‘ஹும்ம்’ பெருமூச்சுவிட்டேன். வெள்ளக்காரனுக்கா இந்த கதி. நான் வேலையில்லா பட்டதாரியாய் திரிந்த காலத்தை எண்ணிப்பார்தேன். சுயமரியாதை கெளரவமான வாழ்க்கையின் மூலப்பொருள். வாழ்க்கையில் கடுமையாக போராடி முன்னேறுபவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னெறால் அப்படித்தான்தான் நான் வளர்ந்தேன்.
‘சரி, எனக்கு 5 பீஸ் கொடு.’ பர்ஸிலிருந்து எடுத்து 200 திர்ஹம் நீட்டினேன்.
‘தாங்க்ஸ் முஷ்டாக் , உனக்கு பெரிய மனசு மேன்.’ பாலைவன சுடராய் மலர்ந்தான். ‘இன்னா திரக்கப் படுத லிரந்தவரின்முகங் காணு மளவு’ , என்ற வள்ளுவனை நினைத்தேன் .
வாங்கி பையில் போட்டுகொண்டு சாயங்காலம் ஆபீஸ் முடிந்த பிறகு ரூமுக்கு கொண்டு போனேன். விடுமுறையில் ஊருக்கு போன பின் எல்லாருக்கும் அதாவது அத்தைக்கு, மாமிக்கு , சித்தப்பாக்கு, அம்மாக்கு, என்று ஒன்றொன்றாய் கொடுத்திட வேண்டும். ‘உடம்பே மசாஜ் பண்ணி பண்ணி ஜல்ஸா பண்ணட்டும்’.
இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. வார இறுதியில், அதாவது வெள்ளிக்கிழமை சாயங்காலமாய் நான் நாசர் சதுக்கத்தில் பொழுதுபோக்காய் சுற்றுவதுண்டு. அப்படித்தான் அன்றைக்கும் சுற்றிக்கொண்டு திரிந்தேன். துபாயில் சந்தைகளில் ஒரு திர்ஹம் முதல் பத்து திர்ஹம் வரை விற்கும் பொருட்கள் கொண்ட கடைகள் உண்டு. எதேச்சையாய் உள்ளே போனேன்.
சீன நாட்டின் வண்ண ஜாலம் பூத்து மிளிர்ந்தது. தக தக என்று ஜொலித்த தங்க புத்தர், அசலாக தெரிந்த பிளாஸ்டிக் பூச்செண்டுகள், வைரமாய் மின்னிய கல்நகைகள், குழைந்தைகள் விளையாடும் லேசர் டார்ச்சுகள், எலக்ட்ரானிக் கருவிகள், செராமிக் தட்டுகள், வீட்டுப்பாத்திரங்கள், இந்த பூலோகத்தில் வாழ என்னென்ன தேவையோ, அவை அனைத்தும் அங்கு இருந்தன.
அந்த கருவியும் அங்கே இருந்தது. பிளாஸ்டிக் மீன்கள் நீந்தும் தொட்டி பக்கத்தில் ஒரு குட்டி மேசையின் மேல் ஒன்றின்மேல் ஒன்றாய் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது அந்த மசாஜ் கருவி. அதே கருவி, சிறிதும் மாற்றமில்லாமல்.
கொஞ்சம் தயங்கினேன். பிறகு அந்த கருவியின் டப்பாவை தூக்கி திருப்பி பார்த்தேன். ' ஹ்ம்ம், மவனே ஏமாத்திட்டியேடா. எவ்வளவு நம்பி வாங்கினேன். சே! டிஸ்கவுண்ட் கூட நான் கேக்கல. இருபது திர்ஹமுக்கு ரோட்ல விக்கற பொருள என்னக்கு நாற்பது திர்ஹமுக்கு வித்திட்டியே. நாதாரிப் பய. ’ நொந்துபோனேன்.
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான் நாண நன்னயம் செய்து விடல்’, காதில் ரீங்காரித்தது. எப்படி முடியும். நானே நாலு காசு சம்பாரிக்க வந்தவன். என்னிடமே கொள்ளையா? அய்யகோ, என் செய்வேன் பராபரமே!
‘கவலை படாதே பாய், நூறு திர்ஹம் நஷ்டமானால் என்ன, நீ ஒருத்தனுக்கு உதவி செஞ்ச்சே இல்லே' என்றது மனசாட்சி. ‘பாய், சிம்பிள், மற.’ ஆயத்துல் குர்ஸி ஓதினேன். கொட்டாவிவிட்டேன். தூக்கத்தில் குதிரையின் மேல் அமர்ந்து அந்தரத்தில் பறந்தேன். முன்னங்கால் தூக்கி குதிரை பாய்ந்த போது கடிவாளம் கையிலிருந்து நழுவ, குதிரை முதுகிலிருந்து நான் விழ, திடுக்கிட்டு கண் விழித்தேன். 'சே! கனவு.' உறங்கினேன். மறந்தேன்.
ஆவலோடு காத்திருந்த அந்த நாளும் ஒரு வருடம் கழித்து வந்தது. இரண்டு மாசம் வெகேஷன். ஜூலை முதல் வாரத்தில் வியாழக்கிழமையன்று மூட்டைக்கட்டியிருந்த எல்லாப்பொருட்களையும் சூட்கேய்ஸுக்குள் போட்டேன். ஆனால் அந்த ஐந்து மஸாஜ் கருவிகளை மட்டும் கேபின் லக்கேஜுக்குள் போட்டேன். உடைக்காமல் பத்திரமாக கொண்டுபோகணும் என்பதற்காக.
ஏர் இந்தியா பிளையிட்டில் அமர்ந்து சென்னை வந்து இறங்கினேன். ஏர்போர்ட்டில் அப்பாவும் தம்பியும் வந்திருந்தார்கள் வரவேற்க.
அந்த காலத்தில் கருப்பு மஞ்சள் கலர் டாக்ஸி பிரபலம். அப்பா பக்கத்தில் டிரைவர் நின்றிருந்தான்.
' லக்கேஜ் கொடுங்க சார், கொஞ்சம் பார்க்கிங் வரைக்கும் தள்ளிட்டு போகணும்' என்றான் டிரைவர்.
அப்பா முகத்தில் பெருமிதம் தெரிந்தது. பையன் துபாயிலிருந்து ஏரோபிலேனில் வந்ததற்காவும் நாலு சூட்கேசை ஸ் நிரப்பி சாமான் கொண்டுவந்ததற்காவும். எல்லா சொந்தக்காரர்களிடம் அவர் இப்ப மார்தட்டி கொள்ளலாம்.
டாக்ஸியில் அமர்தேன். பெரம்பூரில் பக்கத்திலுள்ள பட்டாளத்தில் வீடு. மனதில் ஒரு முறை அந்த ஐந்து மசாஜ் கருவிகளை யார் யாருக்கு கொடுக்கவேண்டும் என்று ஒதுக்கீடு செய்தேன்.
அம்மா, சித்தி, பெரியம்மா, வீட்டு வேலைக்காரி ராணிக்கா, என் சின்ன வயசிலிருந்து அம்மாக்கு ஒத்தாசையாயிருந்த எதிர்வீட்டு பூஜான். எல்லோருக்கும் ஒன்றொன்று.
அந்த நேரமும் வந்தது. வீட்டுக்கு போன உடன் எல்லோருக்கும் அன்பளிப்புகளை பங்கிடும் போது அந்த ஐந்து மசாஜ் கருவிகளை மனசில் முடிவு செய்ந்திருந்தபடி அந்தந்த நபர்களுக்கு கொடுத்துவிட்டேன். மனதிற்குள் ஒரு அதீத சந்தோஷம் பொங்கியெழுதது. வளைகுடாவிலிருந்து திரும்பி வரும் பலருக்கு சாதனை புரியும் தருணம் அது.