TV Serials - தி கிரவுன் - நெட்ஃப்ளிக்ஸ் [ The Crown - Netflix ] - சீசன் 1 எபிசோட் 04
இங்கிலாந்தின் தற்போதைய மகாராணி எலிசபெத்தின் கதையை சொல்லும் 2016ல் தொடங்கிய இந்த நெட்ஃபிலிக்ஸ் வெப் சீரீஸின் சீசன் 1 4 ஆம் அத்தியாயத்தின் கதை சுருக்கம் இது. எபிசோட் 3 கதைக்கு தி கிரவுன் - எபிசோட் 3 பக்கத்திற்கு செல்லுங்கள்.
இந்த அத்தியாயம் லண்டனை பாதித்த Great Smog of London நெருக்கடியை சுற்றி நடைப்பெறுகிறது. அதன் கூடவே ராணி, இளவரசி என்று வாழ்பவர்களின் வாழ்க்கையில் இருக்கும் கடினங்களையும் சொல்கிறது.
ராணியாக இருப்பவள் ரோபோட் போல எந்த பாரபட்சமும் இல்லாமல் இருக்க வேண்டும். அன்றாட அரசியலில் அவளுக்கு எந்தவிதமான உணர்வுகளும், கருத்துகளும், தனிப்பட்ட உள்ளீடும் இருக்க முடியாதாம்.
சாதாரண பெண்ணாக பிறப்பது எத்தனை சிறந்தது என்று யோசிக்க வைக்கும் எபிசோட்!
கதை சுருக்கம்:
1952
எலிசபெத்தின் கணவர் பிலிப் விமானம் ஓட்ட கற்றுக் கொள்ள தொடங்குகிறார்.
அந்த நேரத்தில் லண்டன் நகரை அடர்த்தியான மூடுபனி மூடுகிறது. காற்று இல்லாத நிலையில் மூடுபனி அப்படியே நிலைத்திருக்க, அங்கே இருக்கும் அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் நச்சுப் பொருட்களால் காற்று மாசடைகிறது. இதனால் லண்டன் நகரம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகிறது.
மாசுப்பட்ட காற்றினால் பரவும் நோய், போக்குவரத்து முடக்கம் என நகரமே முடங்கிப் போய் விடுகிறது.
பிரதமர் சர்ச்சில் அறிவியல் ரீதியாக இதை எதிர்க்கொள்ளாமல் அது வானிலை தொடர்பான அவசர நிலை என்று சொல்லி பெரிய அளவு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்.
அதைப் பற்றி பேசும் எலிசபெத்திடம் எல்லாம் சரியாகி விடும் என்று சால்ஜாப்பு சொல்லி சமாளிக்கிறார். இந்த பேச்சின் போது பிலிப் விமான பயிற்சி எடுப்பதை தெரிந்துக் கொள்ளும் சர்ச்சில் கோபப் படுகிறார். ராணியின் கணவராக இருப்பவர் அதுப் போன்ற ஆபத்தான பொழுதுபோக்குகளை வைத்திருக்கக் முடியாது என்று மறுக்கிறார்.
மக்கள் மூடுப்பனியால் பயங்கரமாக பாதிக்கப் பட்டிருக்க, இன்னொரு பக்கம் சர்ச்சிலின் அரசியல் எதிரிகள் அவரின் நடவடிக்கை இன்மையை வன்மையாக கண்டிக்கிறார்கள். எதிர் கட்சியினர் சர்ச்சில் மீது நம்பிக்கையில்லா இயக்கம் கொண்டு வர நினைக்கிறார்கள்.
லார்ட் மவுண்ட்பாட்டன் எலிசபெத்தை சந்தித்து அரசியல் நிலைமையை விளக்கி ராணியாக எலிசபெத் சர்ச்சிலிடம் பேசி பதவி விலக சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். அப்படி செய்வது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்பதால் குழப்பம் அடைகிறாள் எலிசபெத்.