சினிமா சுவாரசியங்கள் - அழகான காதல்
பாலிவுட்டின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் ஷர்மிளா தாகூர்.
60களிலேயே கவர்ச்சியான நீச்சல் உடையில் மேகசின் கவரில் தோன்றி விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியவர்.
ஹிந்தி பட உலகின் முடி சூடா ராணியாக ஷர்மிளா விளங்கிய அந்தக் காலத்தில் சினிமா நடிகையாக இருப்பதை சமூகம் உயர்ந்த அந்தஸ்தாக பார்க்கவில்லை.
இந்த காலக்கட்டத்தில் ஷர்மிளா தாகூருக்கு கிரிக்கெட் வீரர் பட்டோடி மீது காதல் ஏற்பட்டது.
பட்டோடி இந்திய கிரிக்கெட்டின் கேப்டன் மட்டுமில்லை அரச பரம்பரையை சேர்ந்த நவாப் (இளவரசர்).
அப்போதிருந்த டேப்லாய்ட்களுக்கு இவர்களின் காதல் கிசுகிசு, வசூல் கொடுக்கும் செய்தியாக இருந்தது.
எதிர்பார்த்ததுப் போலவே பட்டோடியின் குடும்பம் அவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பட்டோடியும் சரி, ஷர்மிளா தாகூரும் சரி அவர்களின் காதலில் இருந்து பின்வாங்கவில்லை.
இறுதியில் பெரியவர்கள் விட்டுக் கொடுத்தார்கள்.
பட்டோடி ஷர்மிளா தாகூரின் திருமணம் விமரிசையாக நடைப்பெற்றது.
திரை உலகை சேர்ந்த பல காதல் திருமணங்கள் கசப்பான பிரிவில் முடிவதை பார்த்திருந்த உலகம், இந்த திருமணம் ஒன்றிரண்டு வருடங்களுக்கு மேல் நிலைக்காது என்று ஆருடம் கூறியது!
பட்டோடி தம்பதியினர் அதை பற்றி எல்லாம் கவலைப் படவில்லை. தங்கள் வாழ்க்கையை இனிதே தொடர்ந்தார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் கூட திருமணத்திற்கு பிறகு நடிப்பது நடிகைகளுக்கு எளிது இல்லை. ஆனால் ஷர்மிளா தாகூர் அன்றைய காலத்திலேயே திருமணத்திற்கு பின்னும், குழந்தைகள் பிறந்தப் பின்னும் கூட நடித்தார். பட்டோடி அதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
ஆனால் பட்டோடி ஷர்மிளா தாகூர் நடித்த படங்களை பார்த்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிடித்த நடிகைகள் மீனா குமாரியும் வைஜெயந்திமாலாவும்! இதை உலகிற்கு பகிர்ந்ததும் ஷர்மிளா தாகூர் தான்.
அந்த அளவிற்கு அவர்கள் இருவர் மற்றவரின் விருப்பு வெறுப்புகளுக்கு மரியாதை கொடுத்தார்கள்.
இரண்டு வருடங்களுக்கு மேல் நீடிக்காது என்று பலரும் ஆருடம் சொன்ன ஷர்மிளா தாகூர் திருமணம் எந்த சச்சரவுகளும் இல்லாமல் 42 வருடங்கள் நீடித்தது என்பது அவர்கள் இருவரின் உண்மையான அன்பின் வெளிப்பாடு.