கவிதை - எதிர்த்திசையில் - கீதா
ஒரு பறவையிடம் நீ
எதை எதிர்பார்க்கிறாய்?
உன்னிடம் வருமுன்னமும்
நான் பறந்து கொண்டுதானிருந்தேன்!
சொல்லப்போனால்
நான் பறக்கும் அழகிலேயே
நீயும் உடன் வரப் பிரியப்படாய்
பின் நமக்கான கூடொன்றில்
இளைப்பாற அழைத்தாய் !
அது மழைக்காலம்
எனக்கும் ஓர் வீட்டின் தேவையிருந்தது !
களைப்பு நீங்கியதும் மீண்டும்
பறக்க எத்தனித்த
என் சிறகுகளை
கத்தரித்திருந்தாய்
நீ பறப்பதில் பிரியமில்லை
என்கிறாய்
பறவைக்கெதற்கு பாட்டு
என்கிறாய் ?
எனக்கும் சேர்த்து நீயே
தானியம் கொணர்ந்தாய்
எனக்கு பழங்களை
கொத்தவேண்டும் போலிருந்தது!
தொலைதூரம் பறக்கவே
சிறு இதயம்
துடித்துக்கொண்டிருந்தது!
என் சிறகடிப்பை ரசித்த உனக்கு
சிறையிருக்கும் என்னை ரசிப்பதில்
சிரமமேற்பட்டிருக்கலாம்
எனக்கும் சுவாசிப்பதில் !
ஒரு சுபமுகூர்த்த
நன்னாளில்
அநேக காயங்களுடன்
உன் கூட்டிலிருந்து
விழுந்தேன்
உயிரோடிருந்ததாலே நடந்தேன்
ஒரு கல்லிடுக்கில் எனக்கான
மறைவிடம் தேடிக்கொண்டேன்
மண்புழுக்கள் தின்று
கொஞ்சம் கொஞ்சமாய்
காயங்கள் ஆற்றிக்கொண்டேன்
என் சிறகுகள் கொஞ்சம்
கொஞ்சமாய் வளர்கிறது
இதோ மீணடும் சில நாட்களில்
பறத்தலுக்கு தயாராகி விடுவேன்
என் காயங்களில்
பொறுத்திருந்த உனக்கு
என் மீண்டு வருதலில்
ஏராளம் வருத்தம் !
இப்போதும் அழைக்கிறாய்
கூட்டினை தயார் செய்திருப்பதாய்
என் வானம் நீ பறக்கும்
திசைக்கு எதிர்த்திசையில் !!