சினிமா சுவாரசியங்கள் - முடிவென்பதும் ஆரம்பமே
நர்கிஸ் என்ற உடனே திரைப்பட பிரியர்களுக்கு குடையுடன் நர்கிஸ் பியார் ஹுவா எக் ரார் ஹுவா பாட்டு பாடுவது நினைவுக்கு வருவது இயற்கை. அந்த அளவிற்கு அந்த பாடல், அமைப்பு, ஜோடி அனைத்துமே பிரபலம்.
தொடர்ச்சியாக ராஜ் கபூருடன் பல திரைப்படங்களில் சேர்ந்து நடித்த போது நர்கிஸ், ராஜ் கபூர் நடுவே காதல் மலர்ந்தது.
ராஜ் கபூருக்கு அப்போது கல்யாணமாகி குழந்தைகளும் இருந்தார்கள். அவர் மனைவியை விவாகரத்து செய்து தன்னை கல்யாணம் செய்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஏழு வருடங்கள் காத்துக் கொண்டிருந்தார் நர்கிஸ்.
நர்கிஸை காதலித்தாலும் ராஜ் கபூர் அதை செய்வதாக இல்லை. வேறு வழி இல்லாமல் ராஜ் கபூரை பிரிவது என்று முடிவு எடுத்தார் நர்கிஸ்.
காதல் தோல்வியால் மனம் சோர்ந்து போயிருந்த நர்கிஸ் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தின் பெயர் மதர் இந்தியா.
அந்த படத்தில் நர்கிஸின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு மகனாக நடித்தவர் நர்கிஸின் வயதை ஒத்த சுனில் தத். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்தப் போது எதிர்பாராமல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயில் மாட்டிக் கொண்ட நர்கிஸை நிஜ வாழ்க்கை ஹீரோவாக உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றினார் சுனில் தத்.
இந்த விபத்து சுனில் தத்திற்கு நர்கிஸ் மீது காதல் உருவாக காரணமாக இருந்தது. மன அழுத்தத்தில் இருந்த நர்கிஸிடம் அன்பாக நடந்து அவரின் அன்பை சம்பாதித்தார் சுனில் தத். சுனில் தத்தின் நடவடிக்கைகள் நர்கிஸிற்கு ஆறுதலாக இருந்தது.
Darlingji: The True Story of Nargis and Sunil Dutt என்ற புக்கில் இந்த நேரத்தைப் பற்றிய நர்கிஸின் கருத்து பதிவாகி இருக்கிறது.
“சுனில் தத் மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கையை அப்போதே முடித்திருப்பேன். எனக்குள்ளே போய் கொண்டிருந்த குழப்பங்கள் எனக்கு மட்டும் தான் தெரியும். சுனில் தத் ‘நீ வாழ வேண்டும்’ என்றார். எனக்கும் வாழ் வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் தோன்றியது”
மதர் இந்தியா படம் வெளியான ஐந்து மாதத்திற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள்.
ராஜ் கபூருடனான நர்கிஸின் காதல், மதர் இந்தியா படத்தில் அம்மா மகனாக நடித்தவர்கள் போன்றவற்றை வைத்து இந்த திருமணத்தைப் பற்றி பேசாதவர்கள் இல்லை.
இதை எல்லாம் தாண்டி, நர்கிஸின் மரணம் வரை நல்ல ஒரு ஜோடியாக வாழ்ந்தார்கள் நர்கிஸும் சுனில் தத்தும்.
சில நேரங்களில் முடிவு என்பது முடிவாக இல்லாமல் புதிய தொடக்கமாக தான் இருக்கிறது!