(Reading time: 1 - 2 minutes)

 

காதல் காலங்கள்

சிறு வயதில் ஊரெல்லாம் சுற்றி

வீடு திரும்பும்போது

காதல் சொல்கிறது

கையில் நீ கொடுத்த

ரோஜா பூவும்...!

கன்னத்தில் நீ கொடுத்த

முத்தமும்...!

 

 

கொஞ்சம் வளர்ந்து,

நம்மை உணரும்போது

காதல் கலந்திருக்கிறது

கண்ணாமூச்சி விளையாட்டில்

உனக்குத் தெரிந்தே

நான் மறையாமல் மறைவதும்...!

நீ புரியாமல் தேடுவதும்...!

 

 

பட்டாம்பூச்சி பருவம் வந்து

கல்லூரிக்குச் சென்றதும்

காதல் காத்திருக்கிறது

உன் விழிகளுக்குள்

என் பிம்பத்தை நிறுத்தவும்...!

என் வெட்கத்திற்குள்

உன் ஏக்கத்தைப் புதைக்கவும்...!

 

 

காதல் கைகூடி

கணவன் மனைவியாய் இணைந்த பிறகு

காதல் நிலைத்திருக்கிறது

பிரிந்து போகாத

உறவைத் தரவும் ...!

அதில் குறைந்து போகாத

பாசத்தைக் கொடுக்கவும்...!

 

 

காலங்கள் கரைந்து

கடமைகள் முடித்தவுடன்

காதல் தொடர்கிறது

உனக்கு முன்பு

என் இதயத்தின் துடிப்பை நிறுத்தவும் ..!

எனக்குப் பின்பு

நீ துயரம் மறந்து வாழ்ந்து மறையவும் ..! 



No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.