவே இல்லை. அவருடைய குடும்பத்தினர் எவ்வளவோ முயன்று பார்த்தும் ஒரு பயனும் இல்லை.
2004 ஆண்டு தனி மரமாகவே சுரேயா காலமானார். அவருடைய இறுதி சடங்குகளில் கலந்துக் கொள்ளாமல், யாருடனும் பேசாமல் தன் வீட்டு மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்துக் கொண்டார் தேவ் ஆனந்த்.
நிழல் உலகில் எவர் கிரீன் ரொமாண்டிக் ஹீரோ என்று பெயர் பெற்ற தேவ் ஆனந்தின் நிஜ வாழ்க்கை காதல் நிறைவேறாமல் போனது சோகமானது!