சுப்பு குட்டி, எழுங்க என்ன சிரிக்கறீங்க, என்ன விசயம்” என கேட்க அவளோ மெல்ல கண்கள் விழித்து எழுந்து அனைவரையும் பார்த்து யாரையோ தேடலானாள்
”குட்டிம்மா யாரை தேடற” என தாரா கேட்க
”அக்கா அந்த மாமா எங்க அக்கா” என கேட்க
”எந்த மாமா” என பாட்டி வியப்பாக கேட்க அவளோ தன் பிஞ்சு குரலில்
”அது என்கூட விளையாடினாரே அவர்தான்” என சுப்பு சொல்ல அதற்கு பாட்டி
“யாரு உன்கூட விளையாடினது?
”என்கூட சிரிச்சி விளையாடினாரு” என்றாள்.
என சொல்ல அந்நேரம் வீட்டிற்கு செந்தாமரையின் கணவர் கணபதி பிள்ளையார் சிலையுடன் வந்து இறங்கினார்
”பாருங்க நான் பிள்ளையாரை கொண்டு வந்திருக்கேன் பாருங்க” என சொல்ல சுப்ரஜாவோ
”ஐ மாமா வந்துட்டாரு” என ஆசையாக ஓடிச் சென்று பிள்ளையார் சிலையை பிடித்து அந்த தும்பிக்கையை பிடித்து இழுக்க அனைவரும் அவளைத் தடுத்தார்கள்
”என்ன செய்ற நீ அப்படி செய்யக்கூடாது”
“ஏன்?”
”அது சாமிம்மா கையெடுத்து கும்பிடனும்”
“இல்லை இந்த மாமாதான் என்கூட விளையாடினாரு, நிறைய பொம்மை கொடுத்தாரு” என சொல்லி மீண்டும் பிள்ளையார் சிலையுடன் அவள் விளையாடவே அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் சிறிது ஆச்சர்யமும் அடைந்தார்கள்.
அந்நேரம் கணபதி சுப்ரஜாவை தூக்கிக் கொண்டு
”ஓ அப்படியா இவர்தான் உன் கூட விளையாடினாரா, அவருக்கு உன்னை மாதிரி சின்ன குழந்தைங்கன்னா ரொம்பவே பிடிக்கும்.” என சொல்ல தாராவோ அவரிடம்
”அப்படின்னா பிள்ளையாருக்கு குழந்தைங்கதான் பிடிக்குமா, எங்களை பிடிக்காதா, அவருக்குன்னு செய்ற பூஜைகள், கொழுக்கட்டை, அருகம்புல் கூட அடுத்தபடியாதான் பிடிக்குமா” என சந்தேகமாகக் கேட்க அதைக் கேட்டு கணபதியோ சிரித்தார்
”என்ன பேச்சு இது, சுத்தமான மனசோட எதையும் எதிர்பார்க்காம பொதுநலமா நடந்துகிட்டாலே போதும் பிள்ளையாரோட அருள் அவங்களுக்கு கிடைக்கும். இன்னிக்கு நம்ம சுப்ரஜாவோட வெள்ளை மனசுக்கு ஈர்க்கப்பட்டு அவள் கனவில வந்து விளையாடியிருக்காரு பிள்ளையாரு. பெரியவங்க சொல்வாங்கள்ல சின்ன குழந்தைங்க தூக்கத்தில சிரிச்சா அதுக்கு காரணம் பிள்ளையார் அந்த குழந்தைகளோட விளையாடுவார்ன்னு அதுதான் இப்ப நடந்திருக்கு, தாரா நீயும் சுத்தமான மனசோட சாமி கும்பிடு, உன்னையும் அவருக்குப் பிடிச்சிடும், உன் கனவிலயும் பிள்ளையார் வருவாரு பாரு யார் ஒருத்தர் தூய மனசோட பிள்ளையாரை ஆராதிக்கறாரோ அவரை விநாயகருக்கு பிடிக்கும், பக்தர்களிடம் சாமியோட அருள் முழுவதுமாக இருக்கும், அலங்காரப் பொருட்கள், மோதகம், பூக்கள், அருகம்புல் இது எல்லாமே கடவுளை அடைவதற்கான ஏணிப்படிக்கட்டுகள்தான். உண்மையில் கடவுளை அடையனும்னா அவரவர்களோட தூய மனசே போதும். சுத்தமான மனசோட யார் இருக்கிறாரோ அவங்க மனசுல அவர் குடியிருப்பாரு.
இன்னிக்கு விநாயகர் சதுர்த்தி, இன்னிக்கு எல்லாரும் விநாயகர் சதுர்த்தியை சிரத்தையா கடைபிடிச்சாலே சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவாங்களாம். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களும் கிடைக்கும்” என அவர் சொல்லவும் அனைவருக்கும் பிள்ளையாரே கணபதியின் மூலமாக தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தது போல உணர்ந்து உடல் சிலிர்த்தவர்கள் பயபக்தியுடன் பிள்ளையாரை கைகூப்பி வேண்டிக்கொண்டார்கள். சுப்ரஜாவோ அப்போதும் பிள்ளையார் சிலையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
{kunena_discuss:747}